எல்லோரும் விட்டுப் போனபின்
என்னுடன் இருந்துவிடுகிறது
தனிமையும் நிழலும்
நானும் என் நிழலும்
தனிமையும் கூடும்போது
மௌனம் எங்களுக்கு
மாலை சூடுகிறது
அங்கே நாங்கள்
புத்தகமொன்றைக்
கையிலெடுத்து எங்கள்
அறிவு வயல்களில்
ஆயிரம் விதைகளை
வேரூன்ற விடுகிறோம்
நாங்கள் கண்களை மூடித்
தியானிக்கத் தொடங்கினால்
எங்கள் உலகத்தில்
பனிமழை பொழிகிறது
எங்களுக்குள்
சண்டை சச்சரவு, தகராறு,
கோபதாபமெதுவும் இல்லை
என்றாலும்
ஒருவருக்கொருவர் மனம்விட்டுப்
பேசிக் கொள்வதில்லை
எனினும்
மனத்தளவில் பேசிச் சிரித்து
மகிழும் எங்களுக்குள்
சத்தமில்லாமல் சிறகடிக்கும்
பல வண்ணத்துப் பூச்சிகள்.
எங்கள் நந்தவனத்தில்
வாசமற்றுப் பூக்கும்
அமைதிப் பூக்களில்
வண்டாக அமர்ந்து
தேனுண்டும் மகிழ்கிறோம்
கண்ணாடி பூட்டிய சாளரங்களினூடே
ஒரு சிறப்பு அதிதியைப்போல
எங்களுடன் கைக்கோத்துக் கொள்ள
வெளிச்சப் பூக்களுடன்
நிலவு வரும்
கூடவே சில நட்சத்திரங்களும்
கண் சிமிட்டும்
வண்ணங்களை மாடாகப்
பூட்டிய வானவில் வண்டியில்
மேகமூடைகளை ஏற்றிச்
சுற்றிவரும் எங்கள்
ஏகாந்த வீதியின்
இருமருங்கிலும் நிம்மதி
மரங்கள் ஓசையில்லாக்
கவரி வீசிய வண்ணமிருக்கும்
போதியின்றி ஞானமாகிய
புத்தனாகத் தவமிருக்கும்
அந்த தியான நிலைமுறிக்க
கைபேசிக் குண்டுகள்
வெடிக்கும் அதிர்வில் மட்டுமே
ஆளுக்கொரு திசையில்
நாங்கள் சிதறிவிடுகிறோம்