மறைந்த ஆயருக்கு அஞ்சலி செலுத்த வடக்கு, கிழக்கில் நாளை துக்கதினமாக அனுஷ்டிப்பு | தினகரன் வாரமஞ்சரி

மறைந்த ஆயருக்கு அஞ்சலி செலுத்த வடக்கு, கிழக்கில் நாளை துக்கதினமாக அனுஷ்டிப்பு

மன்னார் மாவட்டத்தின் ஓய்வுநிலை பேராயர் இராயப்பு ஜோசப் காலமானதையடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை திங்கட்கிழமை தமிழ்த் தேசிய துக்க தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதனை வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 'பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம், வடக்கு- கிழக்கு சிவில் சமூக சம்மேளனம், வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, மட்டக்களப்பு பல் சமயங்களின் ஒன்றியம், முதியோர் சம்மேளனம் மட்டக்களப்பு, மட்டக்களப்பு வெண்மயில் அமைப்பு, மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன், மட்டக்களப்பு சடோ லங்கா நிறுவனம், அரச சாரா தொண்டு நிறுவனங்களின் இணையம், மட்டக்களப்பு தமிழர் நலன் காப்பகம், யாழ். சிவகுரு ஆதீனம், மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு, திருகோணமலை புழுதி சமூக உரிமைக்கான அமைப்பு, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு, உலக தமிழர் மாணவர் ஒன்றியம், திருகோணமலை இராவண சேனை, யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் மற்றும் தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் இணைந்து இதனை அறிவித்துள்ளன.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் வண. பிதா இராயப்பு ஜோசப் ஆண்டகை இயற்கை எய்திய செய்தி, தமிழர் தேசத்தை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

ஆயரின் இழப்பு, தமிழர் தேசத்திற்கு அளவிட முடியாத ஒரு பேரிழப்பாகும்.

அவரின் இழப்பால் தமிழ்த் தேசியம் ஒரு சிறந்த தலைவனை இழந்து நிற்கின்றது.

தமிழரின் உரிமைக்காக மதங்களை கடந்து தேசியத்தின் பால் ஓங்கி ஒலித்த குரலை தமிழர் தேசம் இன்று இழந்து நிற்கின்றது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் மெளனிக்கபட்ட பின் தமிழர் தேசம் திக்கற்றவர்களாக நின்ற நேரம் அவர்களுக்கு நம்பிக்கை ஒளியாக விளங்கியவர்.

தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கையை பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் பொது வெளியிலும் சர்வதேசத்திலும் அறுதியிட்டு தெரிவித்தவர்.

பாதிக்கப்பட்ட தமிழினத்தின் நீதிக் குரலாக, சாட்சியாக இருந்த மிகப்பெரும் ஆளுமையை நாம் இன்று இழந்துநிற்கின்றோம்.

ஆண்டகையின் மறைவையொட்டி அவரால் தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் இறுதி வணக்க நிகழ்வு வரை வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தேசம் எங்கும் துக்க தினங்களாகவும், நாளை திங்கட்கிழமை (05) தமிழ்த் தேசிய துக்க தினமாகவும் பிரகடனபடுத்தப் படுத்துகின்றோம்.

அதே நாளில் தமிழகம் மற்றும் புலம்பெயர்தேசம் எங்கும் வாழும் தமிழ் மக்களும் கறுப்புப்பட்டி அணிந்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அந்த அறிக்ைகயில் தெரிவித்துள்ளன.

நமது நிருபர்

Comments