ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் தேசிய புத்தரிசி விழா அநுராதபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீமஹாபோதிக்கு அருகில் நேற்று (06) நடைபெற்றது.
பாரம்பரியமாக பெரும்போகத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லின் முதல் நெல்லை ஜயஸ்ரீ மஹாபோதிக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா, அட்டமஸ்தானாதிபதி வண. பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரரின் ஆலோசனைக்கமைய விவசாய அமைச்சு மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்தால் 57ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டது.
மன்னர் காலத்திலிருந்து நடைபெற்றுவரும் இந்த சம்பிரதாய விழாவில் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான விவசாயிகள் திரண்டு வந்து, ‘மழை, விளைநிலங்கள் செழிக்க’ வேண்டியும், விவசாயத்தில் நாடு தன்னிறைவு அடைந்து வளமான பொருளாதாரம் ஏற்பட வேண்டியும் பிரார்த்தனை செய்தனர்.
அட்டமஸ்தானாதிபதி வண. பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரர், தங்கப்பாத்திரத்தில் புத்தரிசியை நிரப்ப ஆரம்பித்தார்.
மகா சங்கத்தினரின் பிரித் பாராயனத்துக்கு மத்தியில் தங்கப்பாத்திரத்தில் புத்தரிசியை நிரப்பும் விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார்.
தேசிய புத்தரிசி விழாவின் நினைவுப்பதிப்பும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் விவசாயப் பிரேரணையை அநுராதபுரம் மாவட்ட விவசாய அமைப்பின் தலைவர் புஞ்சிரால விவசாயி முன்வைத்தார்.
இதன்போது ஆதிவாசித் தலைவர் வன்னில எத்தோ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தேன் வழங்கினார்.
அட்டமஸ்தானாதிபதி கண்டி களவிய பிரதம சங்கநாயக பூஜ்ய பல்லேகம ஹேமரதன நாயக்க தேரர் இங்கு விசேட அனுசாசனை உரை நிகழ்த்தியத்துடன், விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவும் இதன்போது கருத்துத் தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், இராஜாங்க அமைச்சர்களான டி.பி.ஹேரத், செஹான் சேமசிங்க, காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.சந்திரசேன, துமிந்த திஸாநாயக்க, இஷாக் ரஹ்மான், வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித், முன்னாள் அமைச்சர் பீ.ஹரிசன், ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.