கிரிக்கட்டில் சிகரம்தொட்டு லெஜன்ட்களாக வர்ணிக்கப்படும் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்களை முதற்தடவையாக இலங்கையில் ஒன்றாக களம்காணச்செய்யும் லெஜன்ட்ஸ் வெற்றிக்கிண்ண சுற்றுத்தொடர் மார்ச் எட்டாம் திகதி கண்டியில் உள்ள பள்ளேகல மைதானத்தில் ஆரம்பமாகிறது. இந்த சுற்றுத்தொடருக்குரிய போட்டிகள் தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். இந்தச் சுற்றுத்தொடர் கடந்த ஆண்டு டெல்லியில் அறிமுகம்செய்யப்பட்டு சிறப்பாக நடந்து முடிந்தது. இம்முறை வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிக் கொள்வதற்காக, நட்சத்திரங்களாகத் திகழ்ந்து ஓய்வுபெற்ற கிரிக்கட் வீரர்கள் ஏழுஅணிகளாக களமிறங்குகிறார்கள்.
இந்த சுற்றுத்தொடர் LCT T20 League Pvt Limited நிறுவனத்தால் ஸ்தாபிக்கப்பட்டது. இதில் பாகிஸ்தான், இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் ஏழு அணிகளில் இடம்பெறுவார்கள். இந்தத் தகவல்கள் வீரர்களை அணிகளாக பிரித்து, வெற்றிக்கிண்ண சுற்றுத்தொடரின் ஜெர்சியை வெளியிடும் வைபவத்தில் வெளியிடப்பட்டன.
கொழும்பு ஹில்ட்டன் ஹோட்டலில் வைபவம் நடைபெற்றது. முன்னாள் கிரிக்கட் வீரர் பர்வீஸ் மஹ்ரூப் அணிகளுக்கு வீரர்களை பிரித்தொதுக்கும் நடைமுறையை வழிநடத்தினார். இதில் சமிந்த வாஸ், திஸர பெரேரா ஆகியோரும் இணைந்திருந்தார்கள். ஏழுஅணிகளாக பிரித்து ஒதுக்கப்பட்ட வீரர்களில் யுவராஜ்சிங், கிரிஸ்கெயில், சுரேஷ்ரெய்னா, பென்டங்க், ரொஸ்ரெயிலர், ஜொஹான் போத்தா, ஹர்பஜன் சிங், ஷஹீட்அப்ரிடி, கம்ரான் அக்மல், சனத் ஜயசூரிய, மிஸ்பா உல்-ஹக், அம்பாட் டிராயுடு, ட்வெயின் ப்ராவோ, திஸர பெரேரா, இம்ரான் தாஹிர் ஆகியோரும் அடங்குகிறார்கள்.