பிரபாகரனிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள் | தினகரன் வாரமஞ்சரி

பிரபாகரனிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்

ஆட்சி செய்ய முடியாது எனக் கூறியவர்கள் இன்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கின்றனர். 2015இல் இருந்த அரசாங்கத்திற்கு ஆட்சி செய்ய மேலும் கால அவகாசம் இருந்தது. ஏன் அவர்கள் அதனைச் செய்யவில்லை. அவர்கள் அவ்வாறு செய்தாலும், நாம் அவ்வாறு செய்யப்போவதில்லை எனப் பெருந்தெருக்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 

நாவலப்பிட்டி பகுதியில் வசிக்கும் பல ஆண்டுகள் காணி உறுதி பத்திரம் இல்லாமல் இருந்த சுமார் 1200பேருக்கு ரன் பிம எனும் காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு 13.07.2019அன்று நாவலப்பிட்டி பவ்வாகம பகுதியில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இந் நிகழ்வின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க, திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன, நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும்   உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

 2015ஆம் ஆண்டு இருந்த அரசாங்கத்திற்கு எதிராக 2012, 2013, 2014ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையில் மூன்று பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. அந்த பிரேரணைகள் மூன்றையும் அரசாங்கம் செயல்படுத்தவில்லை. 

அதற்கமைய 2015ம் ஆண்டு மீண்டும் அரசாங்கம் ஆட்சி அமைத்திருந்தால் அந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பொருளாதாரத் தடை வந்திருக்கும். அதற்கு முகங்கொடுக்க முடியாமையால் இரண்டு வருடங்கள் எஞ்சியிருந்த நிலையில், அவசர அவசரமாக தேர்தலுக்குச் சென்றனர். அவ்வாறு சென்றவர்கள். இன்று ஆட்சியைபிடிக்க முயல்கின்றனர். அது முடியாத காரியம். அதற்காக அவர்கள் பலபோராட்டங்களையும் நடத்துகின்றனர். 

முன்பு விஜேராஜசிங்க மன்னன் பெளத்தத்தை தழுவிய இலங்கையின் முதலாவது தமிழ் அரசனாக கருதப்பட்டார். அதேபோல் மடு தேவாலயத்தை அமைக்க இடம்பெற்றுக் 

கொடுத்தவர் கண்டி அரசர் ஒருவர்.இவற்றை மறந்து இன்று இனவாதத்தை தூண்ட எதிர்க் கட்சியினர் முயற்சிக்கின்றனர். 

இவர்களுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் அன்று பாராளுமன்றத்தில் நடத்து கொண்டதைப் போன்று சண்டையிட்டு, சொத்துகளுக்குச் சேதம் விளைவித்து தம்மப்பத, பைபில் ஆகிய புனித நூல்களை வீசி ஏறிந்து கலகம் செய்தனர். 

அதேபோன்று தான் அவர்களின் ஆட்சியும் அமையும். பிரபாகரனும், பாராளுமன்றத்தில் நடந்து கொண்டதை போன்று செயற்படவில்லை. பிரபாகரனை பிரதிநிதித்துவப்படுத்திய 

பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இருந்த போதும் அவர்களும் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. எனவே, அவர்கள் போன்று மஹிந்த அணியினர் நடந்துகொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கை கண்டிய மன்னர்களின் கொள்கையாகும். அதாவது சிறுபான்மை இனத்தையும் சமநிலையில் நடத்த வேண்டும் என்பதே எமது கொள்கை. அதனூடாகவே நாடு முன்நோக்கி பயணிக்கும் என்றார். 

ஹற்றன் சுழற்சி நிருபர் 

Comments