யார் இந்த கேர்ணல் ரட்ணப்பிரிய பண்டு? | தினகரன் வாரமஞ்சரி

யார் இந்த கேர்ணல் ரட்ணப்பிரிய பண்டு?

எந்தஇராணுவத்தின் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டதோ, எந்த இராணுவம் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது என குற்றச்சாட்டப்படுகின்றதோ, எந்த இராணுவத்தினரால் தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என விரல் நீட்டப்படுகிறதோ அதே இராணுவத்தின் கேர்ணல் அதிகாரியான கேர்ணல் ரட்ணப்பிரிய பண்டு இடமாற்றம் பெற்றுச் செல்லும் போது ஏன் இவ்வாறு ஒரு பிரியாவிடை?! அப்படி அவர் என்ன செய்தார்? ஏன் முன்னாள் போராளிகள் அவரை தூக்கிச் சென்றனர்? பெண்கள் ஏன் கதறி அழுது விடைகொடுத்தார்கள்? போன்ற பல கேள்விகள் எழுவதோடு வாதப்பிரதிவாதங்களும் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

யார் இந்த கேர்ணல் ரட்ணபிரிய பண்டு? அவர் என்னதான் செய்தார்?

1971 ஆம் ஆண்டு மாத்தளையில் பிறந்த ரட்ணப்பிரிய தனது ஜந்தாம் ஆண்டு வரையான ஆரம்ப கல்வியை ஹலேவெல வித்தியாலயத்திலும், க.பொ.த. உயர்தரம் வரை மாத்தளை சென்.தோமஸ் கல்லூரியிலும் கல்வி கற்றுள்ளார். பின்னர் 1990 இல் இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட ரட்ணப்பிரிய 2012 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 13 ஆம் திகதி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் இணைந்து கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கின்றார். அன்று முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை வன்னியில் தனது பணிகளை மேற்கொண்டிருந்தார்.

இந்தக் காலப்பகுதியில்தான் ரட்ணப்பிரிய முன்னாள் போராளிகள், உட்பட பொதுமக்களின் மனங்களை வென்றெடுக்கும் வகையில் தனது பணிகளை மேற்கொண்டிருக்கின்றார். சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் 3500 பேர் பணியாற்றுகின்றனர், இதில் 261 முன் பள்ளிகளை சேர்ந்த 530 முன்பள்ளி ஆசிரியர்களும் இருக்கின்றனர். இதனைத் தவிர முன்னாள் போராளிகள் உட்பட 15000 பேர் வரை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்குள் இணைந்துகொள்வதற்காக விண்ணப்பங்களை வழங்கிவிட்டு காத்திருக்கின்றனர். இது ஒரு புறமிருக்க

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஊடக சந்திப்பு ஒன்றுக்காக ஒரு நாள் நாம் விசுவமடுவில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு இணைந்த கட்டளை பணியகத்திற்கு சென்றிருந்தோம், அப்போதுதான் முதல் முதலாக கேர்ணல் ரட்ணப்பிரிய பண்டுவை நேரில் சந்தித்தோம். சில நிமிடங்கள் உரையாடலின் பின் சொன்னார், என்னிடம் ஒரு கைதுப்பாக்கியும் இல்லை, எனது அலுவலகத்திலும் எந்தவொரு ஆயுதத்தையும் காணமாட்டீர்கள். ஆனால், என்னுடன் இருபத்து நான்கு மணிநேரமும் இருப்பவர்கள் முன்னாள் போராளிகள் என்றார்.

தொடர்ந்தும் அவர் சொன்னார்,யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் அதில் இடம்பெற்ற சரிபிழைகளை நான் ஆராயவோ, விமர்சனம் செய்யவோ வரவில்லை, என்னுடைய பணி இப்போது என்னை நம்பி வந்துள்ள முன்னாள் போராளிகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் முன்னேற்றத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதே. நிற்க கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணியாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவருக்கான பிரியாவிடை நிகழ்வில் கேர்ணல் ரட்ணபிரியவை சந்தித்தேன் அப்போது, அவர் சொன்னார் நான் என்னுடைய மக்களை மிஸ் பண்ணுகிறேன் (i miss my people) என்றார். எனவே, நான் எண்ணுகிறேன் இதுதான் கேர்ணல் ரட்ணபிரியவின் பிரியாவிடையின் போது அவரின் கழுத்தை மறைத்து நிரம்பி வழிந்த மாலைகளும், அவரை நனைத்த கண்ணீரும். அவரை தங்களின் தோளில் சுமந்து வந்து வழியனுப்பிய முன்னாள் போராளிகளும். மனிதநேயம் எங்கே இருக்கிறதோ அங்கே மனிதர்களும் இருப்பார்கள். யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் எல்லாவற்றையும் இழந்து மீள்குடியேறிய மக்கள் பல்வேறு இன்னல்களுக்குள் காணப்பட்டனர். பொருளாதார நெருக்கடி அவர்களை மேலும் துன்பத்திற்குள் உட்படுத்தியது. குறிப்பாக புனர்வாழ்வு பெற்று வெளியேறிய முன்னாள் போராளிகள் தொழில் வாய்ப்பின்றி தவித்தனர். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய அளவுக்கு எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் வன்னியில் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதில் சென்று பலர் தங்களை இணைத்துக் கொண்டனர். இதில் பெரும்பாலானவர்கள் முன்னாள் போராளிகள். ஆரம்பத்தில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் இணைத்துக்கொள்ளப்படுகின்ற போது, தமிழ்த் தேசிய அரசியல் தரப்பினர்கள் தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். இதற்கு அஞ்சியும் அவர்களின் அவதூறுகளுக்கு முகம் கொடுக்க முடியாதும் பலர் விருப்பம் இருந்தும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் இணைந்துகொள்ளவில்லை.

அவ்வாறு இணைந்து கொள்ளாதவர்கள் பின்னாளில் இணைந்து கொள்வதற்கான விருப்பத்தினை தெரிவித்து, விண்ணப்பங்களை வழங்கிவிட்டு காத்திருப்பதோடு கிளிநொச்சி இரணைமடு சிவில் பாதுகாப்புத் திணைக்கள மாவட்ட அலுவலகம் முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

அந்தளவுக்கு அவர்களின் பொருளாதார நெருக்கடிகள் காணப்பட்டன.

இவை ஒரு புறமிருக்க, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் இணைத்து கொள்ளப்பட்டவர்கள் முப்பதாயிரம் ரூபாவுக்கு மேலும் வேதனம் பெறுகின்ற நிரந்தர அரச தொழில் ஒன்றை பெற்றுகொண்டனர். இதன் பின்னர் இவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுகிறது.

இதுவரை காலமும் ஆயிரம் ரூபா கூட கடனாக இவர்களை நம்பி கொடுக்க முன் வராத தனிநபர்கள் வங்கிகள் என போட்டி போட்டுக்கொண்டு மில்லியன் கணக்கில் கடன்களை வழங்க முன் வந்தனர். வங்கிகள் பத்து இலட்சம், பதினைந்து இலட்சம் வரை கடன்களை வழங்கியது. இதனால் இவர்களின் குடும்ப பொருளாதாரம் மாற்றம் பெற்றது.

ஒரு ஏழை முன்பள்ளி ஆசிரியர் சொன்னார் மாதம் மூவாயிரம் ரூபா சம்பளத்திற்கு முன்பள்ளிகளில் படிப்பித்த எங்களுக்கு தற்போது முப்பதாயிரம் ரூபா கிடைக்கிறது. மோட்டார் சைக்கிளில் செல்கின்ற வசதி படைந்த பெண்களை ஏக்கத்தோடு பார்க்கின்ற நிலைமை மாறி, இப்போது நாங்களும் ஒவ்வொரு மோட்டார் சைக்கிள் வைத்திருகின்றோம். எங்களது பிள்ளைகளும் மூன்று வேளை விரும்பிய உணவை உட்கொள்கின்றார்கள், எங்களுடைய பிள்ளைகளின் கல்விக்கும் போதுமான அளவு செலவு செய்கின்றோம்.

எனவே, இந்த நிலைமைக்கு எல்லாம் சிவில் பாதுகாப்புத் திணைக்களமே காரணம். அதற்கு காரணம் எங்களது பொறுப்பதிகாரி ரட்ணபிரிய சேர் என்றார்.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணியாற்றுகின்ற ஒரு முன்னாள் போராளி தாங்கள் ஏன் ரட்ணப்பிரியவுக்காக கண்ணீர் சிந்தினோம் என்பதற்கான காரணத்தை பின்வருமாறு பதிவேற்றியிருந்தார்

போரால் பாதிக்கப்பட்டு குருடாகி, செவிடாகி கையிழந்து காலிழந்து உடல் முழுதும் சன்னங்கள் நிறைந்து வலுவிழந்து வாழ்வில் நம்பிக்கையிழந்து நின்றோருக்கும் வேலை கொடுத்த மகான் இவர். வலயக்கல்வி பணிமனையின் கீழ் மாதாந்தம் 3000 ரூபா வேதனம் பெற்றுவந்த முன்பள்ளி ஆசிரியர்களை 30,000 ரூபாவுக்கு மேல் வேதனம் பெறவைத்தார். அத்துடன், முன்பள்ளிகளின் கல்வி கட்டடம், தளபாடம் என்பனவற்றின் தரங்களையும் உயர்த்தினார். பணியாளர்களை அவரவர் இயலுமைக்கேற்ப விவசாயம், கைப்பணி,தையல், ஒட்டுதல், மேசன் வேலை, தச்சு வேலை போன்ற மேலும் பல துறைகளில் நெறிப்படுத்தினார்.

இராணுவத்திடம் இருந்து பலநூறு ஏக்கர் காணிகளை திணைக்களத்திற்கு பெற்று தந்து நாம் விவசாயம் செய்ய வழிசெய்தார். வடபகுதி பணியாளர்கள் தென்பகுதி செல்லாமல் வடபகுதியிலே திணைக்கள பயிற்சியினை முடிப்பதற்கு வழிசமைத்தார். திணைக்களத்திற்கு அப்பால் பல பொதுமக்கள் பிரமுகர்கள் போன்றோருடன் நல்ல உறவுகளை கொண்டிருந்தார்.

அரசியல் நெருக்கடிகள் நிர்வாக சிக்கல்கள் என எண்ணிலடங்கா பிரச்சினைகளிற்கு முகம்கொடுத்து எம்மையெல்லாம் அன்புடன் ஆதரித்த அதிகாரி இடமாற்றம் பெற்று மீண்டும் இராணுவத்திற்கு செல்கிறார்.

பணியாளர்கள் ஒவ்வெருவரையும் தனித்தனியே நிலையறிந்து உதவிகள் பல செய்து தாயாய், தந்தையாய், அண்ணனாய், நண்பனாய் எம் மனங்களில் உயர்ந்திட்டார்.

நாம் தமிழராய் எதிரியாய் 30 வருடங்களுக்கு மேலாக இருந்தும் எவ்வித வேற்றுமையும் இன்றி எம்மை அன்போடு அரவனைத்த உள்ளம் பிரியும் வேளை எவ்வாறு கண்ணீர் சிந்தாமல் இருப்பது. எனக் கூறினார். இது உண்மையும் கூட. ரட்ணப்பிரிய சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணியாற்றுகின்றவர்களை ஒரு குடும்பத்தை போலவே பார்த்துக்கொண்டதாக பலரும் தெரிவித்திருக்கின்றனர்.

பணியாளர்களின் குடும்பங்களில் இடம்பெறுகின்ற நல்லது கெட்டது நிகழ்வுகளில் பங்கெடுத்தல் அவரவர் குடும்ப நிலைமைகளுக்கு ஏற்ப உதவுதல், தட்டிக்கொடுத்தல் போன்ற மனங்களை வெல்லக்கூடிய செயற்பாடுகளை ரட்ணப்பிரிய மேற்கொண்டிருக்கின்றார். இதனைத் தவிர சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணியாற்றுகின்ற ஒரு பணியாளர் மாதம் ஒன்பதாயிரம் ரூபாவை திணைக்களத்திற்கு செலுத்திவிட்டு வெளியில் சென்று வேறு பணிகளிலும் ஈடுப்படலாம். இதனை அவர்கள் எந்த அடிப்படையில் மேற்கொண்டார்கள் எனத் தெரியவில்லை. மாதம் முப்பதாயிரம் ரூபா சம்பளம் பெறும் ஒரு சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணியாளர் ஒருவர் ஒன்பதாயிரம் ரூபாவை செலுத்திவிட்டு வெளியில் நாளாந்த கூலித் தொழில் ஒன்று சென்றால் அவருக்கு இரண்டு வருமானங்கள் கிடைக்கிறது.

இது மாதிரி சலுகைகளை ரட்ணப்பிரிய ஏற்படுத்தி கொடுத்திருந்தார். இதனைத்தவிர அவ்வவ்போது சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் இடம்பெறுகின்ற விழாக்கள்,கொண்டாட்டங்கள் மற்றும் வருட இறுதி விருந்துபசாரங்கள் என்பன ரட்ணப்பிரியவுக்கும் பணியாளர்களுக்கும் இடையேயான நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தியது.

இதனைத் தவிர திணைக்களத்திற்கு வெளியே அவர் மேற்கொண்ட கல்வி, வாழ்வாதாரம் உள்ளிட்ட மனிதநேயப் பணிகள் திணைக்களத்திற்கு வெளியேயும் ரட்ணப்பிரியவுக்கு உறவை ஏற்படுத்தியது யுத்தத்திற்கு பின்னர் தமிழ் மக்களின் தலைவர்கள், அவர்களின் பிரதிநிதிகள் மக்களுக்கு செய்யாத ஒன்றை ஒரு இராணுவ கேர்ணல் செய்திருக்கின்றார்.

அதனால்தான் அவருக்கான இடமாற்றம் வந்த போது சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணியாற்றுகின்ற முன்னாள் போராளிகள் மற்றும் பணியாளர்கள் வடமாகாண ஆளுநரிடமும், கொழும்புக்கு சென்று அமைச்சர் மனோ கணேசனையும், சந்தித்து அவரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என்று கோரியதும், ஆர்ப்பாட்டங்கள் செய்ததும், காணப்படுகிறது.

இனமத மொழிக்கு அப்பால் கேர்ணல் ரட்ணப்பிரியவிடம் மனிதநேயம் காணப்பட்டுள்ளது.

அதனால்தான், அவரின் பிரியாவிடையின் போது மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

 

மு. தமிழ்ச்செல்வன்

 

 

Comments