கிளிநொச்சி நகரில் விபத்தில் கொல்லப்பட்ட தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
வீதி விபத்துகளை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரியுமே இந்த கவனயீர்ப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை (03) பிரதேசவாசிகளால் முன்னெடுக்கப்பட்டது. கடந்த மாதம் 25ஆம் திகதி கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஒரு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தையின் தாய் நேற்று முன்தினம் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
குழந்தையின் இறுதிக் கிரியைகள் கடந்த 01ஆம் திகதி நடைபெற்ற போது, வெள்ளிக்கிழமை (03) 34 வயது குடும்பப் பெண்ணின் இறுதிக் கிரியைகளும் நடைபெற்றன.
இந்நிலையில், விபத்துகளை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பெருந்திரளான மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
மது போதையில் வாகனம் செலுத்துதல், அதிக வேகம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தி கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும், பாதசாரிக் கடவைகளில் வீதி மின் விளக்குகளை அமைக்குமாறும் மக்களால் வலியுறுத்தப்பட்டது.
நகர திட்டமிடலை மீள் பரிசீலனை செய்து, பரந்தன் முதல் திருமுறிகண்டி வரை வீதி விளக்குகளை அமைக்குமாறும், இரட்டைப் பாதைகளை அமைத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துமாறும் மக்கள் இந்த போராட்டத்தின் போது வலியுறுத்தினர்.
பரத்தன் சந்தி, டிப்போ சந்தி, காக்காக்கடை சந்தி, கரடிப்போக்கு சந்தி உள்ளிட்ட பகுதிகளில் வீதி மின் விளக்கு சமிக்கைகளை அமைக்குமாறும் மக்கள் வலியுறுத்தினர்.
அத்துடன், போக்குவரத்து பொலிசாரை வீதிக்கடமைகளில் அமர்த்துமாறும், தண்டனைக்குரிய குற்றங்களுக்கு அதி உயரிய தண்டனைகளை வழங்குமாறும் மக்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது போன்ற சம்பவங்கள் மூலம் அப்பாவி மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்படுவதையும், அழகான குடும்பங்கள் நிர்க்கதிக்குள்ளாவதையும் தடுக்க பொலிசாரும் சம்மத்தப்பட்ட தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தி மேற்படி கவனயீர்ப்பில் ஈடுபட்டதுடன், ஜனாதிபதி உள்ளிட்ட பலருக்கும் மகஜர்களும் கையளிக்கப்பட்டன.
பொலிஸ் மாஅதிபருக்கான மகஜர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர பெத்த தந்ரீயிடம் கையளிக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 1,000 போதை பரிசோதனை குழாங்களை தான் கொழும்பிலிருந்து எடுத்துள்ளதாகவும் தெரிவித்ததுடன், வேக்க் கட்டுப்பாடு, போதையில் வாகனம் செலுத்தல் உள்ளிட்ட விடயங்களை கட்டுப்படுத்த பொலிசாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.