கொவிட் 19 தடுப்பூசி அச்சமடைய தேவையில்லை | தினகரன் வாரமஞ்சரி

கொவிட் 19 தடுப்பூசி அச்சமடைய தேவையில்லை

இலங்கையில் கொவிட் 19 தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்ற தற்போதைய சூழலில் இத்தொற்றுக்கு உள்ளானவர்களாகப் பதிவாகின்றவர்களதும் உயிரிழப்பவர்களதும் எண்ணிக்கையில் அதிகரிப்பு அவதானிக்கப்படுகின்றது. அத்தோடு பிரித்தானியாவில் பரவும் திரிபடைந்த கொவிட் 19 வைரஸும் இலங்கையில் இனம்காணப்பட்டுள்ளது. இதேவேளை, இத்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியின் முதல் சொட்டைப் பெற்றுக்கொண்ட ஒரு சிலருக்கும் இத்தொற்று ஏற்பட்டுள்ளது.கொவிட் தடுப்பூசி பற்றி பல்வேறான சந் ​தேகங்கள் மக்கள் மனங்களில் நிலவும் நிலையில் அவை குறித்த விரிவான விளக்கங்களைத் தருகிறார்  சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதம தொற்று நோயியல் மருத்துவ  நிபுணர் சுதத் சமரவீர 'தினகரன் வார மஞ்சரி'க்கு  அவர் அளித்த விஷேட பேட்டி.

கேள்வி: - உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொவிட் 19 தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்து இலங்கையிலும் வழங்கப்படுகிறது. என்றாலும் இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட ஒரு சிலருக்கும் இத்தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றதே?

பதில்:  பொதுவாக தலைவலிக்கு நிவாரணியாக 'பனடோல்' பெற்றுக்கொள்ளப்படுகின்றது. அதற்காக எல்லோருக்கும் தலைவலி குணமடைவதில்லை. அதேபோன்று தான் தடுப்பு மருந்தும். தடுப்பு மருந்துகளில் 'அசிட்டெசிட்' என்ற பொருள் காணப்படுகின்றது. அது இத்தடுப்பு மருந்திலும் உள்ளது. அப்பொருள் ஒரு சிலருக்கு 78முதல் - 80 வீதம் செயற்படாது. அதனால் அவ்வாறானவர்களுக்கு இத்தொற்று ஏற்படலாம். ஆகவே தான் இத்தடுப்பூசியைப் பெற்றாலும் சுகாதாரத் துறையினர் வழங்கியுள்ள அறிவுரைகளைத் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்துகின்றோம். 

அதேநேரம் இத்தடுப்பூசி வழங்கப்படும் தினத்தில் அதனைப் பெற்றுக்கொள்பவரின் உடலில் இவ்வைரஸ் உள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில் பரீட்சிக்கப்படுவதில்லை. உடலில் எதுவித நோய் நிலையும் இல்லாதவர்களுக்கு தடுப்பூசி வழங்குகின்றோம்.

ஆனால் இந்நாட்டில் அடையாளம் காணப்படுகின்ற கொவிட் 19 தொற்றாளர்களில் அனேகருக்கு இத்தொற்றுக்கான அறிகுறிகள் வெளியே தென்படுபவதில்லை. அதனால் இத்தடுப்பு மருந்தைப் பெறும் போது ஒரிருவரது உடல்களில் நாமறியாத வகையில் இவ்வைரஸ் காணப்பட்டிருக்கலாம். அதன் விளைவாக இத்தடுப்பூசியைப் பெற்ற பின்னர் இத்தொற்றுக்கான நோய் நிலை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இத்தடுப்பூசி செலுத்தப்பட்டு அது உடலில் செயற்பாட்டு நிலையை அடையவும் குறிப்பிடத்தக்க நேரம் தேவை. அதற்கு போதிய காலம் கிடைக்கப்பெறாததன் விளைவாகவும் இத்தொற்று ஏற்படின் நோய்க்கான அறிகுறிகள்  வெளிப்படலாம்.

அதாவது ஒருவர் இத்தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டதும் அவரது உடலில் இத்தொற்றுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி உருவாகி பலமடையும். இதற்கு இரண்டு வாரங்கள் முதல் சிறிது காலம் தேவைப்படும். இடைப்பட்ட காலப்பகுதியில் உடலில் இவ்வைரஸ் காணப்படுமாயின் இந்நோய் ஏற்பட முடியும்.
மற்றப்படி  இத்தடுப்பு மருந்தில் பிரச்சினைகள் இல்லை. தடுப்பு மருந்து பெற்றுக்கொள்பவரின் உடல் நிலைமைக்கு ஏற்பவே அதன் செயற்பாடு அமைகின்றது.

கேள்வி: - அப்படியென்றால் இத்தடுப்பூசி வழங்கப்பட முன்னர் அன்டிஜன் அல்லது பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லையா?

பதில்-: இல்லை. அவ்வாறு பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.  ஏனெனில் அன்டிஜன் பரிசோதனை செய்தாலும் சிலர்  தவறிவிடலாம். இவ்வாறு பரிசோதனை செய்து தடுப்பு மருந்து வழங்கப் போனால் முழு நாட்டு மக்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும். அதன் விளைவாக  தடுப்பூசி வழக்கப்பட முன்னர் பரிசோதனை செய்யப்படுவதில்லை.

கேள்வி: - இத்தடுப்பு மருந்தை ஒவ்வொருவருக்கும்  இரு தடவைகள்  வழங்குவது அவசியமா?

பதில் :- ஆம். தற்போது இங்கு அஸ்ட்ரா செனகா தடுப்பு மருந்து வழங்கப்படுகின்றது. இதே தடுப்பு மருந்தே இரண்டாவது சொட்டும் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் சிறந்த பெறுபேறு கிடைக்கப்பெறும் எனக் கருதுகின்றோம். ஆனால் கொவிட் 19 தொற்று கட்டுப்பாட்டுக்காக உலகில் நான்கைந்து தடுப்பு மருந்துகள் வந்துள்ளன.
அதனால் ஒருவருக்கு முதல் தடவை ஒரு வகைத் தடுப்பு மருந்தையும் இரண்டாம் தடவை மற்றொரு வகைத் தடுப்பு மருந்தையும் வழங்க முடியுமா என நாம் இன்னும் ஆராய்ச்சி செய்யவில்லை. ஆனால் ஐக்கிய அமெரிக்காவில் முதலில் பைஸர் தடுப்பு மருந்தை வழங்கி,  இரண்டாம் தடவை அஸ்ட்ரா செனகா தடுப்பு மருந்து வழங்கப்படுவதாக அறிகின்றோம். 

ஆனால் நாம் முதலில் வழங்கிய தடுப்பு மருந்தையே இரண்டாம் தடவையும் வழங்க எதிர்பார்க்கின்றோம். தற்போதைய ஆராய்ச்சி சான்றுகளின் படியே அவ்வாறு செயற்படுகின்றோம். இந்த ஆராய்ச்சிகளில் எதிர்காலத்தில் முன்னேற்றங்கள் ஏற்படுமாயின் அவற்றுக்கு ஏற்ப மாற்றங்களை மேற்கொள்ளலாம்.

அதாவது முதலில் ஒன்றை வழங்கிவிட்டு இரண்டாம் தடவை மற்றொன்றை வழங்க முடியும். 

மேலும்  இத்தடுப்பு மருந்தின் முதல் சொட்டை வழங்கி  நான்கு வாரங்களுக்குள் இரண்டாவது சொட்டையும் வழங்கிவிடும் நோக்கில் தான் இத்தடுப்பு மருந்து வழங்கும்  திட்டத்தை ஆரம்பித்தோம். ஆனால் இத்தடுப்பு மருந்தின் இரண்டாம் சொட்டை  08 -முதல்  12 வாரங்களில் வழங்கினால் அதிக பயன்மிக்கதாக அமையும்.

அது தடுப்பூசி பெறுபவருக்கு அதிக  பாதுகாப்பாகவும்  இருக்கும் என ஆராய்ச்சிகளில் தெரிய வந்திருக்கின்றது. அதனால் முதல் சொட்டை வழங்கி 10 - 12 வார காலப்பகுதியில் இரண்டாவது சொட்டை வழங்கவென தொழில்நுட்பக் குழுக்களில் நாம் தீர்மானங்கள் எடுத்துள்ளோம்.

கேள்வி: இத்தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டுள்ள ஒரு சிலருக்கு மூட்டு வலி, காய்ச்சல், உடல்வலி  போன்றவாறான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றதே?

பதில்: - தடுப்பு மருந்து பெறுபவர்களுக்கு காய்ச்சல், உடல் வலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவது சாதாரணமான விடயம். அந்த வகையில் கடந்த ஜனவரி 29 முதல் இற்றை வரையும் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இத்தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் எவருக்கும் கடுமையான ஒவ்வாமை போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டதாக இற்றைவரையும்  பதிவுகள் இல்லை.

இந்நாட்டில் சிறு குழந்தைகளுக்கு தான் பெரும்பாலும் தடுப்பூசி  வழங்கப்படுகின்றது. வளர்ந்தவர்களுக்கென வழங்கப்படும் தடுப்பூசி  இதுவேயாகும். தடுப்பூசி வழங்கப்படும் போது ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து குழந்தைகளால்  வெளியே சொல்லத் தெரிவதில்லை.  அதனால் அவர்களுக்கு ஏற்படும் எல்லா பக்க விளைவுகளையும் எம்மால் அறிய முடியாதுள்ளது. ஆனால் இவ்வாறான பக்க விளைவுகள் குறைந்தளவிலோ அல்லது அதிகமாகவோ குழந்தைகளுக்கும் ஏற்படவே செய்கின்றது.

பொதுவாகத் தடுப்பு மருந்தொன்றை வழங்கும் போது அம்மருந்தைப் பெற்றுக்கொள்ளும் உடல் அத்தடுப்பு மருந்தைத் தமக்கு எதிரானதாகவே முதலில் கருதும். அதன் விளைவாக காய்ச்சல், உடல் வலி போன்றவாறான  அறிகுறிகள் வெளிப்படுகின்றது. இவை உடல் பாதுகாப்பு கட்டமைப்பின் இடையீட்டு வெளிப்பாடுகளாகும். அதாவது தடுப்பூசி பெற்றுக்கொண்டதும் உடலில் நிர்ப்பீடனத் தொகுதி (immune system) செயற்படத் தொடங்கும். அதன் விளைவாக அவ்வாறான நோய் அறிகுறிகள் வெளிப்படுகின்றன. இது சாதாரண விடயம். எனினும் இத்தடுப்பு மருந்தினால் தீவிர ஒவ்வாமை போன்ற பக்கவிளைவுகள்  ஏற்படுகின்றதா என்பது குறித்தும் நாம் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றோம்.

கேள்வி: - தற்போது தடுப்பூசி வழங்கப்படுகின்ற போதிலும் இத்தொற்றுக்கு உள்ளாகின்றவர்களதும் மரணமடைகின்றவர்களதும் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றதே?

பதில்-: இத்தடுப்பூசி வழங்கப்பட ஆரம்பித்து தற்போது தான் இரண்டு வாரங்களாகியுள்ளன. அதிலும் சுகாதாரத் துறையினருக்குத் தான் முதலில் வழங்கப்பட்டது. அச்சமயம் பொது மக்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் பொதுமக்கள் மத்தியில் தான் இத்தொற்று பதிவாகின்றது. அதேநேரம் இத்தடுப்பு மருந்து வழங்கப்பட்டு அது செயற்பட சுமார் இரு வாரங்களுக்கு மேல் செல்லும். அதன் பின்னர் கொவிட் 19 தொற்று தாக்கத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கப்பெறும். அதிலும் இரண்டாம் சொட்டு வழங்கப்பட்ட பின்னரே சிறந்த பாதுகாப்பு கிடைக்கும். அது வரைக்கும் இத்தொற்றின் அச்சுறுத்தல் காணப்படவே செய்யும். 

எனினும் இத்தொற்றுக்கு உள்ளாவோரினதும் மரணிப்போரினதும் எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ளது. இதற்கு இத்தடுப்பூசி வழங்கப்படுதல் காரணமல்ல. மாறாக இத்தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் பிரதிபலனாகும். கடந்த நத்தார் மற்றும் புத்தாண்டு கால விடுமுறைகளின் போது சொந்த இடங்களுக்குச்  சென்றவர்கள் ஊடாகப் பரவிய தொற்றே இன்னும் தொடர்கின்றது.

மேலும் உதாரணத்திற்கு குறிப்பிடுவதாயின் ஏற்கனவே இத்தொற்றுக்கு 100 பேர் உள்ளானால் ஒருவர் உயிரிழந்த நிலை காணப்பட்டது. தற்போது 500 பேர் உள்ளானால் 5 பேர் மரணிக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. அவ்வளவு தான்.  அதனால் இத்தொற்றின் ஊடான மரண வீதம் அதிகரிக்கவில்லை.

கேள்வி: - பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் 19 தொற்றின் திரிபடைந்த வைரஸும் தற்போது இங்கும் இனம்காணப்படுகின்றநிலையில் விமான நிலையங்கள் உள்ளிட்ட அனைத்தையும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பில் குறிப்பிடுவதாயின்?

பதில்: - கொவிட் 19 தொற்றின் திரிபடைந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக ஒரு சிலர் இந்நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரிருவரைத் தவிர ஏனையவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கி இருக்கும் போதே இனம்காப்பட்டுள்ளனர். அதனால் நாம் அச்சப்படத் தேவையில்லை. அத்தொற்று பரவுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. என்றாலும் மக்கள் கூடும் விழாக்கள், வைபவங்கள் போன்றவை தொடர்பில் வழங்கப்பட்டிருந்த  தளர்வுகளை மீண்டும் கடுமையாக நடைமுறைப்படுத்த நாம் தீர்மானித்துள்ளோம்.

மேலும் திரிபடைந்த கொவிட் 19 வைரஸ் 70 வீதம் வேகமாகப் பரவக்கூடியது என்பதால்  உலகின் ஏனைய நாடுகளைப் ​போன்று நாமும் பிரித்தானியாவின் விமான சேவையை மறுஅறிவித்தல வரை இடைநிறுத்தினோம்.  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். ஆனால் இந்நாட்டிலும் அவ்வரைஸ் தற்போது பதிவாகியுள்ளது.  அது பிரித்தானியாவிலிருந்து நேரடியாக இங்கு வரவில்லை. வேறு நாடுகளின் ஊடாகவே வந்திருக்க வேண்டும். அதனால் இத்திரிபடைந்த தொற்று தோற்றம் பெற்றதற்காக அந்நாட்டை ஒதுக்கி வைத்து தொற்றைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை.  அதனால் நாமும் பிரித்தானியாவுக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளோம்.

அதேநேரம் கொவிட் 19 தொற்றுக்கும் அதன் திரிபடைந்த வைரஸ் தொற்றுக்கும் ஒரே வித அறிகுறிகள் தான் பெரும்பாலும் வௌிப்படும். அவற்றில் பெரிய வித்தியாசங்களும் இல்லை.

கேள்வி-: கொவிட் 19 தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி திட்டத்தை முன்னெடுக்கப் போதியளவில் தடுப்பூசி கிடைக்கப்பெற்றுள்ளனவா? 

பதில்: - இந்தியா முதலில் 5 இலட்சம் தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. நாம் 90 இலட்சம் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். தடுப்பு மருந்து உற்பத்திக்கு ஏற்ப அவை எமக்குக் கிடைக்கப்பெறும். அந்த வகையில் அவற்றில் ஒரு தொகுதி தடுப்பு மருந்து அடுத்த வாரம் கிடைக்கும்.  

அதேவேளை உலக சுகாதார ஸ்தாபனம் இலவசமாகப் பெற்றுத் தருவதாக ஏற்கனவே உறுதியளித்துள்ள தடுப்பு மருந்தின் ஒரு தொகுதியயும் அடுத்த வாரமளவில்   எமக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

இவ்வாறான நிலையில் கிடைத்துள்ள தடுப்பு மருந்தைக் கொண்டு உச்ச பிரதிபலனைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கொவிட் 19 தொற்றின் அதிக அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளவர்களுக்கும் மேல் மாகாணத்தில் அதிக அச்சுறுத்தல் நிலவும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் இத்தடுப்பூசியை வழங்கத் தீர்மானித்து தற்போது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

கேள்வி: - தற்போதைய சூழலில் நாட்டு மக்களுக்கு நீங்கள் கூற விரும்புவதென்ன?

பதில்: - இத்தடுப்பு மருந்து கொவிட் 19 தொற்றின் அச்சுறுத்தலை அதிகம் எதிர்கொள்பவர்களுக்கும் அவர்கள் வாழும் பிரதேசங்களைச் சேர்நதவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குகின்றோம். என்றாலும் இத்தடுப்பு மருந்து கிடைக்கப்பெறுவதற்கு ஏற்ப கட்டம் கட்டமாக  நாட்டு மக்கள் அனைவருக்கும் பெற்றுக்கொடுப்போம். தடுப்பு மருந்தைப் பெற அச்சமடையத் ​தேவையில்லை. மிகவும் பாதுகாப்பாக வழங்குகின்றோம்.

ஆனால் மக்கள் ஒன்றைத்  தெளிவாகப் புரிந்து செயற்பட வேண்டும். இத்தடுப்பு மருந்து கிடைத்து விட்டது என்பதற்காக இத்தொற்றைத் தவிர்ப்பதற்கான ஏனைய தடுப்பு நடவடக்கைகளைக் கைவிடவோ நிறுத்தவே முடியாது. ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளுக்கு அமைய முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் ​பேணுதல், கைகழுவுதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதாரப் பழக்க வழக்கங்கள் என்பவற்றைத் தொடர்ந்தும் உச்சளவில் பேண வேண்டும். அவை இன்றியமையாவையாகும்.

பேட்டி கண்டவர்
மர்லின் மரிக்கார்

Comments