இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு இராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட 06 கிலோ தங்கக்கட்டிகள் இந்தியாவில் மீட்கப்பட்டன. இலங்கையிலிருந்து படகு மூலம் கடத்தல்காரர்கள் தங்கக்கட்டிகளை கடத்துவதாக இந்திய மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை இந்திய கடலோர காவல்படை மற்றும் சுங்கத்துறை உதவியுடன் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ரோந்து சென்றனர். ரோந்துப் படகை கண்டதும் கடத்தல்காரர்கள் தங்கக்கட்டிகளுடன் வேகமாக தப்பி செல்ல முயன்ற போதும், இவர்களை மேற்படி அதிகாரிகள் துரத்திச் சென்ற போது தங்கக்கட்டிகளை கடத்தல்காரர்கள் கடலில் வீசினர். படகிலிருந்த 03 பேரை அதிகாரிகள் மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர்.
இலங்கையிலிருந்து கடத்திய தங்கக்கட்டிகளை ரோந்துப் படகை கண்டதும் பயந்து கடலில் வீசியதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வேதாளை மற்றும் மண்டபத்துக்கு இடைப்பட்ட முயல்தீவு அருகே கடல் பகுதியில் வீசப்பட்ட தங்கக்கட்டிகளை தேடும் பணியில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர். இதற்காக இந்திய கடலோர காவல் படையின் ஸ்கூபா டைவிங் நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
நேற்று முன்தினம் பிற்பகல் 2.00 மணியளவில் கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகளை அவர்கள் மீட்டதுடன், சுமார் 06 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன. இத்தங்கக்கட்டிகளை இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகம் கொண்டு சென்றது.
மொத்தம் 06 கிலோ தங்கக்கட்டிகள் மட்டும் தானா? அல்லது வேறு தங்கக்கட்டி பார்சல்கள் இன்னும் கடலுக்குள் கிடக்கிறதா? வேறு எங்கும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என பல்வேறு கோணங்களில் கைதான 03 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகள் பல கோடி ரூபா மதிப்பிருக்கும். கடத்தல்காரர்கள் இலங்கையிலிருந்து தங்கக்கட்டிகளை கடத்தி வருவது, அதிகாரிகளை கண்டதும் கடலில் வீசுவது போன்ற சம்பவங்கள் தற்போது அடிக்கடி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது