Home » தமிழக பிரபல கட்சிகள் பா.ஜ.கவுடன் சங்கமம்!

தமிழக பிரபல கட்சிகள் பா.ஜ.கவுடன் சங்கமம்!

by Damith Pushpika
March 17, 2024 6:02 am 0 comment

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் கூட்டணிகள் தமிழ்நாட்டிலும் தற்போது உருவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.கவுடன் சில கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன. தேர்தல் கூட்டணியை உறுதி செய்த கட்சிகள் பட்டியலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், ஓ. பன்னீர்செல்வம் அணி, புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், போன்றவை உள்ளன. அக்கட்சிகள் பா.ஜ.கவுடன் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளன.

தமிழ்நாட்டில் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலைப் போன்று வலுவான கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை சந்திக்க பா.ஜ.க விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடியை ஏற்றுக்கொண்ட கட்சிகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

பா.ஜ.க கடந்த 2014 ஆம் ஆண்டில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்கவில்லை. அப்போது பா.ம.க, தே.மு.தி.க, ம.தி.முக, இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு நாடு தேசிய கட்சி, புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகளை இணைத்து தனி அணியாக பா.ஜ.க கூட்டணி அமைத்தது.

அப்போது காங்கிரஸ் கட்சியும் தனித்துப் போட்டியிட்டது. தி.மு.கவுடன் வி.சி.க, முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. ஜெயலலிதா தலைமையிலான அன்றைய அ.தி.மு.கவானது தனித்தே 39 தொகுதிகளிலும் போட்டியிட்டது. இடதுசாரிகள் தனித்துப் போட்டியிட்டன.

இந்நிலையில் 2014 ஆம் ஆண்டுத் தேர்தலில் 37 இடங்களில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. பா.ஜ.க கூட்டணி இரண்டு இடங்களில் வென்றது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி கணிசமாக வாக்கு வங்கியை அப்போது கைப்பற்றியது. பா.ஜ.க மட்டும் 5.5 சதவீதம் வாக்குகளைப் பெற்றது.

அ.தி.மு.க 44.3 சதவீதமும், தி.மு.க 23.4 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருந்தன. காங்கிரஸ் 4.3 சதவீதம் வாக்குகளை வென்றது. இந்தத் தேர்தலில் தி.மு.க படுதோல்வியைச் சந்தித்து ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை..

ஆனால் 2019 இல் தமிழக அரசியல் தலைகீழாக மாறியது. அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, பா.ஜ.க என அனைத்துக் கட்சிகளும் இணைந்து தேர்தலைச் சந்தித்த போதிலும். தேனியை தவிர எதிலுமே அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறவில்லை. ஆனால் தி.மு.க கூட்டணி 53.15 சதவீதம் வாக்குகளைப் பெற்று 38 இடங்களில் வென்றது. ஆனால் அ.தி.மு.க_ பா.ஜ.க கூட்டணி வெறும் 30.57 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றதுடன், ஒரே ஒரு இடத்தில்தான் வென்றது. பா.ஜ.கவினால் அப்போது வெறும் 3.66 சதவீதம் வாக்குகளையே பெற முடிந்தது.

இந்நிலையில், 2024 (இவ்வருடம்) லோக்சபா தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க விலகி விட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் 2014 பாணியில் வலுவான கூட்டணி அமைக்க பா.ஜ.க முடிவு செய்தது. அதன்படி தமிழ்நாட்டில் பா.ஜ.கவுடன் கூட்டணியை உறுதி செய்த கட்சிகள் பட்டியலை பா.ஜ.கவினர் வெளியிட்டிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், அ.தி.மு.கவில் இருந்து பிரிந்த ஓ.பி.எஸ் அணி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி , இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி ஆகியவை இணைந்துள்ளன.

இதில் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, அந்தக் கட்சியை அப்படியே பா.ஜ.கவில் இணைத்துள்ளார் சரத்குமார்.

டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளது. நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அக்கட்சி கூறியுள்ளது. இதுபற்றி டி.டி.வி. தினகரன் கூறுகையில், “பா.ஜ.கவுடனான கூட்டணி உறுதி ஆகிவிட்டது. பா.ஜ.க சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் டெல்லி பிரதிநிதி கிஷன் ரெட்டி ஆகியோர் என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள். அவர்களிடம், பா.ஜ.கவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளேன். கடந்த மூன்று மாதங்களாக பா.ஜ.கவைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இப்போது அதிகாரபூர்வமாகப் பேசினோம். அவர்களிடம் ஏற்கனவே அ.ம.மு.கவின் கோரிக்கைகளைக் கடிதம் மூலமாகக் கொடுத்துள்ளோம். இந்தியாவில் உறுதியாக பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டிலே வெற்றி பெற பா.ஜ.கவிற்கு அ.ம.மு.க ஒரு அணிலைப் போல் உதவியாக இருக்கும்” என்றார்.

இதனிடையே அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் தனது அணியை பா.ஜ.க கூட்டணியில் இணைந்துள்ளார். அவருடன் அண்மையில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பா.ஜ.க தலைமை இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தியது. அப்போது ஓ.பி.எஸ், தங்கள் அணிக்கு 15 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதைக் கேட்டு பா.ஜ.க அதிர்ச்சியில் உறைந்து போனது. இருப்பினும் அதனை வெளிக்காட்டாமல் எத்தனை தொகுதிகளை உங்களுக்கு ஒதுக்குவது என்பது பற்றி பேசி முடி வெடுத்துக் கொள்ளலாம் என்று அனுப்பி வைத்தனர்.

பா.ஜ.க இம்முறை தே.மு.தி.க மற்றும் பா.ம.கவை தங்களது அணியில் சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறது. அதற்காக வியூகம் அமைத்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் தே.மு.தி.க அ.தி.மு.கவுடன் சேரத் தயாராகி வருகிறது. ஆனால் பா.ம.க இன்னமும் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. பா.ஜ.க கூட்டணிகளுக்கு தொகுதிப் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது இவ்விதமிருக்க, தி.மு.க கூட்டணியில் எந்தெந்தக் கட்சி எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுகிறது என்ற விபரமும் வெளியாகியிருக்கின்றது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குமக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை அடங்குகின்றன.

தி.மு.க கூட்டணியில் கட்சி வாரியாக தொகுதிகள் ஒதுக்கீடு வருமாறு:

காங்கிரஸ்- 10, வி.சி.க- 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- 2, ம.தி.மு.க- 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- 1, மக்கள் நீதி மய்யம்- 1

இந்தக் கட்சிகளில் வி.சி.க, ம.தி.மு.க, இந்திய முஸ்லீம் லீக் ஆகியவை தனிச்சின்னத்தில் போட்டியிடுகின்றன. ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியில் தி.மு.க சின்னத்தில் அதாவது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

எஸ்.சாரங்கன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division