யாழ்ப்பாணத்தை உலுக்கும் போதை அரக்கர்கள் | தினகரன் வாரமஞ்சரி

யாழ்ப்பாணத்தை உலுக்கும் போதை அரக்கர்கள்

“எனது வாழ்க்கையே அழியும் என நான் நினைக்கவில்லை” ஆரம்பத்தில் கஞ்சா பத்துவதற்கு நண்பர்கள் பழக்கிவிட்டார்கள். சிறிது நாட்களின் பின்னர் ஹெரோயின் பாவிக்க கற்றுத் தந்தார்கள். என்னுடைய எதிர்காலமே சிதைக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை." என போதைப் பொருளுக்குள் அடிமையான மாணவன் கவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அழுதான்.

யாழ்ப்பாணத்தில் உயிர்க்கொல்லி போதைப் பொருளைப் பயன்படுத்தி 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள். 300க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருட்களின் பாவனை காணப்பட்டாலும், குறிப்பாக, யாழ். நகர்ப்பகுதியில் நாவாந்துறை, குருநகர், மணியம்தோட்டம், திருநெல்வேலி பாற்பண்ணை, கல்வியங்காடு, மானிப்பாய், சக்கோட்டை, திருநகர், கொட்டடி உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலும், கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட செல்வபுரம், யோகபுரம் கிராமங்களும் போதைப்பொருள் கூடாரமாக செயற்படுகின்றதாகவும் பொலிஸ் தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசங்களில் ஹெரோயின், போதை மாத்திரை, ஐஸ் போன்ற போதைப்பொருட்களின் பாவனை பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகின்றது.

கடந்த மூன்று மாதங்களில் யாழ். நீதிவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் 359 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவர்களிடமிருந்து 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதுடன், 3000க்கும் அதிகமானோர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுட்டிக்காட்டியுள்ளார். சுமார் 13 வயது முதல் 28 வயது வரையான இளைஞர்கள் யுவதிகள் போதைப்பொருள் மாபிஃயாக்களின் வலையில் வீழ்ந்திருகின்றார்கள். வியாபார முகவர்கள் இவர்களின் மனதை குழப்பி, போதைப்பொருளை பயன்படுத்த தூண்டுகின்றார்கள். ஒரு தடவை பயன்படுத்தியவர்கள் தாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதற்காக, பணத்தை தேடி அலைகிறார்கள். இதனால், யாழ்ப்பாணத்தில் வழிப்பறி, கொலை, கொள்ளை, திருட்டு, வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன.

சாதாரண இளைஞர்கள் மத்தியில் விற்பனை செய்யப்படும் ஹெரோயின் மற்றும் ஐஸ் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் ஊடுருவியுள்ளது. பிரபல பாடசாலை மாணவர்கள் குறிவைக்கப்படுகின்றார்கள். அண்மையில் மாணவர்கள் ஹெரோயின் பயன்படுத்தியதாக, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சம்பவங்கள் பல மக்கள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு வழங்குபவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தற்போது, சிறுவர் முதல் பெண்கள் வரை போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகிவிட்டனர் என்ற கருத்தும் பரவலாக காணப்படுகின்றது.

நாளொன்றிற்கு சராசரியாக 4 முதல் 5 பெண்கள் ஹெரோயின் உட்கொள்கிறார்கள், பாழடைந்த வீடுகளில் பெண்கள் குழுவாக இணைந்து ஹெரோயின் பயன்படுத்திய போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதால், எங்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். போதைப்பொருள் மாபிஃயாவைக் கட்டுப்படுத்த பொலிஸாரால் மட்டும் முடியாது. அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும். தகவல்களை வழங்க வேண்டும். இங்கு யாருமே தகவல் தர முன்வருவதில்லை. தகவல் தந்தால், தங்களுக்குப் பிரச்சினை என நினைத்து தகவல் தர மறுக்கின்றார்கள்.

அத்துடன், சில பாடசாலை மாணவர்களையும் கைது செய்கின்றோம். அவர்களை சிறுவர் நீதிமன்றத்தின் ஊடாக சிறுவர் பராமரிப்பு நிலையம் மற்றும் போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வுக்காக அனுப்பி வைத்துள்ளோம். பாடசாலைகளுக்கு அருகில் கடை வைத்திருப்பவர்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம். பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும். பிள்ளைகளின் செயற்பாடுகளை அவதானிக்க வேண்டும், பிள்ளைகளுடன் ஒருவேளையேனும் கதைத்து, தேவைகள் தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டும். பாடசாலைக்கோ, தனியார் வகுப்பிற்கோ சென்று வர நேரம் தாமதமாகினால் காரணங்களை அறிய வேண்டும். பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அதிக சிரத்தையுடன் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

சுமித்தி தங்கராசா 

Comments