மலையக பகுதி தோட்டப்புறங்களில் வாழுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படும் 6000 ரூபா கொடுப்பனவினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் வேண்டுகோள் விடுத்தார்.
வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தலைமையில் அண்மையில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஊவா தமிழ் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ராமர் கிப்ஸன் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பெருந் தோட்டப்பகுதிகளில் இன்று பொருளாதார நெருக்கடி காரணமாக பல மாணவர்கள் கற்றலை தொடர முடியாது இடை விலகுகின்றனர். இதனால் பல்வேறு நெருக்கடிகள் உருவாகியுள்ளன.
வறுமை காரணமாக சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் பணிகளும் அதிகரித்துள்ளன. இதனால் பல்வேறு சமூக பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. தொழிலாளர்களுக்கு கிடைக்கின்ற வருமானத்தினை கொண்டு இன்று அவர்களுக்கு மூன்று நேர உணவினைக் கூட உண்ண முடியாத நிலை உள்ளபோது அவர்கள் எவ்வாறு அவர்களது பிள்ளைகளை படிக்க வைப்பது என்ற கேள்வி உருவாகியுள்ளது.
எனவே இது மலையகத்தினை மாத்திரமின்றி கல்வி ரீதியாக நாட்டினையும் பாதிக்கும். எனவே அரசாங்கம் வழங்குகின்ற ஆறாயிரம் ரூபா கொடுப்பனவினை பெருந்தோட்டப்பகுதியில் வாழுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
மலைவாஞ்ஞன்