Home » நோர்வூட் மண்ணின் டோனி கிரெக்

நோர்வூட் மண்ணின் டோனி கிரெக்

இலங்கை அணிக்கு தெரிவாவதே இலட்சியம் என்கிறார் டோனி கிரெக்

by Damith Pushpika
April 28, 2024 6:11 am 0 comment

டொனால்ட் பிராட்மேன் மற்றும் லாரி கோமஸ் ஆகியோர் களத்தில் நான்கு புறமும் பந்துகளை அடித்தனர். அடுத்ததாக ஸ்டீவ்வோ வரவுள்ளார். எத்தனை புள்ளிகளைப் பெற வேண்டும் என்பதைப் பற்றி நீங்கள் அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை. அணியில் வேகப்பந்து வீச்சாளராக டோனி கிரெக் இருப்பதால், கவலைப்பட ஒன்றுமில்லை. இவர்கள் ‘மென்பந்து’ கிரிக்கெட் வீரர்கள். அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள். அவர்களின் திறமைகளை தந்தை டொமினிக் ஜோசப்பே வெளிக்கொணர்ந்தார். ஒட்டுமொத்த கிராமத்தின் கிரிக்கெட் ஹீரோ அவர். தாய் லதா மங்கேஷ்கர் பின்னணியிலிருந்து ஊக்கம் அளிக்கிறார். பிராட்மேனின் மாமா முகேஷிடமிருந்தும் கணிசமான ஆதரவு கிடைத்தது. இது என்ன புதிர் என்று நீங்கள் எண்ணினால் ஆச்சரியமில்லை. பிராட்மேனும் ஸ்டீவ் வோவும் எப்போது ஒன்றாக கிரிக்கெட் விளையாடினார்கள் என்று நீங்கள் யோசிக்கிருக்கிறீர்களா? இது உண்மையே. மறுபுறம், மேற்கிந்திய அணியின் லெரி கோமஸ் சர்வதேச விளையாட்டில் நுழைந்தபோது, ​​டொனால்ட் பிராட்மேன் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்று 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தவிர, டோனி கிரெக் வேகப்பந்து வீச்சு பற்றி நீங்கள் கேள்விப்பட்டே இருக்க மாட்டீர்கள். அதுவும் மென்பந்து கிரிக்கெட் ..! அதுமட்டுமில்லாமல் லதா மங்கேஷ்கர் அவர்களின் அம்மாவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தியாவின் பாடகி என்பது அனைவருக்கும் தெரியும். இது மிகவும் ஆபூர்வமான கதை என்று நீங்கள் நினைப்பது சரிதான். ஆனால் இது ஒரு உண்மைக் கதை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில், லாரி கோமஸ், டொனால்ட் பிராட்மேன், ஸ்டீவ் வோ, டோனி கிரெக் மட்டுமல்ல, லதா மங்கேஷ்கரும் ஒரே கூரையின் கீழ் வாழ்கின்றனர். வேறு எங்குமல்ல. நோர்வூட் கிராமத்தில். ஆம்…! ஆம்…! ஹட்டன் நகரில் இருந்து டிக்கோயா வீதியில் 10 கிலோமீற்றர் தொலைவில் நோர்வூட் மலைக்கிராமத்தில். இந்தக் கதையை முதன்முதலில் கேட்டபோது எங்களுக்கு ஏற்பட்ட அதே ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் இப்போது நீங்கள் உணர வேண்டும்.நோர்வூட் கிராமத்தில் உள்ள சிறிய மைதானத்தில் மென்பந்து கிரிக்கெட் சாம்பியன்கள் உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களின் பெயரால் அழைக்கப்படுகிறார்கள், கிராமத்தில் உள்ளவர்களால் சூட்டப்பட்ட பெயர்கள் அல்ல. அவர்களின் உண்மையான பிறப்புச் சான்றிதழில் உள்ள பெயர்கள். கிராமத்து கிரிக்கெட் கேப்டனாக இருந்த இவர்களது தந்தை டொமினிக் ஜோசப்பால் அந்த பெயர்கள் வைக்கப்பட்டன. விளையாட்டின் மீது கொண்ட நாட்டம் காரணமாக தனது நான்கு மகன்களுக்கும் உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களின் பெயரை சூட்டினார். பெயரளவுக்கு சிறந்து விளங்காவிட்டாலும் கிரிக்கெட் விளையாட்டில் பிரவேசித்த இந்த நான்கு சகோதரர்களும் ஹட்டன் மாகாணத்தின் மென்பந்து விளையாட்டில் மிகவும் திறமையானவர்கள் என உலகப் புகழ் பெற்ற இந்த நான்கு மகன்களின் தந்தையார் எம்மிடம் தெரிவித்தார். அவர் தன் குழந்தைகளுக்கு தனக்குப் பிடித்த வீரர்களின் பெயரைச் சூட்டினர். மூத்த மகன் கோமஸுக்கு இப்போது 27 வயது. தற்போது சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இரண்டாவது மகன் பிராட்மேனுக்கு இப்போது 25 வயது. அவர் சமீபத்தில் கட்டாரில் இருந்து திரும்பினார். கிரிக்கெட்டை இன்னும் மறக்கவில்லை. மூன்றாமவர் ஸ்டீவ் வோவ், அவருக்கு இப்போது 23 வயது. இங்கு வேலை செய்கிறார். விடுமுறையில் வந்தால் மைதானத்திலேயே இருக்கிறார். ஆனால் இளைய மகன் டோனி கிரெக் அனைவரையும் விட மிகவும் திறமையானவர். அவர் என்றாவது ஒருநாள் இலங்கை அணிக்காக விளையாட வேண்டும் என்பதே அவரது ஒரே கனவு.’ என்று டொமினிக் கூறினார். இது உண்மையாகிவிட்டால், டோனி கிரெக் என்ற பெயரில் இரண்டு வீரர்கள் இரு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துவது இதுவே முதல் முறையாக இருக்கும்.’நான் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணிபுரிகிறேன். நானும் கிரிக்கெட் விளையாடுவேன். டொமினிக் கிரிக்கெட் பிளேயர் என்று சொன்னாலே ஹட்டன் மற்றும் நோர்வூட்டில் உள்ள அனைவருக்கும் என்னைத் தெரியும்.’ டொமினிக் தனது மகன்களுக்கு சர்வதேச வீரர்களின் பெயரை சூட்டினாலும் அவருக்கு பிடித்த வீரர் அர்ஜுன ரணதுங்க தான். ‘எனக்கு அர்ஜுன ரணதுங்கவை மிகவும் பிடிக்கும். அரவிந்த டி சில்வா மற்றும் முத்தையா முரளிதரனையும் பிடிக்கும். இந்தியாவில் மகேந்திர சிங் தோனியின் ஹெலிகொப்டர் ஷாட்டை டோனி கிரெக் பாராட்டியதைக் கேட்டு டோனி கிரெக்கின் பெயரை வைத்தேன். அப்போது என் மகன் ஒருநாள் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று நினைத்தேன்.டொமினிக்கின் நான்கு மகன்கள் மட்டும் அற்புதமான பெயர்களைக் கொண்டவர்கள் அல்ல. அவருடைய மனைவியின் பெயரும் அவ்வாறானதே. மனைவியின் தந்தைக்கு ஹிந்திப் பாடல்கள் மிகவும் பிடிக்கும். அதனால் தன் மகளுக்கு லதா மங்கேஷ்கர் என்று பெயர் வைத்தார். அது மட்டுமின்றி, லதாவுக்கு ஒரு தம்பியும் இருக்கிறார், அவர் பெயர் முகேஷ். இதுவும் அற்புதம். ஒரு காலத்தில் ஹிந்தி சினிமாவில் மிகவும் பிரபலமான பாடகராக இருந்தவர் முகேஷ். ஹிந்தி சினிமாவில் பிரபல பாடக, பாடகி களின் பெயரை வைத்திருக்கும் அக்காவும், தம்பியும் நோர்வூட் கிராமத்தில் வசிப்பவர்கள்.

நுவரெலியா மாவட்டம் மட்டுமன்றி மத்திய மாகாணத்திலும் டொமினிக் குடும்பத்தின் இளையவரான டோனி கிரெக்கின் வேகப்பந்து வீச்சு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 18 வயதாகும் டோனி கிரெக், மணிக்கு சுமார் 130 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.

‘நான் முதலில் படித்தது நோர்வூட் தமிழ்ப் பாடசாலையில்தான். ஆனால் அந்த பாடசாலையில் கிரிக்கெட்டுக்கு என்று தனி பயிற்சியாளர் இல்லை. விளையாட்டுத்துறை ஆசிரியர் தான் கிரிக்கெட்டுக்கு பயிற்சி கொடுத்தவர். கடினப் பந்து கிரிக்கெட் இல்லாததால், பின்னர் கொட்டகலை தமிழ்ப் பாடசாலையில் சேர்ந்தேன். முதலில் கொட்டகலை பாடசாலையில் ஸ்ரீதரன் சேரிடம் லெதர் போல் பயிற்சி பெற்றேன். என்னை காவிந்த சாரிடம் (காவிந்த ஜெயசூர்யா) அவர்தான் அறிமுகம் செய்தார். அப்போது நுவரெலியா மாவட்ட கிரிக்கெட் பயிற்சியாளராக காவிந்த சார் பணியாற்றினார். நுவரெலியா மாவட்ட கிரிக்கெட் தெரிவில் ஸ்ரீதரன் சார் கூறியதாலேயே பங்குகொண்டேன். பிறகு காவிந்த சார் நான் பந்துவீசுவதைப் பார்த்து என்னை அழைத்துச் சென்றார். அதன் பிறகு, எனக்கு பயிற்சி கொடுத்தார். அதன் பிறகு, அவர் நுவரெலியா ஹோலி டிரினிட்டி கல்லூரியில் நுழைந்தார்.

ஜனக நுவரெலியா மாவட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட பின் தற்போது அவருக்கு கீழ் பயிற்சி பெற்று வருகிறார்.’

19 வயதுக்குட்பட்ட தேசிய அணியில் விளையாட வேண்டும் என்பது டோனி கிரெக்கின் மிகப்பெரிய கனவு. ஏற்கனவே அவர் நுவரெலியா மாவட்ட அணி மற்றும் மத்திய மாகாண அணியில் வீரராக உள்ளார்.’கடந்த முறை 17 வயதுக்குட்பட்ட மாவட்ட அணிக்காக விளையாடினேன். இம்முறை 19 வயதுக்குட்பட்டோருக்கான மாவட்ட போட்டிகள் நிறைவடைந்த பின்னர் மாகாண போட்டிகளுக்கு தெரிவு செய்யப்படுவேன் என நம்புகிறேன். பயிற்சி ஆட்டங்களும் நடைபெறும். அந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடுவேன் என நம்புகிறேன். எனது பந்துவீச்சு வேகம் நன்றாக இருந்ததால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டு வரை நான் மென்பந்து கிரிக்கெட் விளையாடினேன். துடுப்பாட்டக்காரர்களை எவ்வாறு பகுப்பாய்வு செய்வது, லைன் மற்றும் லென்துக்கு எப்படி பந்துவீசுவது, பீல்டர்களை எவ்வாறு களமிறக்குவது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதெல்லாம் அவர்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தார்.’ அவர் தனது பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். சிறுவயதில் இருந்தே டிவியில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கும் டோனி கிரெக்கின் ஆதர்ஷ பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல். டோனி கிரெக் தற்போது நுவரெலியாவில் தங்கியுள்ளார். விடுமுறை நாட்களில் மட்டும் ஊர் திரும்புவார். அதுவரை நுவரெலியா ஹோலி டிரினிட்டி பள்ளியில் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்த டேவிட் ரெல்ஃப் என்பவரிடம் பயிற்சி பெற்று வந்தார். இவ்வருடம் நுவரெலியா காமினி மத்திய கல்லூரிக்கும் ஹோலி டிரினிட்டி தமிழ்ப் பாடசாலைக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கட் போட்டியில் முதன்முறையாக விளையாடவுள்ளார். இந்தப் போட்டிக்கு லிட்டில் இங்கிலாந்து கிரிக்கெட் க்ளாஷ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது இரண்டாவது முறையாக நடைபெறும் போட்டியாகும்.டொமினிக் குடும்பத்தின் தேவைகள் ஏராளம். எனவே டோனி கிரெக்கிடம் முதலில் லெதர் பந்து வீச உகந்த காலணிகள் இல்லை. தேசிய கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமாரவின் உதவியுடன் அதனைப் பெற்றுக் கொண்டுள்ளார். தற்போது கண்டி புனித அந்தோனியார் கல்லூரியின் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக இருக்கும் காவிந்த ஜயசூரியவே இதனை ஒருங்கிணைத்தார்.’தேசிய அணியினர் இங்கு வரும்போது எங்களை நெட் பவுலிங் விளையாட அழைக்கிறார்கள். கடந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன், தேசிய அணி, பயிற்சிக்காக ரதெல்லாவுக்கு வந்தது. நெட் பவுலிங் விளையாட நான் அங்கு சென்றேன். அப்போதுதான் லஹிரு குமார இந்த இரண்டு காலணிகளையும் காவிந்த சார் மூலம் எனக்கு பரிசளித்தார்.’ என நன்றியுடன் கூறினார்.

வி. ஆர். வயலட்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division