Home » புத்தளத்தின் அடையாளம் மர்ஹூம் அப்துல்லா மஹ்மூத் ஆலிம்

புத்தளத்தின் அடையாளம் மர்ஹூம் அப்துல்லா மஹ்மூத் ஆலிம்

by Damith Pushpika
January 26, 2025 6:46 am 0 comment

இவ்வுலகைவிட்டும் பிரிந்த அப்துல்லா மஹ்மூத் ஆலிம் தொடர்பில் புத்தளம் மக்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதுடன், எமது தேசத்தில் வாழும் மக்களும் இவர்களது பணிகள் தொடர்பில் தெரிந்து கொள்வது முக்கியமானது.

1954 ஆம் ஆண்டு புத்தளத்தில் பிறந்த அப்துல்லா மஹ்மூத் ஆலிம் புத்தளத்தில் பல்துறையாளர்களின் வரிசையில் முதன்மையானவராக குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாகும்.

புத்தளத்தின் சகல நிகழ்வுகளிலும் அப்துல்லா மஹ்மூத் ஆலிமின் பிரசன்னத்தை காணலாம். அந்த அளவுக்கு புத்தளம் சமூகத்தின் மத்தியில் மதிப்பினையும், நம்பிக்கையினையும் கொண்ட ஒருவராக அவர் அடையாளம் காணப்பட்டு இருந்தமையே பிரதானமானதாகும்.

சில நாட்கள் சுகயீனமுற்ற நிலையில் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது 70 ஆவது வயதில் அன்னாரது உயிர் பிரிந்தது.

அப்துல்லா மஹ்மூத் ஆலிமின் வாழ் நாள் முழுவதுமாக ஆன்மிகத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது.

சமூக ரீதியான பிரச்சினைகளின் போது நீதியான தீர்ப்பினைக் கூறும் ஒருவராக அவரின் செயற்பாடு காணப்பட்டதால் புத்தளம் மட்டுமல்லாமல் அதனை சூழவுள்ள கிராமங்களை சேர்ந்த மக்களும் மர்ஹூம் அப்துல்லா மஹ்மூத் ஆலிமை நாடி வந்த சந்தர்ப்பங்கள் அதிகமாக இருந்துள்ளதை புத்தளத்தை சார்ந்த ஒருவன் என்ற வகையில் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது பொருத்தமாகும்.

குறிப்பாக மர்ஹூம் அப்துல்லா மஹ்மூத் ஆலிமின் தந்தையால் உருவாக்கப்பட்ட புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லுரியானது இலங்கையின் அரபுக் கல்லூரிகளின் வரலாற்றில் முதன்மையானதாகும். அரபுக் கல்லூரி என்பதற்கப்பால் பொது அறிவுடன் கூடிய கல்விக் கூடமாக காசிமிய்யாவை உருவாக்குவதில் அப்துல்லா ஆலிமின் பங்களிப்பு மிகப் பெரியதாகும்.

காசிமிய்யாவின் மீது பற்றுக் கொண்டவராக அப்துல்லா மஹ்மூத் ஆலிம் செயற்பட்டுவந்தமையானது இக்கல்லுரி மாணவர்களுக்கு கிடைத்த ஒரு அருளாக குறிப்பிடலாம்.

சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது அதனை பற்றி எரியவிடாமல் அணையச் செய்து, மிகவும் பக்குவத்துடன் கையாளுகின்ற ஆளுமையினை இறைவன் அவருக்கு கொடுத்ததனால் புத்தளம் பல சந்தர்ப்பங்களில் பாதுகாக்கப்பட்டதை எதிர்கால சமூகம் தெரிந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.

அதே போல் விளையாட்டு, கல்வி, பாடசாலை அபிவிருத்தி, மற்றும் பொது விடயங்கள் உள்ளிட்டவற்றில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திப்பதிலும், அபிவிருத்திகளை புத்தளம் நன்மை கருதி பெறுவதிலும் அமைதியான பேச்சாற்றலினால் அதனை அடைந்து கொள்ளும் பக்குவத்தை கொண்டவராக அப்துல்லா மஹ்மூத் ஆலிம் இருந்துள்ளார்.

புத்தளம் சமூகத்திற்கு மர்ஹூம் அப்துல்லா ஆலிம் ஆற்றிய பணி என்றும் போற்றப்பட வேண்டியதொன்று என்பதுடன், அன்னாரது மறுமை வாழ்வுக்காக நாம் பிரார்த்தனை செய்வதானது இன்றியமையாதது என்பதையும் பதிவிட்டு அன்னாரது பிரிவால் துன்புற்றிருக்கும் குடும்பத்தினருக்கு இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாக பிரார்த்தனையினையும் செய்வோம்.

கலாநிதி இல்ஹாம் மரைக்கார் சமூக செயற்பாட்டாளர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division