வடக்கில் விவசாய போதனாசிரியர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும் | தினகரன் வாரமஞ்சரி

வடக்கில் விவசாய போதனாசிரியர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

கிளிநொச்சி குறூப் நிருபர்

வடக்கில் விவசாய போதனாசிரியர்களுக்கான வெற்றிடங்கள், ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சரின் அனுமதியுடன் விரைவில் நிரப்பப்படுமென விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் கிளிநொச்சியில் மக்கள் சந்திப்பொன்றை நடத்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இம் மக்கள் சந்திப்பு திருவையாறு பகுதியின் சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினர் இல்லத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,

விவசாய செய்கைகள் மேற்கொள்ளும்போது இங்குள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது, அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்

அத்தோடு விவசாய போதனாசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நீண்ட காலமாக காணப்படுகின்றன. இவ் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தென்னிலங்கையிலிருந்து பலர் நியமிக்கப்பட்டனர். இச் செயற்பாட்டிற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்து அதனைத் தடுத்திருந்தோம்.

இதன் பின்னர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமேலே காணப்படுகின்றது. வெற்றிடம் காரணமாக மாவட்டத்தின் விவசாயம் பாதிக்கும் என்பது உண்மை.

இவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அதன் பிரகாரம் விரைவில் இப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என தான் நம்புவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Comments