Home » 2024ஆம் ஆண்டின் சுற்றுலாத்துறை வருமானம் 5 பில்லியன் டொலருக்கும் அதிகமாக இருக்கும்

2024ஆம் ஆண்டின் சுற்றுலாத்துறை வருமானம் 5 பில்லியன் டொலருக்கும் அதிகமாக இருக்கும்

by Damith Pushpika
May 5, 2024 6:00 am 0 comment

பொருளாதார மீட்சியை கருத்திற் கொண்டு விமான நிலைய சூப்பர் சீட்டிழுப்பினை அறிமுகப்படுத்தவும் பரிந்துரை
அடுத்த மூன்று மாதங்களில் பொருளாதாரம் தொடர்ந்து வலுவடையும்
ஏப்ரல் மாதத்தின் முதல் 28 நாட்களில் 132,152 சுற்றுலாப் பயணிகள் வருகை

சுற்றுலாத் துறையின் வலுவான வளர்ச்சியால், அதனால் கிடைக்கும் வருமானம் ஆண்டிறுதிக்குள் 5 பில்லியன் டொலர்களை தாண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.

“ஏப்ரல் 25 ஆம் திகதியன்றைய நிலவரப்படி, இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 757,000 ஐத் தாண்டியது, இது வெளிநாட்டு இருப்புக்களின் அதிகரிப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. ஆண்டு இறுதிக்குள் இந்தப் பெறுமதி 5 பில்லியன் டொலர்களை தாண்டும் திறன் பெற்றுள்ளது,” என்று அபிவிருத்தி லொத்தர் சபையின் தேசிய அபிவிருத்தி மாநாட்டில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உகந்த சூழலே சுற்றுலாத்துறையின் இந்த சாதகமான போக்குக்குக் காரணம் என்று சேமசிங்க கூறினார்.

2024ஆம் ஆண்டில், இலங்கை சுற்றுலாத்துறையானது 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து 4 பில்லியன் டொலர்களுக்கு மேல் வருமானத்தை ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் முதல் 28 நாட்களில், இலங்கை மொத்தமாக 132,152 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் (SLTDA) வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்தே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர்.

இந்த உத்வேகத்தைப் பயன்படுத்திக் கொண்டு, கொழும்பு விமான நிலைய சுப்பர் அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பினை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு இராஜாங்க அமைச்சர் முன்மொழிந்தார், இது சுற்றுலாப் பயணிகள் சூப்பர் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்கும் திட்டமாகும். “இந்த வகையான முன்முயற்சியானது பொருளாதார மீட்சிக்கான முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செலவு செய்யும் திறனை ஊக்குவிக்கும் தன்மை கொண்டுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

பொருளாதார மீட்சிக்கான நம்பிக்கையை வெளிப்படுத்திய இராஜாங்க அமைச்சர், பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான நாட்டின் திறன் பற்றிய சந்தேகங்கள் தற்போது மறைந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மூலம் நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வதில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சியை அங்கீகரித்த சேமசிங்க, தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் பங்குதாரர்களிடையேயான பரஸ்பர மரியாதையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

அடுத்த மூன்று மாதங்களில் பொருளாதாரத்தை தொடர்ந்து வலுப்படுத்துவது குறித்தும் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டார். நாடு நிலையான பொருளாதார மறுமலர்ச்சியை நோக்கி முன்னேறும் போது மக்களுக்கு உறுதியான நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அபி

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division