Home » நாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்

நாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் சந்திப்பு

by Damith Pushpika
January 14, 2024 6:00 am 0 comment

நாட்டை மீட்டெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து எம்முடன் அவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

கே: தொழில்சார் வல்லுநர்கள் தற்பொழுது பெருமளவில் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை நாட்டின் பொருளாதார வீழ்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்: தொழில்சார் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது புதிய விடயம் அல்ல. ஆனால் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரதூரமான நிலைமை ஏற்படலாம். நாடு தற்போது பொருளாதார ரீதியாக சாதகமான திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தற்போதைய நெருக்கடி தற்காலிகமானது, சரியான பாதையில் சென்றால் இதனை வென்றிட முடியும்.

பொருளாதார நெருக்கடி இலங்கைக்கு மாத்திரம் ஏற்படவில்லை. உலகின் மற்றைய நாடுகளைப் போலவே நாமும் சரிந்தோம். ஆனால் உலகின் மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நாம் விரைவாக மீட்சிபெற்றோம். எங்களின் கஷ்டங்கள் அனைத்தும் விரைவில் தீர்ந்துவிடவில்லை. இதற்கு சிறிது காலம் எடுத்தாலும், தற்போது பொருளாதாரம் சாதகமாக இருப்பதற்குத் தேவையான சூழலை உருவாக்கியுள்ளோம். ஒருவர் மீது ஒருவர் விரல் நீட்டுவது நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வழியாக அமையாது. இது ஒரு தற்காலிக நிலைமை. எதிர்காலத்தில், இழந்த நம்பிக்கைகள் அல்லது நன்மைகளை மீண்டும் பெறுவோம்.

கே: வரி அறவீடு அதிகமாக இருப்பதே தொழில் வல்லுநர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. இதில் உண்மை உள்ளதா?

பதில்: 2022 இல் அதிகமான தொழில் வல்லுநர்கள் வெளிநாடு செல்லத் தொடங்கினர். நாட்டின் மீது நம்பிக்கை இல்லாத காலம் அது. இந்த நிலையை அரசியல் கோணத்தில் பார்க்கக் கூடாது. இன்று ஒரு நம்பிக்கையான நாடு உள்ளது. இன்றைய நிலையில், அனைவரும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காணலாம். ஆனால் இந்த பொருளாதார நெருக்கடிதான் அதிகாரம் பெறுவதற்கு சரியான சந்தர்ப்பம் என்று சிலர் நினைக்கிறார்கள். இது குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதைப் போன்றதாகும்.

கே: ஆனால், மக்களுக்குப் பெரும் துன்பங்களும் பொருளாதாரக் கஷ்டங்களும் இருக்கின்றன, இல்லையா?

பதில்: ஒரு நாடாக நாம் மிகவும் கடினமான முடிவுகளை எடுத்துள்ளோம். இன்று நாடு ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. சந்தர்ப்பவாத, அரசியல் கோணத்தில் இருந்து பார்க்காமல் சரியான கண்ணோட்டத்தில் பார்த்தால் உண்மை நிலையைப் புரிந்துகொள்ள முடியும். மக்களுக்கு சிரமம் உள்ளது. அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் அதை நிராகரிக்கவில்லை. வீழ்ச்சியுற்ற நாட்டை ஒரேயடியாக மீட்க முடியாது. சிரமங்களிலிருந்து விடுபட, முதலில் ஒரு திட்டம் தேவை. குறுகிய கால சிரமங்கள் இருக்கும். அந்த அசௌகரியங்களைத் தவிர்க்க சமூக நலத்திட்டங்களை வழங்கியுள்ளோம். செழிப்பைப் பார்க்கும் அதே கண்களால் வறுமையைப் பார்க்காதீர்கள்.

கே: சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நீடிக்கப்பட்ட கடன் வசதிகளைப் பெற்ற பிறகு பொருளாதாரத்தில் ஒரு பெரிய மறுமலர்ச்சி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பார்க்கும் போது பாரிய மாற்றங்கள் தென்படவில்லையே?

பதில்: ஒரு நாடாக வங்குரோத்து நிலையில் இருந்து மீள, உலகில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியம் போன்ற நிதி நிறுவனங்களின் ஆதரவை நாட வேண்டும். ஆனால் நிதி ஒழுக்கத்தைப் பேணுவது அவசியம். இந்த நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிக்காததால்தான் நாங்கள் சரிவைச் சந்தித்தோம். இந்த யதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கே நாம் 2022 ஆம் ஆண்டு தொடர்பான அனைத்து விடயங்களையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

கே: அரசாங்கத்தின் இந்த பொருளாதார நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தின் மீது ஏமாற்றமடைந்தால் என்ன செய்வது?

பதில்: 22 மில்லியன் மக்களின் வாழ்வோடு விளையாட முடியாது. அந்தப் பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இன்று நாம் பிரபலமான முடிவுகளை எடுக்க வேண்டியதில்லை. குறுகிய காலத்தில் சில சிரமங்கள் ஏற்பட்டாலும், இன்று எடுக்கப்பட்ட இந்த முடிவுகளால் பொருளாதாரம் காப்பாற்றப்பட்டது. விமர்சனம் எளிதானது, பழி எளிதானது என்பதை மக்கள் எதிர்காலத்தில் புரிந்துகொள்வார்கள்.

கே: வற் வரியை 18 வீதம் ஆக உயர்த்துவது நம் நாட்டு மக்களின் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அல்லவா?

பதில்: நமது நாட்டில் பணவீக்கம் 70 வீதம் ஆக இருந்தது. வற் வரி அதிகரிப்புடன், பணவீக்கம் 2 வீதம் ஆக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இதற்கிடையில், தேவையான பொருளாதார கருவிகளைப் பயன்படுத்தி அதைக் கட்டுப்படுத்தும் நோக்கம் உள்ளது. மேலும், இந்த விமர்சனங்களும் விளக்கங்களும் சரியல்ல என்பது இரண்டாவது விடயம்.

வற் வரி 15 வீதம் முதல் 18 வீதம் வரை அதாவது 3 வீதம் மட்டுமே அதிகரிக்கும். மேலும், வற் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட 138 பொருட்களில் 94 பொருட்களுக்கு இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு தயாரிப்பு 15 வீதத்திலிருந்து 18 வீதம் வரை மட்டுமே செல்கிறது. உயர்த்தப்பட்ட வற் வரியை முறையாகப் பெற்றால் மட்டுமே, வரிக் குறைப்பைப் பரிசீலிக்க முடியும். அரசின் வருவாயை அதிகரிப்பதே இதன் நோக்கம். அந்த வருமானம் கிடைத்தால்தான் பொதுச்சேவைகளை நடத்த முடியும். அஸ்வெசும போன்ற சமூகநலப் பணிகளைச் செய்ய முடியும். உர மானியம், ஊனமுற்றோர் உதவித்தொகை, சிறுநீரக நோயாளர் உதவித்தொகை, மருத்துவமனை நலன்புரி, கல்வி, ஓய்வூதியம் போன்றவற்றை வழங்கலாம். மேலும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. உண்மையை உள்ளபடியே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

விரல்களை நீட்டுவதும் விமர்சிப்பதும் நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது. நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்தி, அதற்கேற்ப செயல்பட்டு வருகிறோம். மேலும் நாங்கள் மிகவும் சிக்கலான ஆபத்து சூழ்நிலையில் இருக்கிறோம். ஏனென்றால் எதிர்காலத்தில் இன்னும் ஆபத்தான சூழ்நிலைகள் வரலாம். பழைய பழக்கவழக்கங்களோடு வாழலாம் என்று நினைத்தால் அது நல்ல முடிவு அல்ல.

கே: இந்த பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தில் நாம் ஒரு நல்ல நிலையை அடைய முடியும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: வரி செலுத்த வேண்டிய மக்களை வரி செலுத்த ஊக்குவிக்க வேண்டும். 12 இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் நாட்டின் வரிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில், தேவையான தீர்வுகளை எங்களால் மேற்கொள்ள முடியாது. அவர்கள் கடனைச் செலுத்த வேண்டும். மற்றபடி குறைந்த வரி செலுத்தியோ, வரி கட்டாமல் இருந்தோ வரி அதிகம் என்று கூச்சல் போடுவதில் அர்த்தமில்லை. பொருளாதார நெருக்கடியால், இந்த நிலையைப் புரிந்துகொள்வது பலருக்கு கடினமாக உள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division