உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட, காயமடைந்த மற்றும் சொத்துகள் சேதமடைந்த மக்களுக்கு 295 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை (29 கோடியே 54 இலட்சத்து 99 ஆயிரத்து 69 ரூபா) இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக, இழப்பீட்டு அலுவலகத்தின் (The Office of Reparations) வருடாந்த அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
இதற்கமைய உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களுக்கு 27 கோடியே 37 இலட்சத்து 47ஆயிரம் ரூபாவும் சேதமடைந்த சொத்துகளுக்காக 02 கோடியே 17 இலட்சத்து 52 ஆயிரத்து 69 ரூபாவும் நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.
வழங்கப்படும் இழப்பீடு, இறப்பு மற்றும் நிரந்தர அங்கவீனத்துக்கு 10 இலட்சம் ரூபாவும் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தற்காலிக மற்றும் நிரந்தர ஊனத்தின் சதவீதத்தின் அடிப்படையில் அதிகபட்சம் 500,000 ரூபாவும் அரசாங்கத்தின் தலைமை மதிப்பீட்டு அதிகாரியின் மதிப்பீட்டுக்கமைய சேதமடைந்த சொத்துகளுக்கு அதிகபட்சம் 50,00,000 வரையான தொகையும் வழங்கப்படும். இதன்படி உயிரிழந்த மற்றும் காயமடைந்த 719 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.