தொடர்ந்து 22ஆவது வருடமாக ‘இலங்கையின் தலைசிறந்த வங்கியாக கொமர்ஷல் வங்கி’ தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் செயல்படும் குளோபல் பினான்ஸ் சஞ்சிகையால் வெளியிடப்பட்டுள்ள 2024இன் உலகின் தலைசிறந்த வங்கிகள் பட்டியலில் கொமர்ஷல் வங்கியும் இடம் பிடித்துள்ளது.
சிறந்த வங்கிகளுக்கான தனது அங்கீகாரமானது நிதி நிறுவனங்கள் வழங்கும் விரிவான பல்வேறு வகையான சேவைகள், நீண்டகால நம்பகத்தன்மை மற்றும் தொழில்நுட்ப ரீதியான கண்டுபிடிப்புக்கள் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டவை என்று குளோபல் பினான்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த கீர்த்திமிக்க விருதை வென்றுள்ளமை பற்றி கருத்து வெளியிட்ட கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க “எமது வங்கி செயற்பாட்டு ரீதியாக கடந்த நிதி ஆண்டில் பல மைல்கற்களை கடந்துள்ளது.
நிலைத்தன்மையில் புதிய தளத்தை அது உருவாக்கியுள்ளது. டிஜிட்டல் மயமாக்கல், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கான உதவிகள், மகளிர் தொழில்முயற்சியாளர்கள் தமது தொழில்துறையை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகள் என்பன இதில் அடங்கும். சந்தையில் நிலவிய நிலையற்ற தன்மைகளை சமாளித்துக் கொண்டே இவை அனைத்தும் எட்டப்பட்டன.
அத்தோடு எமது சந்தை தலைமைத்துவ நிலையை தக்க வைத்துக் கொண்டு கடந்த ஆண்டும் உறுதியாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. கொமர்ஷல் வங்கிக் குழுவினரால் சாத்தியமாக்கப்பட்ட கொமர்ஷல் வங்கியின் திடமான ஸ்திர நிலைக்கு இந்த விருது மகத்தான ஒரு கௌரவமாகவும் அமைந்துள்ளது” என்றார்.