அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான உப செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் அண்மையில் ஹங்வெல்லவில் அமைந்துள்ள நியு அந்தனீஸ் பார்ம்ஸ் பகுதிக்கு விஜயம் செய்திருந்தார். இலங்கையின் முன்னணி கோழிப்பண்ணைச் செய்கையாளர்களாகத் திகழும் நியு அந்தனீஸ் பார்ம்ஸ், நிலைபேறாண்மை தொடர்பில் பின்பற்றும் செயன்முறைகளையும், அமெரிக்காவுடன் கட்டியெழுப்பும் பிணைப்புகளையும் அவர் பாராட்டியிருந்தார்.
நியு அந்தனீஸைப் பொறுத்தமட்டில் இந்த விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருப்பதுடன், தமது உற்பத்திச் செயன்முறையில் நிலைபேறாண்மையை பின்பற்றிய நவீன வசதிகள் படைத்த பண்ணையை வெளிப்படுத்தக் கூடியதாக இருந்தது. உப செயலாளர் டெய்லர் தமது இலங்கைக்கான விஜயத்தின் போது, நாட்டின் விவசாயத் துறைக்கு USDA இன் ஆதரவை வலுப்படுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடியிருந்தார்.
தமது பங்காண்மையினூடாக நாட்டில் உணவுப் பாதுகாப்பை எவ்வாறு மேம்படுத்துவதில் பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும் என்பது தொடர்பில் உப செயலாளர் மற்றும் நியு அந்தனீஸ் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
U.S. Soybean Export Council (USSEC) இனால் வழங்கப்படும் ‘Fed with Sustainable U.S. Soy’ எனும் முத்திரையை பெற்றுக் கொண்ட முதலாவது சர்வதேச நிறுவனமாக நியு அந்தனீஸ் திகழ்கின்றது. அதனூடாக அமெரிக்காவிடமிருந்து நிலைபேறான மூலப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.