நோன்பு பெருநாளின் மகிமை | தினகரன் வாரமஞ்சரி

நோன்பு பெருநாளின் மகிமை

ஈத் என்றால் விழா அல்லது மீண்டும் மீண்டும் வரும் மகிழ்ச்சி என்று பொருளாகும். அந்த வகையில் பெருநாள் தொழுகை முஸ்லிம்கள் அனைவருக்கும் மிக முக்கியமானதாக உள்ளது. இது அன்றாடத் தொழுகையின் சிறப்புக்களையும் ஜூம்ஆத் தொழுகையின் பலன்களையும் கொண்டுள்ளதோடு முஸ்லிம்கள் மத்தியில் பிணைப்புகளை வலுப்படுத்தும் தன்மையையும் ஏற்படுத்தக்கூடியதாகும்.

இஸ்லாத்தில் இரண்டு பெருநாட்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஈதுல் பித்ர் என்றழைக்கப்படும் நோன்புப் பெருநாளாகும். இது ரமழான் மாதத்தின் நோன்பு கடமையை நிறைவேற்றியதைத் தொடர்ந்து ஆரம்பமாகும் இஸ்லாமிய வருடக் கணிப்பின் பத்தாவது மாதமான ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படக்கூடியதாகும்.

ரமழான் மாதத்தில் தான் அல் குர்ஆன் அருளப்பட்டது. அதே மாதத்தில் தான் நோன்பு கடமையும் நிறைவேற்றப்படுகிறது.

இரண்டாவது பெருநாள் 'ஈதுல் அழ்ஹா' (தியாகத் திருநாள்) எனப்படும் ஹஜ்ஜுப் பெருநாளாகும். இப்பெருநாள் இஸ்லாமிய வருடக் கணிப்பின் இறுதி மாதமான 'துல்ஹஜ்' பத்தாம் நாளில் கொண்டாடப்படக்கூடியதாகும். அதாவது வருடாவருடம் ஹஜ் கடமை (மக்கா யாத்திரை) நிறைவேற்றப்படுவதைத் தொடர்ந்து இப்பெருநாள் உலகெங்கிலும் முஸ்லிம்களால் கொண்டாடப்படும்.

இஸ்லாமியப் பெருநாட்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. அவை எதற்கும் ஈடான பெருநாட்கள் அல்ல. மிக உயரிய ஆன்மீக ஒழுக்க நெறிகளோடு, குடும்ப, சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தி நிற்கும் தனிப்பண்புகள் பலவற்றை கொண்டுள்ள பெருநாட்களாகும். ஒவ்வொரு முஸ்லிமும் இறைவனின் கட்டளைப்படி தம் கடமையை நிறைவேற்றியதைத் தொடர்ந்து கொண்டாடுவது தான் ஈத் பெருநாட்கள். அந்த வகையில் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இறைவணக்கங்களில் ஈடுபட்டு அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியமைக்காக நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

தமது ஆன்மீகக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு இறைவன் உதவியதற்காக அவனுக்கு நன்றிகூறும் வகையில், முஸ்லிம்கள் அனைவரும், சகோதரத்துவ உணர்வோடும், மன மகிழ்ச்சியோடும் கொண்டாடும் நாளாகவே பெருநாள் விளங்குகிறது. இவ்வாறு நன்றி செலுத்துவது வெறும் பேச்சோடு முடிந்து விடுவதில்லை. அதற்கப்பாலும் அது சமூக மற்றும் மனிதாபிமான உணர்வுகளை வெளிப்படுத்தி நிற்கிறது. ரமழான் மாதத்தின் நோன்பினை வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு நோன்புப் பெருநாளில் தானதர்மங்கள் செய்வதன் மூலமாக (இறைவனுக்குத்) தங்களது நன்றியை இறைவிசுவாசிகளான முஸ்லிம்கள் வெளிப்படுத்துகின்றனர்.

அதேபோன்று (ஹஜ் பெருநாள்) 'ஈதுல் அழ்ஹா' அன்று ஹஜ் கடமையை நிறைவேற்றிய முஸ்லிம்களும் ஏனைய முஸ்லிம்களும் புசிப்பதற்குத் தகுந்த பிராணிகளை அறுத்து எளியவர்களுக்கு பங்கீடு செய்து (குர்பான்) தங்களுடைய நன்றியை வெளிப்படுத்துகின்றார்கள். தானதர்மங்களையும், குர்பானி பொருட்களையும் வழங்குவது பெருநாட்களின் மிக முக்கியமான அம்சங்களாகும். இவ்வாறு நன்றி செலுத்துவது ஆன்மீக உணர்வையும், மனிதாபிமான உணர்வையும் ஒருங்கிணைக்கும் ஒரு உன்னத செயலாக அமைந்திருக்கின்றன. இவ்வாறான உயரிய தனித்துவ மாண்பினை இஸ்லாமிய பெருநாட்கள் கொண்டுள்ளன.

அதேநேரம் ஒவ்வொரு பெருநாளும் இறைவனை நினைவு கூறும் புனிதத் திருநாட்களாக உள்ளன. இஸ்லாத்தில் பெருநாட்கள் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய நாட்கள் என்றாலும் இறைவனைத் தொழுதபடியே அந்த நாட்களை முஸ்லிம்கள் ஆரம்பிக்கின்றனர். இறைவன் தங்களுக்கு அருளிய நலன்களையும் பலன்களையும் நினைவு கூறும் வகையில் அவனைத் தொழுது அவன் திருநாமத்தைப் போற்றிப் புகழ்கிறார்கள். அதோடு இறந்து போனவர்களின் ஆத்ம நலனுக்காகவும் இறைவனிடம் இறைஞ்சுகிறார்கள். வறியவர்களுக்கு உதவி செய்கிறார்கள். துன்பங்களில் உழல்பவர்களுக்கு கருணை காட்டுகிறார்கள். நோயுற்றவர்களை சென்று பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறுகின்றார்கள். தங்களைப் பிரிந்து வெளியூர்களுக்குச் சென்றுள்ள நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாழ்த்துக்கள் கூறி அவர்களையும் எண்ணிப் பார்க்கின்றார்கள். இப்படி எல்லோரையும் எண்ணிப் பார்க்கின்ற ஒரு நாளாகவும் ஈத் பெருநாள் விளங்குகின்றது.

மேலும் ஒவ்வொரு ஈத் பெருநாளும் ஒரு வெற்றித் திருநாளாகும். நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும் தம் கடமைகளை நிறைவேற்றி வந்த ஒவ்வொருவரும் வெற்றியாளராவார். அவர்கள் தமது ஆசைகளின் மீது பலமான கட்டுப்பாடு கொண்டவர்களாகவும், சுயகட்டுப்பாடு உடையவர்களாகவும், அதனை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையை விரும்புபவர்களாகவும் இருக்கின்றனர் என்பதை மெய்ப்பித்துக் காட்டுகின்றனர். ஒருவர் இத்தகைய பண்புகளை பெற்றுவிட்டால், அவர் ஒரு மாபெரும் வெற்றியை அடைந்து விட்டார் என்பது தான் அர்த்தமாகும். ஏனெனில் தன்னைத்தானே கட்டுப்பத்திக் கொள்ளவும் தன்னுடைய ஆசைகளை நெறிப்படுத்திக் கொள்ளவும் அறிந்து கொண்ட ஒருவர் பாவம், தவறு, அச்சம், பலவீனம், கேவலம், பொறாமை, பேராசை, ஏளனம் இன்னும் இவை போன்றவற்றிலிருந்து விடுபட்டவராகவே விளங்குவார். இந்த விடுதலையின் அடையாளமே 'ஈத்' பெருநாளாகும். இப்பெருநாளை வரவேற்கும்போது அவர் உண்மையிலேயே தனது வெற்றிக்கு விழா எடுக்கின்றார் என்றே பொருளாகும். ஆகவே ஈத் எனும் பெருநாள் ஒரு வெற்றித் திருநாளே அன்றி வேறில்லை.

ஒவ்வொரு ஈத் பெருநாளும் நன்மைகளின் அறுவடை நாளாகவும் உள்ளன. இறைபணியில் ஈடுபட்டிருந்த நல்லடியார்கள், நம்பிக்கையாளர் அனைவரும் தங்களது நற்செயல்களுக்கான பலன்களை அந்தப் பெருநாளன்று அறுவடை செய்து கொள்கின்றனர். இறைவன் தனது கருணையையும் பாக்கியங்களையும் அவர்களுக்கு வாரி வழங்குகின்றான்.

சகோதரத்துவம், அன்பு, பரிவு, பாசம் இவற்றை முஸ்லிம்கள் ஏனையோருடன் பரிமாறிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பெருநாளிலும் எல்லா முஸ்லிம்களுமே நன்மையை அடைகிறார்கள். தன்னைப் போன்ற நம்பிக்கையாளர்களின் நலனில் அக்கறை கொள்ளும் நம்பிக்கையாளர்களுக்கு அன்று இறைவன் தன் அருட்கொடைகளை அள்ளித் தருகின்றான். வறியவர்களுக்கு அன்றைய தினம் சக நம்பிக்கையாளர்களின் அன்பளிப்புகளும், அன்பும் கிடைக்கின்றன. ஆகவே ஒவ்வொரு பொருநாளும் இறைவனின் கருணை, அன்பு ஏனைய முஸ்லிம்களின் அன்பளிப்பு, பாசம், பரிவு இவற்றின் அறுவடை நாளாக விளங்குகின்றன.

மேலும் ஒவ்வொரு ஈத் பெருநாளும் பாவமன்னிப்புப் பெறும் நாளாகவும் திகழுகின்றன. முஸ்லிம்கள் அனைவரும் பெருநாள் தொழுகைக்கு ஒன்றாக கூடும்போது, இறைவனிடம் மன்னிப்புக் கோருகின்றார்கள். தங்களது நம்பிக்கை மேலும் உறுதிபெற இறைஞ்சுகின்றார்கள். தூய்மையான உள்ளத்தோடு தன்னிடம் கோருகின்றவர்களுக்கு மன்னிப்பு அருளுவதாக இறைவன் உறுதி கூறுகின்றான். பெருநாள் தொழுகைகாக ஒன்று கூடுகின்ற அந்த புனிதக் கூட்டத்தில், இன்னொரு நம்பிக்கையாளருக்கு எதிரான எண்ணங்களை கொள்வதற்கு ஒரு முஸ்லிம் வெட்கப்படவே செய்வான். சகோதரத்துவமும் ஆன்மீகமும் ஒருங்கிணைந்து விளங்கும் இந்தக் கூட்டத்தில் மகிழ்ச்சியும் நல்லெண்ணமுமே எல்லோர் உள்ளத்திலும் இருக்கும். தீய எண்ணங்கள் எதுவும் அவர்களின் உள்ளங்களில் இருக்காது. அப்படி ஏதேனும் தீய எண்ணங்கள் ஒருவரிடம் தலைதூக்குமேயானால், அதனை அவர் அகற்றிடுவார். தன்னுடைய இதயத்தையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்துவதற்காக பெருநாளின் புனிதமான சூழ்நிலையில் அவர் மற்றவர்களுடன் கலந்து பழகுவார். இந்த நல்ல நாளில் தனக்கு தீங்கிழைத்தவர்களை அவர் மன்னித்துவீடுவார்.

ஏனெனில் அவர் இழைத்த தவறுகளுக்காக அவரும் இறைவனிடம் மன்னிப்புக் கோரும் நாளாக அது உள்ளது. இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்காக தன்னால் முடிந்ததையெல்லாம் அவர் செய்கிறார். இறையச்சம் மிகுந்திருக்கும் இந்தக் கூட்டத்தின் புனிதமான நிலை, அவர் மற்றவர்களை மன்னித்தால் அவரை இறைவன் மன்னிப்பான் என்ற தத்துவத்தை அவருக்கு புகட்டுகின்றது. அவர் மன்னிக்கும்போது இறையருள் அவருக்கு கிடைக்கின்றது. இப்படி ஒவ்வோரு பெருநாளும் பாவமன்னிப்பு பெறும் நாளாகிறது.

அத்தோடு ஒவ்வோரு பெருநாளும் ஓர் அமைதி நாளாகவும் உள்ளன. இறைவனின் வழிகாட்டுதல்கள் படி வாழ்வதன் மூலம் ஒரு முஸ்லிம் தன் இதயத்திலே அமைதியை நிலைநாட்டுகின்றார். இதன் ஊடாக இறைவனுடன் ஒர் அழிக்க முடியாத அமைதி உடன்படிக்கையை அவர் செய்து கொள்கிறார். இதன் விளைவாக அவர் தன்னை சுற்றியுள்ள உலகத்தோடும் அமைதியோடு வாழ்கிறார். ஒருவர் ஈத் எனப்படும் பெருநாளை மன மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார் என்றால் அவர் இறைவனுடன் செய்து கொள்ளும் அமைதி உடன்படிக்கையை நிறைவேற்றுகின்றார் என்றுதான் பொருளாகும். ஆகவே ஈத் எனப்படும் பெருநாள் ஓர் அமைதித் திருநாளகும்.

இதுவே பெருநாட்களின் பொருளாகும். அந்த வகையில் நோன்பு பெருநாள் ஒரு அமைதி நாள். நன்றி செலுத்தும் நாள். மன்னிப்பு நாள். வெற்றியின் விழா நாள். நன்மையை அறுவடை செய்யும் நாள். சாதனைகள் நிறைவடைந்த நிறைவு நாள். நல்லோர்களையும், நண்பர்களையும் நினைவுகூறும் நாள். இவற்றிற்கெல்லாம் மேலாக அது இஸ்லாத்தின் நாள். இறைவனின் நாள் என்றால் அது மிகையாகாது.

ஈத் முபாரக்

மௌலவி

எம்.யூ.எம். வாலிஹ்

(அல் அஸ்ஹரி, பாரி)

வெலிகம

Comments