பட்டதாரிகளின் பிரச்சினையில் ஆட்சியாளர் இழைத்த தவறு | தினகரன் வாரமஞ்சரி

பட்டதாரிகளின் பிரச்சினையில் ஆட்சியாளர் இழைத்த தவறு

கிழக்கின் சில பிரதேசங்களில் பட்டதாரிகளின் போராட்டம் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அரசாங்கம் தங்களுக்கு தொழில் வழங்க வேண்டுமெனக் கோரி இவர்கள் சாத்வீகமான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இப்பட்டதாரிகளில் அநேகமானோர் வெளிவாரி முறையில் பட்டம் பெற்றவர்களாவர். ஆண்களும் பெண்களும் இவர்களில் அடங்குகின்றனர். திருமணம் செய்து, மாணவப் பருவத்தில் பிள்ளைகள் உள்ளோரும் இப்பட்டதாரிகளில் உள்ளனர். இப்பட்டதாரிகளின் போராட்டத்துக்கு ஆரம்பத்தில் ஊடகங்கள் முன்னுரிமை வழங்கியிருந்தன. அரசியல்வாதிகளும் போராட்டக் களத்துக்கு நேரில் வந்து பட்டதாரிகளுடன் உரையாடி விட்டுச் சென்றனர். இப்போது அவர்களது போராட்டம் முக்கியத்துவத்தை இழந்து விட்டது போலத் தோன்றுகின்றது. அரசியல்வாதிகளும் வருவதில்லை ஊடகங்களையும் அங்கே காண முடிவதில்லை.

கிழக்கு மாகாண சபையோ அல்லது மத்திய அரசாங்கமோ பட்டதாரிகள் தொழில்வாய்ப்பு விடயத்தை உரியபடி கவனத்தில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. பட்டதாரிகளுக்கு இதுவரை எந்தவொரு உறுதிமொழியுமே வழங்கப்படாததால் இவர்களது தொழில் வாய்ப்பு விடயத்தில் சிக்கல்கள் இருப்பது தெரிகிறது.

கிழக்கில் மாத்திரமன்றி நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் உள்ள பட்டதாரிகள் அனைவருக்கும் தொழில் வாய்ப்பு வழங்குவதென்பது மத்திய அரசாங்கத்துக்கோ அல்லது மாகாண சபைகளுக்கோ இலகுவான காரியமல்ல. இதற்கான முதற் காரணம் நிதிப்பற்றாக்குறையாகும்.

மற்றைய காரணம் பட்டதாரிகளின் அதிகரித்த தொகைக்கு ஏற்ப பதவி வெற்றிடங்கள் அரச திணைக்களங்களில் இப்போது இல்லை. எனவேதான் அரசும், மாகாண சபைகளும் இவ்விடயத்தில் கையறு நிலையில் நிற்கின்றன.

நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு, கிழக்கில் பட்டதாரிகளின் தொகை மிகவும் அதிகமாகும். மூன்று தசாப்த காலத்துக்கு முன்னர் அங்குள்ள கிராமங்கள் ஒவ்வொன்றிலும் விரல்விட்டு எண்ணும்படியாக ஒருசில பட்டதாரிகளே காணப்பட்டார்கள். அவர்களில் வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகளை எங்குமே காண முடியாது. பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியதும், ஏதோவொரு அரசாங்கத் தொழில் அவர்களுக்கெனத் தயாராக இருந்தது. அன்றைய காலத்தில் பட்டதாரிகளுக்கான உடனடி தொழில் வாய்ப்பாக ஆசிரியத் தொழிலே காணப்பட்டது.

இன்றைய நிலைமை அவ்வாறில்லை.

ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரிகள் உள்ளனர். சில குடும்பங்களில் பட்டம் பெற்ற நிலையில் இரண்டு மூன்று பேர் உள்ளனர். பட்டம் பெற்று பல வருடங்கள் கடந்து விட்ட போதிலும் இன்னுமே தொழில் வாய்ப்புக் கிடைக்காதோரே அவர்களில் அநேகம்.

இதற்கான காரணமாக பட்டதாரிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதைக் கூறலாம். க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைவோரில் சொற்ப வீதத்தினரே பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுகின்றனர்.

க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த பல்கலைக்கழகத்துக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பை இழந்து விடுவோர் தமது குறிக்கோளை அத்துடன் விட்டுவிடுவதில்லை. பல்கலைக்கழகத்தினுள் பிரவேசிக்கும் வாய்ப்புக் கிடைக்காத போதிலும், வெளிவாரி முறையில் பட்டம் பெற்றுக் கொள்வதற்கு எமது நாட்டில் வாய்ப்பு உள்ளது.

வெளிவாரி முறையில் கற்கின்ற மாணவர்களுக்கும் பல்கலைக்கழகமே இறுதியில் பட்டச் சான்றிதழை வழங்குகின்றது. உள்வாரிப் பட்டச் சான்றிதழும், வெளிவாரிப்பட்டச் சான்றிதழும் சமமாகவே நோக்கப்படுகின்றன. இவ்வாறான வெளிவாரி பட்டப்படிப்பானது இலங்கை மாணவர்களுக்கு சிறந்ததொரு வாய்ப்பாக அமைகின்றது. அதேவேளை வருடம் தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றுக் கொள்வதற்கும் வழியேற்படுகின்றது. பட்டதாரிகளின் தொகை நாட்டில் வேகமாக அதிகரித்து வருவதற்கான காரணமும் அதுவேயாகும். பட்டதாரிகளில் இங்கு குறிப்பிட்டுக் கூறுவதனால் கலைப்பட்டதாரிகளின் எண்ணிக்கையே மிகவும் அதிகம்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் அரசாங்கத் தொழில் வாய்ப்புக் கோரி கிழக்கில் பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்குள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் காணப்படுகின்ற பல்லாயிரம் பட்டதாரிகளுக்கும் அரசாங்கம் எவ்வாறு தொழில் வாய்ப்பை வழங்கப் போகின்றது? வேதனம் வழங்குவதற்கான நிதிப்பற்றாக் குறைக்கு மத்தியில் இப்பட்டதாரிகளின் வேண்டுகோளுக்கு அரசாங்கம் முன்வைக்கப் போகும் தீர்வு என்ன?

இவ்வினாக்களுக்கான விடைகள் எவையென்று இதுவரை புரியாதிருக்கின்றது. ஆனாலும் இப்பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றனர்.

பட்டதாரிகளைப் பொறுத்தவரை அநேகர் ஆசிரியத் தொழிலையே விரும்புவதுண்டு. கிழக்கில் உள்ள இன்றைய ஆசிரிய வெற்றிடங்களை எடுத்துக் கொண்டால் விஞ்ஞான பாட ஆசிரியர்களுக்கான இடங்களே கூடுதலாக உள்ளதாக மாகாண சபை வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனாலும் பட்டதாரிகளில் விஞ்ஞானப் பட்டதாரிகள் சொற்பமாகவே உள்ளனர். அதேசமயம் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றாதவாறு தங்களுக்கு நியமனங்களை வழங்குமாறு பட்டதாரிகள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது. எனவே இப்பிரச்சினையானது சிக்கல் நிறைந்ததாகவே தெரிகின்றது.

பட்டதாரிகள் இன்று எதிர்நோக்குகின்ற தொழிலில்லாப் பிரச்சினைக்கு இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்களையே குறை கூற வேண்டியுள்ளது. பாடசாலைக் கல்விக்கு அப்பால் பல்கலைக்கழகக் கல்வி என்பதே நாட்டின் நியதியாக இருந்து வருகின்றது. பாடசாலைக் கல்வியை முடித்த மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புக்குப் பொருத்தமான கல்வி வாய்ப்பை வழங்கத் தவறியமை கடந்த அரசாங்கங்கள் இழைத்த தவறு ஆகும். நாட்டிலுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் காணப்படுகின்ற கற்கைநெறிகளை எடுத்துக் கொள்வோமானால், இன்றைய நவீன உலகுக்கு ஏற்றபடியான கற்கைநெறிகள் அங்கே குறைவாகும்.

பாடசாலைக் கல்விக்குப் பின்னர் இன்றைய உலகுக்குத் தேவையான விதத்தில் தொழில்சார் கற்கைநெறிகளையும், அதற்குரிய தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்தத் தவறியமை கடந்த கால அரசுகள் இழைத்த குற்றமாகும். அவ்வாறு இருந்திருப்பின் பட்டதாரிகள் இன்று தொழில் கோரிப் போராடும் நிலைமை ஏற்பட்டிருக்காது.

மறுபுறத்தில் நோக்குமிடத்து அரசாங்கத்தின் தொழில் வாய்ப்புகளோ அல்லது தனியார் தொழில் வாய்ப்புகளோ கொழும்பு நகரை மையப்படுத்தியதாகவே உள்ளன.

கொழும்பையும் புறநகரையும் மையப்படுத்தி அமைக்கப்பட்ட தொழில் பேட்டைகள் வடக்கு, கிழக்கிலும் அமைக்கப்பட்டிருக்குமானால் அங்குள்ள பட்டதாரிகளில் அநேகமானோர் தொழில்வாய்ப்பைப் பெற்றிருக்க முடியும். இவை எதிலுமே இலங்கையின் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை.

கடந்த காலத்தில் இலங்கையின் அரசியலில் நடந்ததெல்லாம் அதிகாரத்துக்கான போராட்டங்களும், சொத்துக்களைக் குவிக்கும் ஊழல் மோசடிகளுமேயாகும். அரசியல்வாதிகள் தங்களை உயர்த்திக் கொண்டதுடன், தங்களது உறவினர்களையும் கவனித்துக் கொண்டார்கள். ஆனால் இளைஞர்களைப் பற்றிச் சிந்திக்க மறந்து விட்டனர். 

Comments