நாட்டின் 08 மாவட்டங்களில் அதிக உஷ்ணமான காலநிலையை எதிர்பார்ப்பதுடன், இந்த நிலைமை எதிர்வரும் சில மாதங்களுக்கு தொடருமென்று எதிர்பார்ப்பதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, புத்தளம், குருநாகல், ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிக உஷ்ணமான காலநிலை நிலவுமென்று எதிர்பார்ப்பதாகவும், வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை பிரிவுக்கான பிரதிப் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்தார். இந்த மாவட்டங்களில் மனித உடலால் தாங்கிக்கொள்ளக்கூடிய வெப்பத்தை விட, அதிக உஷ்ணம் நிலவுமெனவும், அவர் கூறினார். நாட்டில் காற்றின் அளவு குறைந்துள்ளமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அதிக உஷ்ணத்திலிருந்து பொதுமக்கள் தம்மை பாதுகாக்க வேண்டுமெனவும் கூறினார்.
அதிகளவு நீரை அருந்துதல், அதிக சோர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடாதிருத்தல், வெள்ளை அல்லது வெளிர்நிற ஆடைகளை அணிதல், நிழலான இடங்களில் இருத்தல் ஆகிய நடைமுறைகளை பின்பற்றுமாறும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார். உஷ்ணமான காலநிலை காரணமாக உடலிலிருந்து அதிகளவான வியர்வை வெளியேறுவதால் களைப்பு ஏற்படலாம். இதைத் தவிர்க்க நீர், இளநீர், கஞ்சி போன்ற நீராகாரத்தை எடுக்குமாறு, கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
மேலும், உஷ்ணம் காரணமாக தோல் சார்ந்த பிரச்சினை ஏற்படலாம். எனவே சிறுவர்களை காலை, மாலையில் நீரில் குளிர்ப்பாட்ட வேண்டுமெனவும், அவ்வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்.