கிளிநொச்சி இராமநாதபுரம், வவுனியா ஈச்சங்குளம் பகுதி பொலிஸாரின் செயற்பாடுகளால், நம்பிக்கையிழந்த பொதுமக்கள், பொலிஸ் நிலையங்களை மூடுமாறு தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத வியாபாரங்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதும் அவரது குற்றச்சாட்டுக்களில் ஒன்று.
இதன்போது கருத்து தெரிவித்த பிமல் ரத்நாயக்க, இராமநாதபுரம், ஈச்சங்குளம் ஆகிய பகுதிகளுக்கு மக்கள் சந்திப்புக்காகச் சென்றிருந்தேன். அப்பகுதி மக்கள் பொலிஸாரின் விரும்பத்தகாத செயற்பாடுகளால் நம்பிக்கையிழந்து விரக்தியில் உள்ளனர்.
சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தால்,உடனே உரிய நபர்களுக்கு அந்தத் தகவல்கள் செல்கின்றன.
தமது பகுதியில் பொலிஸ் நிலையம் இருந்தும் சட்டவிரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இவ்வாறானால் பொலிஸ் நிலையங்கள் எதற்காக. அவற்றை மூடிவிடுமாறு என்னிடம் மக்கள் தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர்: கீழ்நிலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது நம்பிக்கையீனம் இருந்தால், மேலதிகாரிகளுக்கு தகவல் வழங்க முடியும் என்றார்.
வல்வெட்டித்துறை, பருத்தித்துறை பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால், அத்தகவலை வழங்கியவர் தொடர்பில் சட்டவிரோத மதுபான உற்பத்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதாக தமக்கும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.