Home » காணி உறுதி வழங்கலில் அரசு புரட்சிகர நடவடிக்கை
மகாவலி அதிகார சபையினால் 204,002 காணி உறுதிகள் தயாரிப்பு

காணி உறுதி வழங்கலில் அரசு புரட்சிகர நடவடிக்கை

மே மாத இறுதியில் 20,178 நிரந்தர காணி உறுதிகள்

by Damith Pushpika
May 5, 2024 7:15 am 0 comment
  • மே மாத இறுதியில் 20,178 நிரந்தர காணி உறுதிகள்
  • ‘உறுமய’ காணி உறுதி வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி

நாட்டு மக்களுக்கு காணி உறுதிகளை வழங்க அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டம் புரட்சிகரமானதாகும் எனவும் இதுவரையில் உலகின் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறானதொரு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பொலன்னறுவை மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று (04) நடைபெற்ற மகாவலி குடியிருப்பாளர்களுக்கு ‘உறுமய’ வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிகள் வழங்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார். நாட்டில் கட்டியெழுப்பப்படும் பொருளாதாரத்தின் பலன்களை ஒரு பகுதியினர் மாத்திரம் அனுபவிக்காமல் ஏனைய தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலேயே குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக நிரந்த காணி உரிமைகளை வழங்குவதற்கான புரட்சிகர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த காணி உறுதிகளுடன் அரசாங்கம் செயற்படுத்தும் விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்துடன் இணைந்துகொண்டு பொருளாதாரத்தை பலப்படுத்த மக்கள் முன்வர வேண்டுமென கோரிக்கை விடுத்த ஜனாதிபதி, பொலன்னறுவையை நாட்டின் பிரதான ஏற்றுமதி மாவட்டமாக மாற்றியமைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

அனைவராலும் வேண்டாமென வெறுத்து ஒதுக்கப்பட்ட அரசாங்கத்தை பொறுப்பேற்று குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த தன்னால் முடிந்ததென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அடுத்த இரண்டு, மூன்று வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி இளைஞர்களுக்கு வலுவான எதிர்காலத்தை நிர்மாணிக்க ஒன்றுபடுமாறும் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். மகாவலி அதிகார சபையினால் 204,002 நிரந்தர காணி உறுதிகளை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, அனைத்து வலயங்களிலும் நிரந்தர காணி உறுதிகளை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி மே மாத இறுதியில் 20,178 நிரந்தர காணி உறுதிகள் மகாவலி குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

அதன்படி அடையாள ரீதியாக 1,340 காணி உறுதிகள் பொலன்னறுவை மாவட்டத்தின் பீ, சீ வலயங்கள், மெதிரிகிரிய, மொரகாகந்த உள்ளிட்ட மகாவலி வலய குடியிருப்பாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன்போது 30 காணி உறுதிகள் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

“‘உறுமய’ திட்டத்தின் கீழ் அந்தக் காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்படும். அதன் பின்னர் நீங்கள் எவருக்கும் அடிபணிய வேண்டியதில்லை. உங்களுக்கு கிடைக்கும் நிரந்தர காணி உரிமையை இரத்துச் செய்யவும் அதிகாரம் இல்லை.

நாம் அனைவரும் கடந்த மூன்று வருடங்களில் பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தோம். நாட்டின் பொருளாதாரத்தை போலவே நமது பொருளாதாரமும் சரிவடைந்தது.

கைகளில் பணம் இருக்கவில்லை. அனைவரும் கஷ்டங்களுடன் வாழ்ந்தனர். தற்போது பொருளாதார நெருக்கடிகளுக்கு நாம் படிப்படியாக தீர்வு கண்டு வருகிறோம். இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு இந்த வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடிந்தது. தனியார் துறையிலும் பல நிறுவனங்கள் சம்பள அதிகரிப்பு செய்தன. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டின் வறிய மக்கள் முன்னேற்றங்களை நோக்கிச் சென்றனர். அதற்காக நாம் ‘அஸ்வெசும’ வேலைத்திட்டத்தை செயற்படுத்தினோம். அதற்காக உலக வங்கியின் உதவி கிடைத்ததோடு, சமுர்த்தியின் நன்மைகளை மூன்று மடங்காக அதிகரித்தோம். பயனாளிகள் எண்ணிக்கையும் 18 முதல் 24 இலட்சமாக அதிகரிக்கப்பட்டது.

குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு தமிழ், சிங்கள புத்தாண்டுக் காலத்தில் 10 கிலோ அரிசி பகிர்ந்தளிக்கப்பட்டது. இத்தோடு நாட்டில் வளர்ச்சி காணும் பொருளாதாரத்தின் நலன்களை ஒரு தரப்பினர் மாத்திரமே அனுபவித்தனர். அது ஏனைய தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும். அந்த நோக்கத்திலேயே தற்போது அரசாங்கம் அனைவருக்கும் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மக்களுக்கு காணி உறுதிகளை வழங்க அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டம் புரட்சிகரமானது. உலகின் வேறு எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான திட்டங்கள் செயற்படுத்தப்படவில்லை. நாம் மிகப்பெரிய புரட்சியை செய்திருக்கிறோம். விவசாயத்திற்காக மாத்திரமின்றி, வீட்டு உரிமைகளையும் வழங்கியிருக்கிறோம். மாடிக் குடியிருப்புகளில் வசிப்போருக்கும் வீட்டு உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதனாலேயே இந்த திட்டத்தை உலகின் புரட்சிகர திட்டமென கூறுகிறோம். இத்திட்டம் நாட்டு மக்களுக்கான விடுதலையாகும்.

காணி உறுதியை துரிதமாக தயாரிப்பது குறித்து அமைச்சரவையிலும் ஆலோசித்தோம். பிரதமர் இந்தப் பணிகளை பொறுப்பேற்றுள்ளார். அது தொடர்பில் தேடியறிந்து பணிகளை முன்னெடுக்குமாறு மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம். இந்த வேலைத்திட்டம் இரு மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படவுள்ளது. காணி ஆணையாளர் அலுவலகம், மகாவலி அமைச்சு, அளவையியல் திணைக்களம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இந்தக் காணிகளை பெற்றுக்கொண்ட பின்னர் அரசாங்கத்தின் விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்துடன் இணைந்துகொள்வது உங்களது பொறுப்பாகும். நாட்டின் பொருளாதாரத்தை நவீனமயப்படுத்தி போட்டித்தன்மை நிறைந்த ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division