சிக்கனமான கட்டணங்களுடன் இலங்கையில் விமான சேவைகளை வழங்கி வருகின்ற FitsAir, 2024 இம்மாதம் முதல் கொழும்பு மற்றும் பங்களாதேஷ், டாக்கா மாநகரம் ஆகியவற்றுக்கிடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கைக்கும், பங்களாதேஷிற்கும் இடையில் மலிவான பிரயாணத்தெரிவுகளுக்கு அதிகரித்து வருகின்ற கேள்விக்கான ஒரு தீர்வாக, பிராந்திய விமான சேவையில் இது முக்கியமானதொரு சாதனை இலக்காக மாறியுள்ளது.
பங்களாதேஷின் பொருளாதாரம் வெகு வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற நிலையில், இலங்கையிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் அங்கு செயல்பாடுகளை முன்னெடுப்பதில் கணிசமான அளவில் ஆர்வம் ஏற்பட்டுள்ளமையால், டாக்கா மிகவும் பிரபலமானதாக மாறி வருகின்றது. இப்போக்கினை இனங்கண்டு, அதற்கேற்றவாறு, வளர்ச்சி கண்டு வருகின்ற இச்சந்தையின் தேவைகளை ஈடுசெய்வதற்கு, மலிவான, குறித்த நேரத்திற்கு இயங்குகின்ற மற்றும் திறன் மிக்க விமான சேவையை வழங்குவதில் FitsAir அர்ப்பணிப்புடன் உள்ளது.
FitsAir இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அமார் காசிம் கருத்து வெளியிடுகையில், “உலகில் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற பொருளாதாரங்களில் ஒன்றாக பங்களாதேஷ் காணப்படுவதுடன், அங்கு வர்த்தகநோக்கங்களுக்காகவும், ஏனைய தேவைகளுக்காகவும் பிரயாணம் செய்கின்றவர்களுக்கு சிக்கனமான கட்டணங்களுடன் சேவைகளை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். டாக்காவுக்கான எமது நேரடி சேவையானது இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.