கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் மூடப்படவுள்ளது | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் மூடப்படவுள்ளது

நோர்வே அரசு மேற்கொள்ளும் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக கொழும்பிலுள்ள  தனது தூதரகத்தை மூடுவதற்கு நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

நோர்வே அரசாங்கம் வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது. 

இந்த நடவடிக்கை, ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலுமுள்ள பல நோர்வே தூதரகங்களை வலுப்படுத்துவதை உள்ளடக்கியுள்ளதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது. 

இந்த சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக 2023ஜூலை இறுதிக்குள் கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் உட்பட வெளிநாடுகளிலுள்ள ஐந்து நோர்வே தூதரகங்களை நிரந்தரமாக மூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, கொழும்பிலுள்ள தூதரகத்தை மூடும் முடிவு நோர்வேக்கும் இலங்கைக்குமிடையிலான இருதரப்பு உறவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாதென தூதரகம் தெரிவித்துள்ளது. 

நமது இரு நாடுகளுக்குமிடையிலான நட்பு மற்றும் ஆக்கபூர்வமான உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு நோர்வே அரசு உறுதிபூண்டுள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில் நீண்டகால இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, நோர்வே ஒரு தூதரை அங்கீகரித்து இலங்கையை உள்ளடக்கிய பிராந்தியத்திலுள்ள மற்றொரு நோர்வே தூதரகத்தை இயக்க எதிர்பார்க்கிறது. 

கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம், மூடப்படும் செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் நான் வருத்தமடைகிறேன்" என்று நோர்வே தூதுவர் ட்ரைன் ஜோரன்லி எஸ்கெடால் கூறியுள்ளார்.

கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் மூடப்பட்டவுடன், இலங்கைக்கான தூதரக சேவைகள் பிராந்தியத்திலுள்ள மற்றொரு நோர்வே தூதரகத்திலிருந்து வழங்கப்படும்.

இலங்கை மற்றும் மாலத்தீவிலிருந்து விசா விண்ணப்பங்களைக் கையாளும் விசா மையம் ஏற்கனவே புதுடில்லியிலுள்ளது, மேலும் வீசா விண்ணப்பதாரர்கள் தமது நியமனங்களுக்காக கொழும்பிலுள்ள VFS அலுவலகத்துக்குச் செல்ல முடியுமென்றும் அறிவித்துள்ளது.

Comments