- முகவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படலாம்
- வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாது செல்லும் நபருக்கும் ஒரு இலட்சம் ரூபாவரை அபராதம்
வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளுக்காக அனுப்பப்படும் அனைத்து தொழிலாளர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் எடுக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு புறம்பாக தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் முகவர்களுக்கு 04 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுமென்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படலாமென்றும் பணியகம் தெரிவித்துள்ளது. அது மாத்திரமின்றி வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களும் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு அப்பால் செயற்படுவார்களாயின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. அவர்களுக்கு 100,000 ரூபாவரை அபராதம் விதிக்கப்படும் என்றும் பணியகம் அறிவித்துள்ளது. அவ்வாறு செல்லும் ஒரு தொழிலாளி விமான நிலையத்தைவிட்டு வெளியேறி வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
அவர் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்தில் (Boarding) செல்லுபடியாகும் விமானச்சீட்டை பெற்றுக்கொண்டார் என்பது மட்டுமே தண்டிக்கப்படுவதற்கு போதுமான சான்றாகும்.
2024ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான 1,371 முறைப்பாடுகள் தமது பணியகத்துக்கு கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அவற்றில் 495 முறைப்பாடுகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளதுடன் 53,509,520 ரூபாவை முறைப்பாட்டாளர்களுக்கு கிடைக்க பணியகம் ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன், 704 முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையங்கள் ஊடாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதும், பணியகத்தில் பதிவு செய்வதும் கட்டாயம் எனவும், எனவே பதிவு செய்வதற்கு 23,000 ரூபா கட்டணத்தை மட்டுமே செலுத்த வேண்டும் எனவும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வதற்கு முன் பணியகத்தில் பதிவு செய்பவர்களின் உயிருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், பணியகம் அதிகபட்சம் ஆறு இலட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்கும், முழுமையான ஊனம் ஏற்பட்டால், நான்கு இலட்சம் ரூபாவரை இழப்பீடாக பணியகம் வழங்கும்.
சில உடல் நிலை அல்லது துன்புறுத்தல் மற்றும் விபத்து காரணமாக இலங்கைக்கு வந்த விமான டிக்கெட்டுகளின் பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்பும் அதே காப்பீட்டுக்கு சொந்தமானது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஐம்பதாயிரம் ரூபாவை சிகிச்சைக்காக வழங்குமென்றும் முறையாக பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி தொழில் வாய்ப்புக்காக செல்லுமாறும் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.