நோர்வூட் பொகவந்தலாவ பிரதான வீதியின் அவலம் | தினகரன் வாரமஞ்சரி

நோர்வூட் பொகவந்தலாவ பிரதான வீதியின் அவலம்

ஹற்றன், வெளிஓயா 22 ஆம் இலக்க தோட்டத்திலுள்ள 4 வயது சிறுவன் ஒருவர் அண்மையில் சுகவீனமுற்ற நிலையில் உரிய நேரத்திற்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் உயிரிழந்தார். வீதி குண்டும் குழியுமாக சேதமடைந்திருந்தமையாலேயே இவ்வவலம் ஏற்பட்டதாக பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டமும் செய்தனர்.வீதி எமது வாழ்வோடு ஒன்றித்த ஒன்றாகும் மக்களின் முன்னேற்றத்திற்கு வீதி அபிவிருத்தியும் வீதிகட்டமைப்பும் முக்கிய இடம் வகிக்கிறது.

நோர்வூட் பொகவந்தலாவை பிரதான வீதி 272 நாட்களில் காபட் இட்டு புனரமைக்க ஆரம்பித்த வீதி இரண்டு வருடங்கள் கடந்தும் பூர்த்தி செய்யப்படவில்லை என பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பல ஆண்டு காலமாக குண்டும் குழியுமாக காணப்பட்ட வீதியை கடந்த அரசாங்க காலத்தின் போது ஒரு இலட்சம் கிலோ மீற்றர் காபட் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2020.05.06 ஆம் திகதி 1250 மில்லியன் ரூபா செலவில் 21 கிலோமீற்றர்,நோர்வூட் தொடக்கம் கெம்பியன் வரை 6.5 மீற்றர் அகலப்படுத்தி காபட் இட்டு புனரமைப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டது.

கொரோனா தொற்றால் கைவிடப்பட்டிருந்த வீதி புனரமைப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து இரண்டு வருடமாக நடைபெறவில்லை இதனால் இன்று பலாங்கொடை பொகவந்தலாவை, டின்சின், கெம்பியன், ராணிக்காடு லொயினோன், கர்கஸ்வோல்ட், எலிபொட, சென்ஜோன்டிலரி உள்ளிட்ட தோட்டங்களையும் நகரங்களையும் சேர்ந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொவந்தலாவை பிரதேச வைத்தியசாலையிலிருந்து ஒரு நோயாளியினை மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைகளுக்ேகா அல்லது நாவலப்பிட்டி கண்டி உள்ளிட்ட வைத்தியசாலை கொண்டு செல்வதென்றால் கூட குறித்த வீதியின் ஊடாகவே கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நோயாளர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.

கர்ப்பிணித்தாய்மார்கள் கிளினிக் செல்லும் போது பல சிரமங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

மழைக்காலங்களில் குழிகளில் மழை நீர் சேர்வதால் நடந்து கூட செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

அது மாத்திரமன்றி தற்போது வரட்சியான காலநிலை காணப்படுகின்றது இதனால் வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் தூசியும் சுவாச பிரச்சினைகளையும் ஏதுவாகின்றன.

பாடசாலை மாணவர்கள் வீதியில் செல்லும் போது புழுதி படுவதனால் சீருடைகள் அழுக்கடைவதாகவும், வீதியின் இரு மருங்கிலுமுள்ள வீடுகளில் இருப்போர் பாதையில் ஏற்படும் தூசி துகள்களால் பெரும் இக்கட்டான நிலைக்குள்ளாகின்றனர்.

வீதியில் காணப்படும் குண்டும் குழியால் அடிக்கடி வாகனங்கள் பழுதடைவதாகவும், உரிய நேரத்திற்கு செல்ல முடியாது இடர்படுவதாகவும் சாரதிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாதுள்ளனர்.

புனரமைப்பு பணிகளுக்காக கொண்டுவரப்பட வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வீதி ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு புல் முளைத்து துருப்பிடித்து காணப்படுவதாகவும் கல், மணல் உள்ளிட்ட பொருட்களும் வீணாவதாகவும் பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே இந்த பிரதான வீதியினை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மலைவாஞ்ஞன்

Comments