அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீதின் நூல் அமெரிக்காவில் வெளியாகிறது..! | தினகரன் வாரமஞ்சரி

அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீதின் நூல் அமெரிக்காவில் வெளியாகிறது..!

'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' என்ற தலைப்பில் அப்துல் ஹமீத் எழுதிய ஊடக வாழ்க்கை அனுபவ நூல் அமெரிக்காவில் வெளியிடப்படவுள்ளது.

இலங்கை வானொலியில் மிக இளவயதிலேயே அறிவிப்பாளராகி,  வானொலியின் பல்வேறு துறைகளிலும் அளப்பரிய பங்களிப்புகளை நல்கி,  ஒலிபரப்புத் துறையில் மட்டுமன்றி,  தொலைக்காட்சித்துறை,  திரைப்படத்துறை எனப் பல்வேறு தளங்களிலும் 54ஆண்டுகளுக்குமேல் அழுத்தமான தடம் பதித்த அன்பு அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீத் தனது அரை நூற்றாண்டு கடந்த வாழ்க்கை அனுபவங்களை ஒரு நூலாக எழுதியுள்ளார்.

'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' என்ற தலைப்பில் அமைந்த இந்த நூல், அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் எதிர்வரும் ஜுலை 1முதல் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 'வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை' முத்தமிழ் விழாவில் வெளியிடப்படவுள்ளது.

சுமார் 5000பேர்வரை கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படும் இப்பெருவிழாவில் இம்முறை பிரதான மேடையில் வெளியிடப்படுவதற்கு இந்நூல் மட்டுமே தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது நாட்டு வானொலி ஒலிபரப்புத் துறையில் முன்சென்றவர்கள் யார் அவர்களது ஆளுமை -  என்ன என்பதை யாவரும் அறிந்திருப்பது நல்லது. இன்று இந்தத் துறை சார்ந்தவர்கள் இவற்றை அறிந்துவைத்திருப்பது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்பதில் ஐயமில்லை.

தென்கிழக்காசியாவில் முதல் வானொலி நிலையத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் என்ற பெருமையும் புகழும் பெற்றவர்கள் என்ற போதிலும் இந்த விடயங்கள் தொடர்பாக தேடுதல்கள் - ஆய்வுகள் அவசியமானவை. பதிவுசெய்யப்பட வேண்டியவை..!

'இலங்கை வானொலிக் கலைக்கூடத்திலிருந்து எத்தனை - எத்தனை கலைஞர்கள் உருவாகியிருக்கிறார்கள்...

எத்தனை இலக்கிய ஆளுமைகள் தங்கள் படைப்புகளை வானொலி ஒலிபரப்பினூடாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள்...

எத்தனை பெரிய ஆளுமைகள் இந்த நிலையம் வழியாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்...'

இவற்றையெல்லாம் பதிவுசெய்திடல் எமது இனத்திற்கும் மொழிக்கும் ஆற்றும் பெரும்பணியாகும்.

அந்த வகையில்,  உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் - வானொலி நேயர்கள் இதயங்களில், அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக இனிய தமிழ்க் குரலால், படைப்பாற்றல் திறனால் இடம்பிடித்திருக்கும் கலைஞர்  அன்பு அறிவிப்பாளர்' அப்துல் ஹமீத் தனது பங்களிப்பை நூலாகவும் வெளிக்கொணர்ந்துள்ளார்.

அவரது எழுத்தில் உருவான இந்நூல் அமெரிக்கா வாழ் தமிழ் மக்கள் மத்தியில் வெளியிடப்படுவது சிறப்புக்குரியது.

ஓர் ஊடகவியலாளரது வாழ்க்கை அனுபவமாக மட்டுமன்றி, இலங்கை வானொலி வரலாறு குறித்த ஒரு சிறந்த ஆவணப் பதிவாகவும் இந்நூல் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..!

இளஞ்சேரன் ...?

Comments