பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிராக முதலாளிமார் வழக்குத் தாக்கல் செய்வார்களாயின், தொழிலாளர்கள் சார்பாக வழக்குக்கு தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்பு வழங்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
முதலாளிமார் தொடரவுள்ள வழக்குத் தொடர்பாக தொழிலாளர்கள் தரப்பில் உண்மைகளை முன்வைப்பதற்கு தேவையான சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட உதவிகளை வழங்குமாறு தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
கொட்டகலையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததுடன், சம்பளம் எவ்வாறு அதிகரிக்கப்படுமென்பதை அமைச்சர் மனுஷ நாணயக்கார விளக்கினார். அன்றையதினம் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பை தொழில் ஆணையாளர் நாயகம் வெளியிட்டார்.
இந்நிலையில் தோட்ட நிறுவனங்களுடன் எவ்வித கலந்துரையாடலும் செய்யாமல் உரிய சம்பள அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
எனினும் முதலாளிமார் சம்மேளனம் அதனை செலுத்துவதற்கான உடன்பாட்டை எட்டும் சந்தர்ப்பங்களை தவிர்த்து வந்ததாகவும், அரசாங்கம் தெரிவித்துள்ளது.