அடுத்த வாரமும் மூன்று தினங்களே பாடசாலை | தினகரன் வாரமஞ்சரி

அடுத்த வாரமும் மூன்று தினங்களே பாடசாலை

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை அடுத்த வாரம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 

தற்போது திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அடுத்த வாரம் வியாழக்கிழமை 11ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினமானதால் கல்வியமைச்சு மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளது. 

எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து சேவை அசௌகரியங்கள் காரணமாக நகர்ப்புற பாடசாலைகளில் 3தினங்களுக்கு மாத்திரம் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது. 

எனினும் அவ்வாறான பாதிப்புகள் இல்லாத நாட்டின் சில மாவட்டங்களில் வாரத்தின் ஐந்து தினங்களிலும் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் இம்மாதம் 8ஆம்திகதி முதல் வடமாகாணத்தின் அனைத்து பாடசாலைகளையும் கல்வி நடவடிக்கைகளுக்காக ஐந்து தினங்களிலும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம் 

Comments