மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில், பிரதேச செயலக மட்டத்தில் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் விஸ்தரிக்கப்படவுள்ளன. இவ்வேலைத்திட்டம் எதிர்வரும் பெப்ரவரி 07 இல், அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொழும்பில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஜனாதிபதி நிதிய அலுவலகத்தின் சேவைகளை, நாடளாவிய ரீதியிலுள்ள 361 பிரதேச செயலக அலுவலகங்களிலும் வழங்க இதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐந்து பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டு இது தொடர்பில் முன்னோடித் திட்டம் முன்னெடுக்கப்படும். எதிர்வரும் பெப்ரவரி 07ஆம் திகதி முதல் இத் திட்டத்தை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நிதியம் தொடர்பில் பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கும் வகையில் நேற்று சனிக்கிழமை (25) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இணையம் மூலமான கலந்துரையாடலின் போதே, இந்த தகவல்கள் வெளியிடப்பட்டன.
ஜனாதிபதி நிதியத்துக்கு புதிய டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வலையமைப்பு வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் ஊடாக மக்களுக்கு மிகவும் வினைத்திறன் மற்றும் பயனுள்ள சேவையை வழங்க செயலாற்றி வருவதாக ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே தெரிவித்தார்.
இதனூடாக எவராயினும் தமது பிரதேச செயலகத்தின் ,நோய்க்கு அமைவான கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பான ஆவணங்களை பிரதேச செயலகத்தினால் உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும்.
நோயாளரை தெரிவு செய்யும் முறை, அவர்களின் ஆவணங்களை தயாரிக்கும் முறை, ஜனாதிபதி நிதியத்தின் பொறுப்பு என்பன தொடர்பில் இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.