தேசத்தந்தை டி.எஸ்.சேனாநாயக்க | தினகரன் வாரமஞ்சரி

தேசத்தந்தை டி.எஸ்.சேனாநாயக்க

இலங்கையின் முதலாவது பிரதமரும் இலங்கையின் தேசத்தந்தையுமான டி.எஸ்.சேனாநாயக்க 1884 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நீர்கொழும்பு போதலே எனும் இடத்தில் முதலி தொன் ஸ்பாமர் சேனாநாயக்க மற்றும் டொன் கெத்தரினா எலிசபெத் பெரேரா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.

தனது இளமைக்கால கல்வியை கொழும்பு சென். தோமஸ் கல்லூரியில் பயின்றார். பின்னர் சிறிதுகாலம் நில அளவை திணைக்களத்தில் எழுத்தாளராக பணியாற்றினார். 1914 ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாம் உலக மகா யுத்தத்தோடு கடந்த 1915 ஆம் ஆண்டு இலங்கையில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் தனது சகோதரரான எப்.ஆர்.சேனாநாயக்கவின் மூலமாக 1926 ஆம் ஆண்டு அவர் விடுவிக்கப்பட்டார்.

இலங்கையின் அமைதிக்காகவும் சுதந்திரத்திற்காகவும் பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட அவர் 1929 ஆம் ஆண்டு இலங்கை சட்டவாக்க கழகத்தில் ஓர் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். 1931 ஆம் ஆண்டு மினுவாங்கொட பிரதேச சபையின் ஊடாக மாநில அவைக்கு தெரிவு செய்யப்பட்டு, வேளாண்மை காணி அமைச்சராக பதவியேற்று வேளாண்மை மறுமலர்ச்சிக்கென பாரியளவிலான சேவைகளை வழங்கியுள்ளார். பிரித்தானியர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிய பின்னர் 1946 ஆம் ஆண்டு டி.எஸ்.சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியை ஸ்தாபித்தார். 1947 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற முதலாவது தேர்தலில் வெற்றிபெற்று இலங்கையின் முதலாவது பிரதமராக பதவியேற்றார்.

அவரின் பதவிக்காலத்தின் போது பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நைட் பட்டத்தை மறுத்த அவர் தொடர்ந்தும் பிரித்தானியர்களுடன் நல்லுறவினை மேம்படுத்தி வந்தார். இந்நிலையில் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கையில் பிரித்தானியரின் ஆதிக்கம் முழுமையாக நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து சுதந்திரமடைந்த இலங்கையை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று சிறந்த தலைவராக ஆட்சி செய்தார். அதனைத்தொடர்ந்து மக்களுக்கான பல நலத்திட்டங்களை முன்னெடுத்த அவர் கல்லோயா திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.

நாட்டிலுள்ள சகல இன மக்களுக்கும் மரியாதைக்குரிய தலைவராக டி.எஸ்.சேனாநாயக்க விளங்கினார். இவர் மோலி துனுவில என்பவரை திருமணம் முடித்து அவருக்கு டட்லி சேனாநாயக்க மற்றும் ரொபர்ட் சேனாநாயக்க ஆகிய இரு புதல்வர்கள் இருந்தனர்.

1952 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி காலிமுகத்திடலில் குதிரைச் சவாரியில் இருந்த போது தவறி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு பின்னர் அவரது மகனான ட்டலி சேனாநாயக்க இலங்கையின் பிரதமராக பதவியேற்றார். இலங்கை வரலாற்றில் முதல் தலைவர் என்ற பெருமைக்குரிய டி.எஸ்.சேனாநாயக்க இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய தலைவர்களில் ஒருவராவார்.

சுஸ்மிதன் ஆனந்தன்,
தரம் 12,
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம்,
நோர்வூட்.

Comments