இலங்கை அணியுடன் மீண்டும் இணையும் லசித் மாலிங்க | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை அணியுடன் மீண்டும் இணையும் லசித் மாலிங்க

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ரி 20மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு ஆலோசகராக முன்னாள் வீரர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ரி 20தொடர்  7ம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ரி 20  தொடர் நிறைவுப்பெற்ற பின்னர் இரண்டு அணிகளுக்கும் இடையிலான 5போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்கள் நடைபெறவுள்ளன. இவ்வாறான நிலையில் இறுதியாக நடைபெற்றுமுடிந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ரி 20  தொடரில் அணியின் வேகப்பந்துவீச்சு ஆலோசகராக செயற்பட்டிருந்த லசித் மாலிங்க, மீண்டும் இலங்கையில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ரி 20  மற்றும் ஒருநாள் தொடர்களில் வேகப்பந்துவீச்சு ஆலோசகராக செயற்படவுள்ளார் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

லசித் மாலிங்க இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு ஆலோசகராக ஏற்கனவே செயற்பட்டிருந்தமை மாத்திரமின்றி, இறுதியாக நடைபெற்றுமுடிந்த ஐபிஎல்  தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டிருந்தார். அதேநேரம், இந்த அணியானது இறுதிப்போட்டிவரை முன்னேறி இரண்டாவது இடத்தை பிடித்துக்கொண்டது.

 லசித் மாலிங்கவின் வருகையானது இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்களின், குறிப்பாக நுவான் துஷார மற்றும் மதீஷ பதிரண ஆகிய மாலிங்க பாணியில் பந்துவீசும் வீரர்களுக்கு மிகச்சிறப்பான அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments