வவுனியாவில் கைக்குண்டுகள் செயலிழந்த நிலையில் மீட்பு | தினகரன் வாரமஞ்சரி

வவுனியாவில் கைக்குண்டுகள் செயலிழந்த நிலையில் மீட்பு

இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படுவதாக கருதப்படும் இரு கைக்குண்டுகள் செயலிழந்த நிலையில் வவுனியாவில் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா, ஈரப்பெரியகுளம், நவகமுவ பகுதியில் இவ்விரு கைக்குண்டுகளும் (16) மாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியிலுள்ள வெற்றுக் காணியொன்றில் மழை காரணமாக மண் அரித்துச் செல்லப்பட்ட இடத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்பட்டதையடுத்து ஈரப்பெரியகுளம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர். இரு கைக்குண்டுகளும் இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படுகின்ற மில்ஸ் 36 வகையைச் சேர்ந்த கைக்குண்டுகள் எனவும், அவை செயலிழந்து காணப்பட்டமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இரு கைக்குண்டுகளையும் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இப் பகுதியில் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாமென்ற சந்தேகத்தில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று அப்பகுதியில் நிலத்தை அகழ்ந்து தேடுதல் மேற்கொள்ளவும் பொலிசாரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா விசேட நிருபர்

Comments