இலண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று 15ஆம் திகதி மாலை லண்டன் புறப்படுகிறார். நாளை 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறும் மாநாட்டு நிகழ்வுகளில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.
'பொது எதிர்காலத்தை நோக்கி' (Towards a common future) எனும் தொனிப்பொருளில் இம்முறை லண்டனில் நடைபெறும் மாநாட்டை எலிசபெத் மகாராணி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
பக்கிங்ஹோம்பெலஸ் என்றழைக்கப்படும் மகாராணியின் இல்லத்தில் இந்த மாநாட்டின் ஆரம்ப வைபவம் நடைபெறும். அதனைத்தொடர்ந்து வின்சர் மாளிகையிலும் நடைபெறும்.
2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை 23ஆவது பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் 50 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் 53 நாடுகள் இருந்தபோதும் இலங்கைக்கு 50 நாடுகளே வருகை தந்திருந்தன.
எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை லண்டனில் நடைபெறும் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.