தமிழக சட்டமன்ற தேர்தல்; வெற்றிக்கனி யாருக்கு...! | தினகரன் வாரமஞ்சரி

தமிழக சட்டமன்ற தேர்தல்; வெற்றிக்கனி யாருக்கு...!

காமராஜர் தலைமையிலான காங்கிரஸுக்குப் பின் இந்திய மத்திய அரசின் ஆட்சியாளர்களான காங்கிரஸோ பிஜேபியோ தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை. மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியவர் ஜெயராம்
ஜெயலலிதா, என்ற வீரச்சொல்லை அம்மையார் இறக்கும் வரை தக்க வைத்திருந்தார். இரு தடவை வாஜ்பாய் அரசு கவிழ காரணமாகவும் ஜெயலலிதா இருந்துள்ளார்.

மன்னார் குடி சசிகலாவின் நட்புக்குப்பின் ஜெயலலிதா வின் அரசியல் செல்வாக்கு சரியத் தொடங்கியது. இதனை கலைஞர் கருணாநிதியின் அரசியல் சாணக்கியம் சரியாக பயன்படுத்திக் கொண்டது. ஜெயலலிதா மீதும் அவர் தோழி சசிகலா போன்றோர் மீதும் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடுத்து, சில ஆண்டுகள் பெங்களூரு பார்ப்பன அக்ரஹாரத்தில் சிறைவாசம் அனுபவிக்கச் செய்தது திமுக. இதன் மூலம் அதிமுகவை சின்னாப்பின்னமாக்கவும் திமுக முனைந்தது. ஆயினும், மேன் முறையீடு செய்து வழக்கில் வென்று புதுத்தெம்புடன் பீஃனிக்ஸ் பறவைப் போல் எழுந்து தமிழகத்தின் முதல்வராக மறையும் வரை இருந்தார் ஜெயலலிதா.

இந்தியாவின் பிரதமர் பதவிக்கான அத்தனை தகைமைகளும் ஜெயலலிதா என்ற இரும்பு பெண்மணிக்கு இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கட்டியம் கூறினர். மக்கள் திலகம் போல் "அம்மா "என்றழைக்கப்பட்ட ஜெயலலிதா, உண்மையிலேயே தமிழகத்தின் ஆதர்ஷ சக்தியே. அவர் சிறையில் இருந்த போது அவரது தீவிர விசுவாசியான ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் முதல்வராக சில வருடகள் பதவியில் இருந்தார். டிசம்பர் 05.2016 ஜெயலலிதா மறைந்த பின் அவரது அந்தரங்கத் தோழியான சசிகலாவின் வலுவான கரங்களில் அதிமுக சிக்குண்டது. சசிகலா "சின்னம்மா ஆனார். அதிமுக பிளவுபட்டு விடுமோ என்ற சூழ்நிலை உருவானது. அப்போது சசிகலா தலைமையில் நடந்த அதிமுக கட்சி செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஓர் ஜந்துவைப் போல் ஊர்ந்து சென்று சசிகலாவின் பாதங்களில் வீழ்ந்தார். இந்நிகழ்வு பல ஊடகங்களில் விஸ்வரூபமாக காட்சிப்படுத்தப்பட்டது.

பின் எடப்பாடி பழனிச்சாமி தமிகத்தின் முதல்வராக தற்போது வரை உள்ளார் என்பது தெரிந்த விடயமே. இருப்பினும் நீறு பூத்த நெருப்பாக அதிமுகவில் இன்னும் கோஷ்டிப்பூசல் உள்ளது. தற்போதைய நிலையில் கண்களுக்கு புலப்படாத பல அணிகளாக பிளவுபட்ட நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கியுள்ளது அதிமுக. தென்னிந்திய அரசியல் களத்தில் கர்நாடகத்தைத் தவிர பிஜேபி மற்ற மாநிலங்களில் தன் ஆளுமையை வேரூன்ற நினைத்த தருணங்களில் அது வெறும் பகற்கனவாகவே இதுகாறும் உள்ளது. தமிழக அரசைப் பொறுத்த வரையில் அது மத்திய அரசான பிஜேபி யின் கைப்பாவையாகவே உள்ளதென எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை அள்ளி வீசுவதிலும் சில உண்மைகள் இல்லாமல் இல்லை.
ஒரு காலத்தில் தனது வீரியம் கொண்ட அரசியல் அனுபவங்களால் மத்திய அரசையே ஆட்டிப் படைத்த ஜெயலலிதாவின் கொள்கைகள் எடப்பாடி பழனிச்சாமி அரசில் காற்றில் பறக்கவிட்டிருப்பது முற்றிலும் உண்மையே.

சமீபத்திய நிகழ்வுகள் அனைத்தும் இத்தேர்தலில் அதிமுக பாரிய தோல்வியைத் தழுவும் சூழ்நிலையே அதிகம் காணப்படுவதாக உணர்த்துகின்றது. அதற்கான காரணங்கள், கட்சிக்குள் ஐக்கியமின்மை, முன்னுக்குப்பின் மரணாக அமைந்த அதிமுக அமைச்சர்களின் பேச்சுகள்,செம்பரம்பாக்கம் நீர் நிலை உடைப்பு அனர்த்தம், தூத்துக்குடி ஸ்ட்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டு சம்பவம், சசிகலா, தினகரனின் போர்க்கொடி, தமிழக மக்களுக்கு பிடிக்காத எட்டு வழிச்சாலைத் திட்டம், எதிர்க்கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் காப்பி, பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்காமை, தமிழக விவசாயிகளை திருப்தி படுத்தாமை, தமிழகத்துக்கு ஒவ்வாத பிஜேபியுடனான கூட்டணி, நாம் தமிழர், மக்கள் நீதி மையம் போன்ற சிறிய கட்சிகளால் ஏற்படும் வாக்குச் சிதறல்கள், ஜெனிவா கூட்டத்தொடரில் இந்திய மத்திய அரசு இலங்கைத் தமிழர்க்கெதிராக நடுநிலை வகித்தது, அதைக் கிஞ்சித்தும் கண்டு கொள்ளாத எடப்பாடி பழனிச்சாமி யின் அரசு, ஆர்.கே. நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தினகரனிடம் படுதோல்வி கண்டது, தமிழக மக்களுக்கு பிடிக்காத சில விடங்களை மத்திய அரசின் ஆணைக்கிணங்கி அமல் படுத்தியமை, நீட் தேர்வு கல்வி முறை, விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாமை, திமுக வில் துரைமுருகன், ஆர்.ராசா, திருச்சி சிவா, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், சுப.வீரபாண்டியன், திண்டுக்கல் ஐ.லியோனி, மதிமுக வில் வைகோ, நாம் தமிழர் கட்சியில் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் போன்ற சிறந்த பேச்சாற்றல் கொண்ட வல்லுனர்கள் அதிமுக வில் இல்லாமை, கட்சியை ஜெயலலிதா போல் கட்டுக்குள் கொண்டு வரத் தவறியமை போன்ற காரணங்களால் அதிமுக இத்தேர்தலில் தோல்வியைத் தழுவும் என்பதே யூகம். மாறாக சமீபத்தில் நடந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் திமுக வினர் பெற்ற இமாலய வெற்றி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் வழுவான அதிக எம்.எல்.ஏக்களை கொண்ட எதிர்க்கட்சியாகவும் திமுக திகழ்கின்றமை, அத்துடன் எம்ஜியார் ஆட்சிக்குப் பின் தமிழகத்தில் மாற்றங்களையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

இதில் உபரிக்கட்சிகளான நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம், சீமானின் நாம் தமிழர் போன்ற கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரம் இம்முறை சற்று அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது. அனால் இக்கட்சியினர் ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் கடுகளவேனும் இல்லை என்றே கூறவேண்டும்.

கோவைத் தெற்கில் போட்டியிடும் கமலஹாசன் வேண்டுமானால் ஒரு வேளை வெற்றி பெற்று சட்டமன்றம் செல்ல வாய்ப்புண்டு, ஏனெனில் அத்தொகுதியில் எதிரணியில் களம் காணும் வானதி சீனிவாசன் பிஜேபி சார்பில் போட்டியிடுவது கமலஹாசனின் வெற்றிக்கு சிலவேளை சாதகமாக அமையலாம்.

அத்தொகுதியில் போட்டியிடும் திமுகவின் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான மயூரா ஜெயக்குமார் வேண்டுமானால் இரண்டாம் நிலைக்கு வரும் சாத்தியக்கூறுகள் அதிகம் எனக்கூறலாம். இம்முறையும் பிஜேபி பல இடங்களில் தோல்வியைத் தழுவும். இதற்கு தமிழ் நாட்டின் பிஜேபியினர் நடத்திய வேல் யாத்திரை அப்பட்டமான தேர்தல் சாயம் கொண்டதென கடும் விமர்சனங்களுக்கு ஆளானமை, பிஜேபியின் தமிழ் நாட்டு ஏஜனட்டுகளான எஸ்.வி.சேகர், எச் ராஜா போன்றோரின் செயற்பாடுகள் மக்களை முகம் சுளிக்க வைத்ததும் ஒரு காரணம்.

திமுகவின் சக்காரியா ஊழல், 2 ஜி ஸ்பெக்ரம் ஊழல் போன்றவைகளையும் மக்கள் மறந்தவர்கள் இல்லை. ஆயினும் இன்றைய சூழலில் அதிமுக வினரின் திமுக வினருக்கெதிரான பிரசாரங்கள் பெரிதளவில் எடுபடுவதாகத் தோன்றவில்லை.
சசிகலாவின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் இம்முறை ஓரளவிற்கு வாக்குகளை பெறக்கூடிய நிலையுள்ளது. ஆயினும் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை. புதுவையில் பிஜேபி கவர்னராக இருந்த கிரண்பேடியின் நடவடிக்கைகள் மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டியது. இதன் எதிரொலியாக அங்கு ரெங்கசாமி பிஜேபி கூட்டணியும் தோல்வியடையும் சூழலே அதிகம் காணக்கூடியதாக இருக்கின்றது.

இங்கும் திமுக கூட்டணி வெற்றி வாகை சூடும் வாய்ப்பு அதிகமுள்ளது. தேமுதிக ஸ்தாபகர் விஜயகாந்த் உண்மையிலேயே மக்களுக்கு சேவை செய்யும் நல்லெண்ணத்திலேயே கட்சி ஆரம்பித்து அரசியல் களம் கண்டு ஓரளவிற்கு தமிழக மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற ஓர் அரசியல் தலைவராக இருந்தது என்னவோ உண்மையே. பலருக்கும் பல உதவிகளை நல்கிய பரோபகாரி விஜயகாந்த். நாளடைவில் அவரின் தடுமாற்றம் நிறைந்த பேச்சுகள் மக்களை வெறுப்படையச்செய்தன.

இதற்கு காரணம் கட்சியின் ஆளுமையை மைத்துனன் சுதீஷ் மற்றும் மனைவி பிரேமலதா போன்றோரின், கட்சி உரிமைகள் சுவீகரிப்பும், செயற்பாடுகளுமே எனக் கூறினால் இக்கருத்தில் ஆழம் நிறைந்த உண்மைகளும் நிறையவுண்டு. ஒரு சில ஊடகங்கள் விஜயகாந்தை கோமாளியாக சித்தரித்தது. தமிழ்த் திரையில் பலமாக கோலோச்சிய கேப்டன் விஜயகாந்த் அரசியலில் தன் பலத்தை தக்க வைக்க தவறிவிட்டார் .அதற்கு அவரது உடல் நிலையும் ஒத்துழைப்பு வழங்கவில்லை.

ஜெயலலிதா இருந்தபோது அதிமுக வுடன் கூட்டணி அமைத்து 28 தொகுதிகளில் வெற்றி ஈட்டிய தேமுதிக நாளடைவில் ஜெயலலிதாவை பகைக்கும் வகையில் காய்களை நகர்த்த அதன் செல்வாக்கு சரியத் தொடங்கியது. தன்னை தமிழக மக்கள் எம்ஜியார் ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கும் ஓர் மாயத்தோற்றத்தை தமது ரசிகர்கள் வாயிலாக, அதீத தன்னம்பிக்கையின் அடிப்படையில் நம்பிய விளைவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.

இத்தேர்தலிலும் தேமுதிக பெரிதாக ஒன்றும் சாதிக்கும் நிலையில்லை. சரத்குமாரும் தான் சார்ந்த நாடார் சமூக மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஓரளவிற்கு தாக்குப்பிடித்தார்.

இருப்பினும் அதே சமூகத்தைச் சார்ந்த கர்மவீரர் காமராஜர் போல் அவராலும்,அவரின் மக்கள் சமத்துவக்கட்சியாலும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியாமல் போனது .

வன்னியர் வாக்கு வங்கியை மேலாக நம்பியிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராம்தாஸ், அவர் மகன் அன்புமணி ராம்தாஸ் போன்றோருக்கும் இத்தேர்தல் ஒரு சோதனையே.

தமிழகத்தின் இரு பெரும் அரசியல் சாணக்கியம் நிறைந்த தூண்களான கலைஞர் கருணாநிதியும், அம்மா என்ற ஆதர்ஷ சகதியான ஜெயலலிதா ஜெயராமும் இல்லாத ஓர் களமாக இத்தேர்தல் அமைந்திருக்கின்றது.

ஆயினும் திமுக, அதிமுக ஆகிய இமாலய திராவிடக் கட்சியினர்களுக்கே நேரடிப் போட்டி. தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை மக்கள் ஒப்படைப்பது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினருக்கா, கலைஞர் கருணாநிதியின் வாரிசாகிய திமுக தலைவர் ஸ்டேலினிடமா,என்பது இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் தமிழகத்தின் தலைவிதி தீர்மானிக்கப்படும். 234 தொகுதிகளில் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றி ஸ்டேலின் தலைமையில் திமுக ஆட்சி அமைப்பது உறுதி என்பதை தமிழகத்தில் தற்போது நிகழும் சூழ்நிலைகளை வைத்து அறுதியிட்டு கூறலாம்...!

ஸாஹித்ய ரத்னா
எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ்
கம்பளை

Comments