நானோ எனது குடும்பமோ பணத்துக்கு ஆசைப்பட்டதில்லை | தினகரன் வாரமஞ்சரி

நானோ எனது குடும்பமோ பணத்துக்கு ஆசைப்பட்டதில்லை

புதிய ஜனாதிபதி தெரிவின் போது 06அல்லது 07கோடி ரூபா வரையான பணத்தை நான் பெற்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஆனால் பணத்துக்கு நானோ எனது குடும்பமோ ஆசைப்பட்டதில்லை. கட்சி எடுத்த முடிவுக்கு மாறாகவும் வாக்களிக்கவில்லயென புளொட் அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தேசிய கல்வியியல் கல்லூரியின் காணி தற்போதைய மதிப்பு 60கோடி வரை வரும். அதனை நன்கொடையாக வழங்கிய எனக்கு பணம் பெரிதல்ல. பணத்துக்காக செயற்படுவதில் எனக்கோ எனது குடும்பத்துக்கோ உடன்பாடில்லை.

கடந்த காலத்திலும் கூட்டமைப்பின் தலைமைக்கு கோடிக்கணக்கான பணம் வழங்கப்பட்டதாக செய்திகள் பரப்பப்பட்டன. இவ்வாறான கதைகள் வரக் காரணம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மலினப்படுத்துவதேயாகும். இதனை சக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களே செய்வதை ஏற்கமுடியாது.

எந்தச் சந்தர்ப்பத்திலும் எப்போதும் நான் யாரிடமும் பணம் பெற்றது கிடையாது. இவ்வாறான கதைகளை கூறுவதன் மூலம் எங்களை விட கூடுதலான விருப்பு வாக்கை பெற்றுக் கொள்ள முடியமென்பது தவறு ,தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே வாக்குகள் இல்லாது போகும்.

இன்று மிகப்பலம் பொருந்திய கட்சியாக காணப்படுகின்ற இந்த கட்சியை உடைப்பதன் மூலம் நிச்சயமாக தமிழ் மக்களுடைய அபிலாசைகள் அனைத்தையும் உடைப்பதற்கே காரணமாக அமையும். இது சிங்கள தேசியத்துக்கும் பேரினவாதிகளுக்கும் உதவி செய்வதாகவே நான் பார்க்கிறேன்.

இன்னொரு விடயம், நிச்சயமாக என்னை பொறுத்தவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எப்பொழுதும் எவரிடமோ பணம் பெற்று நான் வேலை செய்வதில்லை. நான் மாறாக ஒரு நன்மை செய்யப்போகிறேன் என்று பணம் வாங்கியதுமில்லை.

நான் என்னை பற்றி சொல்ல வேண்டிய தேவையில்லை. மக்களுக்கு என்னை பற்றி நன்றாக தெரியும்.

எங்களுடைய கடந்த காலங்களை பார்க்கின்ற பொழுது யாழ்ப்பாணத்தில் அனைவருக்கும் தெரியும்.

நாங்கள் எப்படி செயல்பட்டிருக்கின்றோம் என்தை அவர்கள் அறிவார்கள். ஆகவே நான் இதனை கூறத் தேவையில்லை. ஆனால் இவ்வாறான வதந்திகள் வருகின்ற போது நான் கூற வேண்டிய கடமையும் இருக்கின்றதென்றும் தெரிவித்துள்ளார்.

Comments