Home » முதலீடுகள் படிப்படியாக வரத்தொடங்கி விட்டன

முதலீடுகள் படிப்படியாக வரத்தொடங்கி விட்டன

by Damith Pushpika
January 21, 2024 6:00 am 0 comment

நாடு படிப்படியாக முன்னேறிவரும் இன்றைய சூழ்நிலையில் முதலீடுகளும் நாட்டுக்குள் வரத்தொடங்கியிருப்பதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து எம்முடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அவர் தெரிவித்ததாவது:

கே: நாட்டுக்குள் முதலீடுகள் கொண்டுவரப்படும் நிலைமை எவ்வாறு காணப்படுகின்றது?

பதில்: நாட்டின் நிதி விவகாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு நல்லதொரு முன்னேற்ற சூழ்நிலையைக் கொடுத்துள்ளது.

அதாவது, நமது பொறுப்பின் ஒரு பகுதியாக இருப்பது, முதலீட்டாளர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். கடந்த ஆண்டில் மட்டும் 38 புதிய முதலீடுகள் இலங்கைக்கு வந்துள்ளன.

கே: இருந்தபோதும் முதலீடுகளில் ஒரு பகுதி நாட்டை விட்டு வெளியேறியிருந்ததுதானே?

பதில்: முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை. சர்வதேச போர்ச் சூழல் காரணமாக ஆடை தயாரிப்புக்கான கேள்விகள் குறைந்துள்ளன. மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் அளவுகோல்களை அமுல்படுத்தியதால், ஆடைத்தொழிலில் உற்பத்திக் குறைவு ஏற்பட்டது. உதாரணமாக, ஒரேயடியாக வருமான வரி 30 வீதம் ஆக உயர்த்தப்பட்டமை தொழில்துறையை வெகுவாகப் பாதித்தது. அதே சமயம் மின்கட்டணமும் உயர்ந்து போக்குவரத்துச் செலவும் அதிகமாகியது. ஒருபுறம் கேள்வி குறைந்ததுடன், மறுபுறம் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. இந்நிலையால் அந்தந்த முதலீட்டு வலயங்களில் பின்னடைவுகள் ஏற்பட்டன.

இதனால் சில நிறுவனங்கள் தமது செயற்பாட்டைச் சுருக்கிக் கொண்டன. பணியாளர்களின் வேலை நேரங்களும் ஒருங்கிணைக்கப்பட்டன. தற்போது சுமார் 5000 பணியாளர்கள் எந்தவொரு ஊழியரையும் பாதிக்காத வகையில் இந்தப் பணியைச் செய்ததற்காக அனைத்து நிறுவனங்களுக்கும் நாம் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கே: இந்த ஆண்டு கைச்சாத்திடப்படவுள்ள முதலீட்டு ஒப்பந்தங்கள் தொடர்பான நிலைமையை விளக்க முடியுமா?

பதில்: இந்த வருடம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஒப்புக் கொள்ளப்பட்ட 30 முதலீட்டுத் திட்டங்கள் கையெழுத்திடப்பட உள்ளன. இவ்வருடத்தில் மேலும் முதலீடுகள் நாட்டுக்குள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கின்றோம்.

கே: புதிய முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களை உருவாக்குவது தொடர்பில் அண்மையில் கலந்துரையாடப்பட்டதா?

பதில்: ஆம், இதுவரை நான்கு புதிய முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. திருகோணமலை துறைமுகத்தை மையமாகக் கொண்டு அந்த முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் உருவாக்கப்படும். திருகோணமலை, பரந்தன், மாங்குளம், காங்கேசன்துறை ஆகிய இடங்களில் அவை நிறுவப்படவுள்ளன. குறிப்பாக அரபு நாடுகளின் முதலீடுகளை நாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக ஜனாதிபதி அரபு நாடுகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

கே: இந்த வலயங்கள் மூலம் கிடைக்கக் கூடிய வேலைவாய்ப்புகள் பற்றி விளக்குவீர்களா?

பதில்: முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் தொடங்கப்பட்டதும் அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாது. எப்படியிருந்தாலும் சுமார் 80,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் சில மாகாணங்களில் திறமையான இளைஞர், யுவதிகள் இருக்கின்றனர். அவர்களின் தகுதிக்கேற்ப வேலைகள் வழங்கப்படலாம். தொழிலாளர் வேலைவாய்ப்பு தொடக்கம் மிக உயர்ந்த பதவி வரை வெற்றிடங்களுக்கு ஆட்களை நியமிக்க முடியும்.

கே: முதலீடுகளுக்கு அனுமதியைப் பெறுவதற்கு சுமார் 20 நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டியுள்ள நிலைமை காணப்படுகிறது. இந்த நிலை முதலீட்டாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது இல்லையா?

பதில்: உண்மை, ஆனால் கடந்த ஆண்டு இந்த நிலையை மாற்ற நாங்கள் கடுமையான முயற்சிகளை எடுத்திருந்தோம். இதற்கமைய 7 அமைச்சுக்களை ஒன்றிணைத்து ஒரு குழுவாக்கி விரைவில் அங்கீகாரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். அதன்படி கடலோரப் பாதுகாப்பு, புவியியல், சுற்றுச்சூழல் போன்ற அனைத்து அனுமதிகளையும் விரைவாக வழங்க முடிந்தது. இவர்கள் அனைவரும் மாதம் இருமுறை சந்தித்துப் பேசினர். இந்த ஆண்டு புதிய முதலீட்டுச் சட்டங்கள் மற்றும் முதலீட்டு ஆணையத்தை நிறுவுவதன் மூலம், அனைத்து முதலீட்டு அனுமதிகளையும் விரைவாக வழங்க முடியும். தற்போதைய நிலவரப்படி சுற்றுச்சூழல் அறிக்கையை வழங்குவதற்கான குறைந்தபட்ச காலஅவகாசம் 116 நாட்களாகும். மேலும், குறித்த காணி தொடர்பான விடயங்களுக்கு 3 வார காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப யுகத்தில், இந்த காலாவதியான கட்டமைப்பிலிருந்து நாம் விலகிச் செல்ல வேண்டும். இந்நிலையை மாற்றி விரைவில் அங்கீகாரம் வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து அனுமதிகளும் அதிகபட்சமாக 35 முதல் 45 நாட்களுக்குள் வழங்கப்படும்.

கே: அரசின் முன்னேற்றத்தில் திருப்தி அடைய முடியுமா?

பதில்: இது ஒரு நல்ல கேள்வி. நாடு தற்போது ஸ்திரத்தன்மை அடைந்து வருவது தெளிவாகிறது. அட்டவணையில் உள்ள எண்களை மக்கள் உணரவில்லை. சமையலறையில் அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். ஆனால் ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு வருடத்துக்கு முன்பு மின்சாரம் மற்றும் எரிவாயு, எரிபொருள் ஆகியன இருக்கவில்லை. கிலோமீட்டர் கணக்கில் வரிசைகள் இருந்தன. இன்று, அந்தப் பொருட்கள் மற்றும் சேவைகள் அதிக விலையில் கிடைக்கின்றன. தற்போதுள்ள நிதி ஒழுக்கம் காரணமாக இந்த நிலைமை சாத்தியமாகியுள்ளது. நிதி ஒழுக்கம் என்பது ஒரு வரி என்று மக்கள் நினைக்கிறார்கள்.

கே: இன்னும் எத்தனை காலம் மக்கள் இந்த நிலையை அனுபவிக்க வேண்டும்?

பதில்: ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. கடனை அடைப்பதை நாம் நிறுத்தி விட்டோம். இந்த ஆண்டின் பிற்பகுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாங்கள் மீண்டும் கடன் செலுத்தத் தொடங்க வேண்டும். 67 வீதமாக இருந்த பணவீக்கம் இன்று 0.8 வீதமாக குறைந்துள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களால் மட்டுமே இந்த நிலைமையை புரிந்து கொள்ள முடியும் என்பதை நாம் அறிவோம்.

கே: பணவீக்கம் குறைந்துள்ளது என்று கூறினாலும், மக்கள் சுமப்பதற்கு சிரமப்படும் சுமை தெளிவாகத் தெரிகின்றது அல்லவா?

பதில்: ஆம், கடைக்குச் சென்றால் பொருட்களின் விலை அதிகமாக இருக்கும், மக்கள் அதை வெறுக்கிறார்கள். அந்த வெறுப்பின் விளைவாகவே ஜனாதிபதி கோட்டாபய வெளியேற வேண்டியதாயிற்று. அவர் முன்னெடுத்த வேலைத்திட்டம் வெற்றி பெற்றிருந்தால் நாம் இன்னும் முன்னேறியிருக்கலாம். ஆனால் மக்களின் உடனடி எதிர்வினையால் அவர் செல்ல வேண்டியதாயிற்று. இப்போது என்ன நடந்தது? இந்த அரசு சரியில்லை என்று வேறு ஒரு அரசை கொண்டு வந்ததன் விளைவு என்ன? ஏனெனில் வரும் அரசாங்கம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வீட்டில் இருந்து பணத்தை கொண்டு வருமா? யார் வந்தாலும் இந்தப் பயணம்தான் செல்ல வேண்டும்.

கே: நம் நாட்டில் தேசியக் கொள்கை இல்லை. குறைந்த பட்சம் அந்நிய முதலீடுகள் தொடர்பிலாவது அத்தகைய கொள்கை உருவாக்கப்படவில்லையா?

பதில்: முன்னர் கூறியது போன்று ஜனாதிபதி கோட்டாபய அதனை செய்ய முயற்சித்தார். இந்த நாட்டின் காலாவதியான கொள்கைகளால் அதைச் செய்ய முடியாது. டெங்கு அதிகரிக்கும் போது டெங்கு அதிகாரிகளும், மலேரியா அதிகரிக்கும் போது அதற்கான அதிகாரிகளும் நியமிக்கப்படுகின்றனர். இப்போது எல்லாம் குவிந்து விட்டன. அவர்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அப்படி ஒரு குழப்பம் இருக்கிறது. அதன் காரணமாக முழு அரசியலமைப்பையும் மாற்றி இந்த நிலைமைக்கு தீர்வு காண வேண்டும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division