சிறுவர்களை துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்போம் | தினகரன் வாரமஞ்சரி

சிறுவர்களை துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்போம்

  • சிறுவர் துன்புறுத்தலை நிறுத்துவோம்
  • ஒன்பது மாதங்களில் 30,894குரூரமான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள்.
  • 2020--2022  ஜூலை வரை 16சிறார்கள்   கொல்லப்பட்டுள்ளனர்
  • எப்பாவல பிரதேசத்தில் ஒரு சிறுமியை 31பேர் அப்பா, சித்தப்பா, மாமா என்று தொடராக6வருடங்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளனர்...

ஒவ்வொரு வருடமும் நாம் சிறுவர் தினம் கொண்டாடுகிறோம். வருடா வருடம் பல தொனிப்பொருட்கள். அவை அன்றைய தின நிகழ்வின் முடிவிலேயே கிடப்பில் போடப்பட்டு விடும். உலக சனத்தொகையில் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியினரே சிறுவர்கள். அதே போல் இன்று எமது நாட்டில்  சிறுவர்கள் அதி முக்கியத்தும் வழங்கப்பட வேண்டிய பகுதியினராக மாறியுள்ளனர். அரசியல் அரங்கில், ஆர்ப்பாட்ட களத்தில் நாட்டுக்கு தேவையான சிறந்த சிறுவர்கள் உருவாக்கப்பட வேண்டுமென உரக்க கூறுபவர்கள் ஏன்  காயங்கள் அற்ற பாதிப்பற்ற சிறுவர்கள் உருவாக்கப்பட வேண்டும் என கூறுவதில்லை.

இன்றைய சூழலில் எமது நாட்டிலுள்ள 25%வீதமான 5.2மில்லியன் சிறுவர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். கட்டாயம் இவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இதற்கு அரசியல் வாதிகளின் வகிபாகம் முக்கியமானதாகும்.வேண்டும், வேண்டப்படாத இரு பக்கங்களில் எமது அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள் என டாக்டர் துஷ் விக்கிரமசிங்க(STOP CHILD CRUELTY TRUST,CO.CONVENER OF CHILD PROTECTION ALLIANCE) தெரிவித்ததார். சிறுவர் கொடுமைகளை நிறுத்துவோம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடரும் அவர் கருத்துபகிர்வுகள்....

2020ஆண்டு நீர்கொழும்பில் 16மாதங்கள் ஆன குழந்தை ஒன்று குரூரமான துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு பல்வேறு துன்புறுத்தலுக்குள்ளான நிலையில் ஹோட்டல் ஒன்றின்  கழிவறையில் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பிள்ளை  படிக்கவில்லை என்று தந்தை  தும்பு தடியில் அடித்ததில் இறந்துபோனார். 2022ஜூலை மாதம் வாழ வழியில்லை என்று ஒரு தாய் இரண்டு குழந்தைகளுடன் ஆற்றில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்தபோது ஒரு குழந்தை மரணடைந்தது.

அவ்வாறு 24மாதங்களில் 17குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். அக் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம், வன்புணர்வு, உடல் உள ரீதியில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டுள்ள நிறுவனமே தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை. அவர்களிடம் அதிகமான சட்டதிட்டங்கள் இருக்கின்றன. எந்தளவு அவை நடைமுறையில் உள்ளன என்பது தெரியவில்லை. இன்றைய பொருளாதார நெருக்கடியில் குழந்தைகள் பாதுகாப்பு மட்டுமல்ல போஷாக்கு குறைவும்  பெரும் பிரச்சினையாக உள்ளது. தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படாத சிறுவர்கள் உருவாக்கப்பட வேண்டும்.225பாராளுமன்ற உறுப்பினர்களும் சிறுவர்களின் பாதுகாப்பை தங்களின் நிகழ்ச்சி நிரலில் உட்படுத்தப்பட வேண்டும்.இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.

Stop Child Cruelty Trust (SCC) மற்றும் Child Protection Alliance (CPA) ஆகியன ஒன்றிணைந்து வட மாகாணத்திலுள்ள மக்களுக்கும், சிறார்களுக்கும் அன்பைப் பரப்புவதற்காக, சிறுவர் தினத்தைக் கொண்டாடும் வகையில் 'Lama Surakum Yathra' (சிறுவர் பாதுகாப்பு சுற்றுப்பயணம்) என்பதை மீண்டும் ஆரம்பித்துள்ளது. மிகவும் தீவிரமான விழிப்புணர்வுப் பிரசாரம் கொழும்பு கோட்டையில் ஆரம்பமாகி, ஒக்டோபர் 1ஆம் திகதி யாழ்ப்பாணத்தையும், ஒக்டோபர் 15ஆம் திகதி கண்டியையும், ஒக்டோபர் 29ஆம் திகதி மட்டக்களப்பையும், நவம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தையும் சென்றடையும், 2022, நவம்பர் 18அன்று, # NOguti மற்றும் இலங்கையின் முதல் சிறுவர் மாநாட்டிற்கு ஆதரவான Yathra நடைபவனியுடன், கொழும்பில் உள்ள விஹார மஹா தேவி பூங்காவில் உள்ள திறந்த வெளி அரங்கில் சர்வதேச சிறுவர் தினத்தைக் கொண்டாடுவதற்காக நடைபவனியின் மாபெரும் இறுதி நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் (இளைப்பாறிய)பிரியந்த ஜயக்கொடி

இலங்கை சிறுவர்கள் தொடர்பில் அதிக அதிகாரமும் சட்ட திட்டங்களையும் கொண்ட நிறுவனமே இலங்கை சிறுவர் அதிகார சபையாகும். ஆனால் அச் சட்டங்களும் நடைமுறைகளும் நடைமுறைப்படுத்தப்படுவதில் பெரிதாக முனைப்பு காட்டுவதாக தெரியவில்லை. இலங்கையில் 2011தொடக்கம் 2020ஜூலை 20ஆம் திகதி வரை 30,894பிள்ளைகள் குரூரமான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 3,550நாட்களில் இது நடந்துள்ளது.

இவை பதியப்பட்ட குற்றங்களாகும். எமது சமூக கட்டமைப்பின் படி சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் வெளிவருவது குறைவு. பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செல்வதில்லை.நீதிமன்றம் என்று பெரிய கட்டமைப்பை கண்டு பயப்படுவதால் இச் சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகின்றன.

எப்பாவல பிரதேசத்தில் ஒரு சிறுமியை 31பேர் அப்பா, சித்தப்பா, மாமா என்று தொடராக 6வருடங்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளனர்.

ஒரு நாளைக்கு 60நிமிடங்களில் 8.7சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இவை முறைப்பாடு செய்யப்பட்டவையாகும். பதியப்படாதவை இன்னும் அதிகமாகும். ஆனாலும் இவற்றில் 30,005பேர் குற்றவாளிகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 8,377பேருக்கு நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 59%வீதமானவை இவை அனைத்தும் 2011- -2020வருடங்களில் நடந்ததாகும். ஆனால் 3,882பேரே நீதிமன்றங்களில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது 12.7வீதமாகும். இலங்கையில் குற்றங்கள் நடந்த பின்னர் அது தொடர்பில் பரிசீலனை செய்வதற்காக பெரும் பிரயத்தனம் எடுக்கப்படுகிறது. ஆனால் குற்றங்கள் ஏன் நடக்கிறது அதற்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிப்பதில் முனைப்பு காட்டுவது குறைவு. குற்றங்களை தடுக்க முனையாமல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் பொலிஸாரும் சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்களுக்கு எதிரான உள, உடல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கான வழிகளை தேட வேண்டும்.ஜப்பான் போன்ற நாடுகள் குற்றங்கள் நடப்பதற்கான காரணிகளை கண்டுபிடிப்பதற்காக பஜ்ஜட்டில் பெரும் தொகை பணத்தை ஒதுக்கி செயற்படுகின்றன. ஆனால் இலங்கை போன்ற நாடுகளிள் குற்றங்கள் நடந்த பின்னர் அதற்கான காரணத்தை கண்டறிய செலவிடுகின்றன.

ஆனால் மனநிலை குறைவான சிறுவர்கள் அதிகம் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் வீதம் அதிகமாகும். எம்பிலிப்பிட்டியவில் மனநிலை குறைவான ஒரு சிறுமிக்கு உடைந்த செல்போனை கொடுத்து 11பேர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

அவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அச் சிறுமியின் குடும்பத்தில் அனைவருமே மன நிலை பாதிக்கப்பட்டவர்கள். 

இவற்றை எவ்வாறு தடுக்கலாம் அல்லது இவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் ஆழமான சிந்தனைகள் தேவை .

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் ஒரு பிரதேசசபைக்கு 10அரச அதிகாரிகள் உள்ளனர்.

ஆனால் இவர்கள் அனைவரையும் எமக்கு ஒரு நிலைக்கு கொண்டுவர முடியாது. அவர்கள் அனைவரும் தனித் தனியாக இயங்குகின்றனர்.எமது பிள்ளைகளின் பாதுகாப்பு எம் கையிலேயே இருக்கிறது. இன்றைய உலகம் சிறுவர்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை.

ஸ்ரீ

Comments