
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து கவலை தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, இனி ஒருபோதும் பாராளுமன்றத்தில் பணியாற்றப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய வருமானம் 1.4டிரில்லியன் ரூபா எனவும், செலவு 3.4டிரில்லியன் ரூபா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசத்தை நேசிக்கும் மற்றும் முறையாக வரி செலுத்திய ஒரு நல்ல மனிதர் எதிர்காலத்தில் பாராளுமன்றத்துக்குள் நுழையக்கூடிய அடுத்த தலைமுறைக்கு வழி வகுக்கும்படி அவர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் முன்னர் 42மில்லியன் ரூபாயை அரசாங்கத்துக்கு வருமான வரியாக செலுத்தியுள்ளேன். நாங்கள் ஐந்து சதம் கூட திருடவில்லை அல்லது எந்த வித மோசடியிலும் ஈடுபடவில்லை.
நான் இங்கு வாதம் செய்வதற்காக வரவில்லை. என் குழந்தைகள் மற்றும் என் பெற்றோருக்காக நான் அச்சமடைகின்றேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், இனி ஒருபோதும் பாராளுமன்றத்தில் பணியாற்றப் போவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டை கட்டியெழுப்புவதற்கும் முன்னெடுத்துச் செல்வதற்கும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.