
மன்னார்-, புத்தளம் (எலுவன்குளம் ஊடான) பாதையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி., பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான, உணவுப் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கட்சித் தலைவர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பையடுத்து, (17) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான பொருளாதார ரீதியான தொடர்புகளை ஏற்படுத்தும் நோக்கிலும் இப்பாதை ஊடாக அத்தியாவசிய தேவைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதனாலும் மக்களின் பாவனைக்கேற்றவாறு இப்பாதையை புனரமைத்து மீள திறந்துவிடுமாறு பிரதமரிடம், ரிஷாட் எம்.பி கேட்டுக் கொண்டார். இந்தக் கூட்டத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.