இன்றைய பொருளாதார நெருக்கடியை சரியாக புரிந்து கொண்டாலேயே அதற்கான தீர்வைக் காண முடியும்! | தினகரன் வாரமஞ்சரி

இன்றைய பொருளாதார நெருக்கடியை சரியாக புரிந்து கொண்டாலேயே அதற்கான தீர்வைக் காண முடியும்!

பொதுநிதியின் நோக்கம் முழுமைப்படுத்தப்பட வேண்டும் என ஊடக, பெருந்தெருக்கள் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார். தற்பொழுது நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து அவர் எம்முடன் பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

கே: ஒரு பொருளாதார நிபுணர் என்ற ரீதியில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு என்ன வழி இருப்பதாகக் கருதுகின்றீர்கள்?

பதில்: இந்த நெருக்கடியை சரியாகப் புரிந்து கொண்டால், அதற்குத் தீர்வு காண முடியும். எனவே, நெருக்கடியை சரியாக ஆய்வு செய்யாமல் அதற்கான தீர்வுகளை நாம் பரிந்துரைக்க முடியாது. இல்லையெனில், அது வெறும் மிகைப்படுத்தலாக மாறிவிடும். சுதந்திரத்திற்குப் பிறகு, இலங்கையில் உருவான மிகப் பெரிய நெருக்கடி இதுவாகும். கொவிட்-19தொற்றுநோயால் உலகப் பொருளாதாரங்கள் வீழ்ச்சியடைந்த போது, இலங்கைப் பொருளாதாரம் 3.6சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. அவ்வாறான சூழ்நிலையில் பொதுநிதி விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியது. பொதுநிதி நெருக்கடி நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளது.

வரவுசெலவுத் திட்டம் தொடர்ச்சியாகப் பற்றாக்குறையைப் பதிவு செய்திருந்ததுடன், கடனைத் தீர்த்து வட்டியைச் செலுத்த முடியாத நிலைமையை உருவாக்கி, இந்தப் பற்றாக்குறையைக் குறைக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களைத் தாங்க முடியாத அளவுக்கு உயர்த்தியுள்ளது. நாம் சந்தித்த நெருக்கடிகளில் இதுவும் ஒன்று. இரண்டாவது நெருக்கடி என்னவென்றால், பற்றாக்குறையின் காரணமாக பொருளாதாரத்தின் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய உள்ளூர் உற்பத்திகள் இல்லை, இது இறக்குமதியின் அதிகரிப்புக்கு வழிகோலியது.

இருப்பினும், இறக்குமதிச் செலவுகளை ஈடுகட்டுவதற்குப் போதுமான அளவு ஏற்றுமதி அதிகரிக்கப்படவில்லை. இது பாரிய பணச் சமநிலை நெருக்கடிக்கு வழிவகுத்ததுடன், அந்நிய செலாவணியிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இறுதியாக, இந்தக் காரணிகள் அனைத்தும் நாட்டில் பாரிய அந்நிய கையிருப்பு நெருக்கடிக்கு வழிவகுத்தன. தற்போது, வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக தொடர் செலவினங்களைச் செலுத்துவதற்கும், அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும் கூட எங்களிடம் போதுமான பணம் இல்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள், எரிபொருள் மற்றும் உரங்களை இறக்குமதி செய்ய எங்களிடம் அந்நிய செலாவணி இல்லை. இதுதான் இன்று உருவாகியுள்ள நெருக்கடி.

கே: எவ்வாறாயினும், 1989ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி என்ற வகையில், இந்த வளர்ந்து வரும் நெருக்கடியை உங்களால் அடையாளம் காண முடியவில்லையா?

பதில்: 1989ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் எனது கன்னி உரையை ஆற்றியதிலிருந்து, பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இது பற்றி தொடர்ச்சியாகப் பேசி வருகிறேன். வரவுசெலவுத் திட்டத்தில் பாராளுமன்றம் எவ்வாறு தவறாக வழிநடத்தப்படுகிறது என்பது குறித்து சபாநாயகர்களிடம் நான் முறைப்பாடு செய்துள்ளேன். இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த காலத்தில் நான் 12புத்தகங்களை எழுதியுள்ளேன். துரதிர்ஷ்டவசமாக, நான் தனிமைப்படுத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். நாடாளுமன்றம் மற்றும் ஊடகங்களில் இருந்து எனக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. எனக்கு அவமானங்களும் சங்கடங்களும்தான் எஞ்சின.

கே: இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர் என்ற வகையில் அரச தலைவர்களுக்கு விளக்கிக் கூறுவதற்கு முயற்சிக்கவில்லையா?

பதில்: இந்த நிலைமையை அறிந்து கொள்ள அமைச்சரவையிலும் வெளியிலும் நான் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். இருப்பினும், 2000- ஆம் ஆண்டுக்குப் பிறகு என்னால் ஒரு வெற்றிகரமான முயற்சியை மேற்கொள்ள முடிந்தது. கிராமப்புற தொழில்துறை அமைச்சராகவும், பிரதி நிதியமைச்சராகவும் இருந்த போது, இந்த நிலைமை ஏற்படாமல் இருக்க, 2003ஆம் ஆண்டு நிதி முகாமைத்துவப் பொறுப்புச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றினேன். இதன் ஊடாக மூன்று சட்டங்கள் விதிக்கப்பட்டன. வரவுசெலவுப் பற்றாக்குறையை 2006- இற்குள் 5சதவீதமாகக் குறைத்து, அதன் பிறகு 5சதவீதத்துக்கும் குறைவாகப் பராமரிக்க வேண்டும். இரண்டாவது அந்த வரம்பை மீறாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60சதவீதம் வரையிலான அரசாங்கத்தின் செலுத்தப்படாத கடன்களின் மொத்தத் தொகையின் சதவீதத்தை குறைக்க பரிந்துரைக்கப்பட்டது. அது 2013இற்குள் செய்யப்பட வேண்டும். மூன்றாவதாக, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான கடன் 4.5சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும். அந்த மூன்று காரணிகளும் நிறைவேற்றப்பட்டு, திறைசேரி மற்றும் நிதி அமைச்சினால் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தியிருந்தால், இந்தப் பொருளாதார நெருக்கடி தோன்றியிருக்காது. தற்போது, வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை 10சதவீதத்தைத் தாண்டியுள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச கடன் 119சதவீதமாக உள்ளது.

கே: உங்கள் கருத்துப்படி, 2003ஆம் ஆண்டு நிதி முகாமைத்துவப் பொறுப்புச் சட்டமூலத்தை அமுல்படுத்தாமைக்கு யார் பொறுப்பு?

பதில்: அந்தப் பொறுப்பை அரச தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பொருளாதாரத்தைக் கையாள அனுமதிக்காமல் பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தும் சில உயர்மட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். உயர்மட்ட அதிகாரிகளால் இந்தச் சட்டமூலம் மூன்று முறை அதிகாரிகளால் திருத்தப்பட்டமையால் இலக்கை அடைய முடியவில்லை. தற்போதைய பொருளாதார நெருக்கடியில், இந்தச் சட்டமூலத்தை மீண்டும் ஒருமுறை திருத்த வேண்டும். எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக எந்த முறைப்பாடும் செய்யப்படவில்லை, ஆனால் இந்த விடயத்தில் போதிய புரிதல் இல்லாத அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது எப்போதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இலங்கை வரலாற்றில் ஜே.ஆர்.ஜெயவர்தன மற்றும் கலாநிதி என்.எம்.பெரேரா ஆகிய இருவரே நிதியமைச்சர்களாக இருந்தனர். ஏனைய நிதியமைச்சர்கள் பிறரால் தயாரிக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் மற்றும் வழிமுறைகளை அரச தலைவர்கள், ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைத்தனர். இது ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு எம்.பி களுக்கிடையில் பிளவை ஏற்படுத்த வழிவகுத்தது.

கே: வற் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை அதிகரிக்க  அரசாங்கம் எடுத்த தீர்மானத்தினால் மக்கள் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இதனால் நுகர்வுப் பொருட்களுக்கான விலைகள் அதிகரித்துள்ளன? இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: உண்மையில், மக்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்வதைத் தடுக்க இது செய்யப்பட வேண்டும். பணப் பரிமாற்றம், பணம் அச்சிடுதல் மற்றும் பொதுநிதி ஆகியவை ஒரு பாடம். நிதி விடயத்தில் உரிய புரிதல் இல்லாதவர்கள் நடவடிக்கை எடுக்கும் போது நாடு மேலும் வீழ்ச்சியடையும். நான் முன்பே குறிப்பிட்டது போல் வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையை குறைக்க வேண்டும். பொருட்களின் விலை உயர்வதை தடுக்க பட்ஜெட் பற்றாக்குறை குறைக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் இரண்டு உண்மைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒன்று அரசின் வருவாயை அதிகரிப்பது மற்றும் அதன் செலவைக் குறைப்பது. அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ, எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் இதைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். அரசின் வருவாயில் 85சதவீதம் வரி மூலம் பெறப்படுகிறது.

எனவே, வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை குறைக்கும் வகையில் வரிகளை அதிகரிப்பதும், அரசின் செலவினங்களைக் குறைப்பதும் நோக்கமாகும்.

அத்தகைய நடவடிக்கையின் மூலம், வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு அரசாங்கம் நடுத்தர மற்றும் நீண்ட கால தீர்வைக் காண முடியும். 2019இல் வரிகளைக் குறைத்து நீக்குவது என அப்போதைய பிரதமரும் நிதியமைச்சரும் எடுத்த முடிவிற்கு அப்போதைய எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தன. அப்போதைய எதிர்க்கட்சிகள் தங்கள் நண்பர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்காக வரி குறைக்கப்பட்டதாகக் கூறின.

மக்கள் சுமை தாங்க முடியாத நிலையை எட்டிய போது, அதைக் குறைக்க வரிகள் குறைக்கப்பட்டன என்பதை இப்போது அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.வரிகளை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்பதால் அரசின் வருவாய் வெகுவாகக் குறைந்துள்ளது. எனினும், நிதியமைச்சர் 2019ஆம் ஆண்டு சதவீதத்தை விட குறைவான வரிகளை அதிகரித்துள்ளார். வற் வரி தற்போது 12சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேறு வழியில்லாததால், மக்களின் சுமையை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையை விமர்சிப்பவர்களில் சிலர் மாற்று வழியை சமர்ப்பிக்கத் தவறி விட்டனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் மாத வருமானம் ஏறக்குறைய 150முதல் 300அமெரிக்க டொலர்களாகும். ஒரு மில்லியன் இலங்கையர்கள் ஒவ்வொருவரும் 50அமெரிக்க டொலர்களை மாதாந்தம் தமது வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பினால் 50மில்லியன் அமெரிக்க டொலர்களையே எம்மால் பெற முடியும். இந்தப் பணம் ஒரு கப்பலில் எரிபொருள் கொண்டு வருவதற்குக் கூட போதாது. மேலும் இரத்தினக்கற்களை ஏற்றுமதி செய்தால், எரிபொருள் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்ய அந்நிய  செலாவணியை ஈட்ட முடியும் என்றும் சிலர் நினைக்கலாம். எவ்வாறாயினும், இரத்தினக்கற்கள் ஏற்றுமதி மற்றும் ஏனைய கனிமப் பொருட்கள் ஏற்றுமதி மூலம் கடந்த வருடம் நாம் பெற்ற மொத்த வருமானம் 44மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

கே: அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு முன்னர் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இது பற்றிக் கூற முடியுமா?

பதில்: உத்தேச 21ஆவது திருத்தம் தொடர்பில் 225எம்.பி.க்கள் மத்தியில் ஒரேயொரு கருத்து இருக்க முடியாது. இது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினர் இதை செயல்படுத்த ஒப்புக் கொள்ள வேண்டும்.

கே: அரசியலமைப்பின் உத்தேச 21ஆவது திருத்தம் நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை இல்லாதொழிக்க வழிவகுக்கும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை இல்லை. சில முன்னாள் அரசாங்கங்கள் ஒற்றை வாக்கு பெரும்பான்மையுடன் தொடர்ந்த சந்தர்ப்பங்களும் உள்ளன. எங்களிடம் 113 எம்பிக்கள் இருந்தால், ஆட்சியில் ஸ்திரமின்மை என்ன? பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் முந்திய தேர்தல்களில் நாங்கள் தோற்கடிக்கப்பட்டிருப்போம்.

அர்ஜூன்

 

Comments