வடக்கில் தமிழ் பௌத்தம் | தினகரன் வாரமஞ்சரி

வடக்கில் தமிழ் பௌத்தம்

கே: வடக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தொல்லியல் ஆய்வுகள் பற்றி தங்களின் கருத்து என்ன? 

தொல்லியல் வரலாற்று ஆசிரியர் என்ற வகையில் சில உண்மைகளைக் கூற விரும்புகின்றேன். பொதுவாக இலங்கை தொல்லியல் சட்டத்தில் இலங்கையின் அனைத்து பாகங்களிலும் மண்ணுக்குள் மறைந்திருக்கின்ற மண்ணுக்கு வெளியே தெரிகின்ற வரலாற்றுப் பெறுமதியுடைய அனைத்து சின்னங்களும் மரபுச் சின்னங்களாக கருதப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது. அத்தகைய இடங்களில் கண்டறிந்து ஆய்வு செய்து ஆவணப்படுத்தி பாதுகாக்கின்ற பொறுப்பும் அதிகாரமும் தொல்லியல் திணைக்களத்திற்கு உண்டு. இலங்கை பல்லின, பல மத, பண்பாடு கொண்ட ஒரு நாடு. இது ஒரு மல்டி கல்ச்சர் நேஷன்.

ஆகவே அந்த மக்களுடைய பண்பாட்டு அடையாளங்களையும் கண்டறிந்து ஆவணப்படுத்தப்பட வேண்டியது தொல்லியல் திணைக்களத்தின் முக்கிய கடமைகளில் ஒன்று.  

இன்று உலகின் எந்த ஒரு நாடும் தனித்து வளர முடியாத நிலை உருவாகி உள்ளது. அதனால் ஒரு நாட்டுக்குள் பல இன மக்கள் பல இன பண்பாடு கொண்ட மக்கள் வாழ்வதை உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. வரவேற்றும் வருகின்றன.
இலங்கையும் ஒரு பல்லின பண்பாடு கொண்ட நாடு என்ற வகையில் பல இன மக்களுடைய பண்பாடும் இலங்கை பண்பாடு என்ற வட்டத்துக்குள் வருகின்றது. சில ஒருமைத் தன்மை கொண்டிருந்தாலும் ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு மொழி பேசுகின்ற மக்களுக்கும் ஒவ்வொரு மக்களின் மதங்களுக்கும் ஒரு தனித்துவமான அடையாளங்கள் உண்டு. ஆகவே அந்த தனித்துவமான அடையாளங்களை கண்டறிந்து பாதுகாத்து வளர்ப்பதையிட்டு அந்த மக்கள் பெருமையடைகிறார்கள், மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஒரு நாட்டில் பண்டுதொட்டு வாழுகின்ற மக்கள் தங்களுடைய மரபுரிமை அடையாளங்களை நம்பிக்கை நாற்றாக கருதுகின்றார்கள். அதை சிறிதும் பிசகாமல் எதிர்கால சந்ததியிடம் கையளிப்பது அவர்களுக்குரிய ஒரு கடமையாகும் 

ஆகவே இன்று வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற தொல்லியல் ஆய்வு என்பது குறுகிய ஒரு பரப்புக்குள் இல்லாது அந்தப் பிரதேசத்திலே வாழுகின்ற பல்வேறு இனங்களின் பண்பாடுகளையும் கண்டறியும் வகையில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாகும். 

இன்று தொல்லியல் திணைக்களத்தால் வடக்கிலோ கிழக்கிலோ மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வுகள் குறிப்பிட்ட ஒரு மதத்தை மையப்படுத்தி மட்டும் மேற்கொள்ளப்படுகின்றது என்பதையிட்டு மக்களிடையே ஒரு அதிருப்தி நிலை இருப்பதை நான் காண்கின்றேன் ஆனால் இலங்கை என்ற நாட்டில் பல இன மக்கள் மகிழ்ச்சியாக அமைதியாக வாழ்வதற்கு அந்த மக்களுக்கு உரிய மரபுரிமை அடையாளங்கள் அழிக்கப்படாது பாதுகாப்பாக கண்டறிந்து அவற்றை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் தொல்லியல் திணைக்களத்திற்குரியதாகும். 

எதிர்காலத்தில் தொல்லியல் திணைக்களம் மேற்கொள்கின்ற ஆய்வுகளில் அவற்றைக் கருத்தில் கொள்வது இலங்கை மக்களிடையே ஐக்கியத்தையும் சினேகபூர்வத்தையும்  வளர்க்க உதவும் என்பது என்னுடைய கருத்தாகும். 

கே: இந்த தொல்லியல் ஆய்வுகளின் போது துறைசார் தமிழ் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனரா?  

குருந்தூர்மலை அகழ்வாராச்சி ஆரம்ப நிகழ்வு நடைபெறும் வரைக்கும் அந்த இடத்திலே அகழ்வாய்வு நடைபெற இருப்பதாக எங்கள் எவருக்குமே தெரியாது.  

ஆயினும் அந்த ஆய்வு தொடங்கியதன் பின்னர் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுரா மனதுங்க தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுடைய ஆய்வில் என்னையும் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். பேராசிரியர் அநுரா மனதுங்கவுடன் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நட்போடு பழகிய ஒருவர். எங்களுடைய பல்கலைக்கழக தொல்லியல் பாடநெறி சம்பந்தமான உருவாக்கத்தில் அவருக்கு பங்குண்டு. நம்முடைய ஆசிரியர் சிலர் அவருக்கு கீழே முதுகலைமானிப்பட்டம் கற்கையை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அந்த ஒரு நட்பின் அடிப்படையில் அவர் என்னை அழைத்திருந்திருந்தாலும் அந்த ஆய்விலே பங்கெடுக்க கூடிய சூழ்நிலை எனக்கு இருக்கவில்லை. 

முதல் காரணம் என்னுடைய சுகயீனம். இரண்டாவது ஆய்வு செய்யப்படுகின்ற பொழுது எந்த இடத்தில் ஆய்வு செய்யப்படுகின்றது எதுவரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது போன்ற விவரங்களை முன்கூட்டியே கலந்து ஆலோசித்த பின்னர் அவர்களோடு இணைந்து ஆய்வு செய்வதை நாங்கள் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் கருதுகிறோம். 

ஆனால் ஒரு ஆய்வு தொடங்கியதன் பின்னர் ஒருசில தமிழ் அறிஞர்களையும் இணைத்துக் கொள்வது என்பது அவர்களுடைய ஆய்வுகளை நாங்கள் சந்தேகிப்பதாக அவர்கள் கருதுவதற்கும் வழிவகுக்கலாம். அங்கு செல்லுகின்ற எமக்கும் அது ஒரு சங்கடமான நிலையாகவும் இருக்கலாம் என்ற ஒரு கருத்து என்னிடம் உண்டு. இருப்பினும் அந்த ஆய்வு நடைபெறும் இடத்துக்கு செல்வதற்கு நான் தீர்மானித்திருக்கிறேன். முழுமையாக அகழ்வாய்வில் பங்கெடுப்பேன் என்று சொல்ல முடியாது. இருப்பினும் எமது பல்கலைக்கழகத்தில் தொல்லியல் பட்டம் பெற்று இப்பொழுது தொல்லியல் திணைக்களத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் நிரந்தரமான பதவிகளில் இருக்கிறார்கள். அவர்களிடையே நல்ல அனுபவங்கள் உண்டு. ஏனென்றால் அவர்கள் தென்னிலங்கை தொல்லியல் அறிஞர்களோடு ஒரு சில இடங்களிலே அகழ்வாய்வுகள் செய்தவர்கள். அதற்கப்பால் மேற்கத்தேய நாடுகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் அவர்கள் பங்கெடுத்தவர்கள். அதனடிப்படையில் நான் பேராசிரியர் அநுரா மனதுங்க அவர்களிடம் எமது தொல்லியல் திணைக்களத்தில் உள்ள அதிகாரிகளையும் நீங்கள் இணைத்துக் கொள்ளலாம் என்று கேட்டதற்கு இணங்கியதால் தற்போது அங்கு மணிமாறன் என்பவர் அந்த ஆய்வில் பங்கெடுத்துள்ளார். 

அங்கு வேலை செய்கின்ற தமிழ் அதிகாரிகள் மாறி மாறி அந்த இடத்தில் பங்கெடுக்க இருக்கின்றார்கள் ஆயினும் எதிர்காலத்தில் வடகிழக்குப் பகுதியிலும் சரி இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் சரி அகழ்வாய்வுகள் நடக்கின்ற போது அவற்றில் தமிழ் ஆகழ்வாராச்சியாளர்களையும் இணைத்துக் கொள்வதாக பொறுப்பான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அவர்கள் உறுதிமொழி வழங்கியுள்ளார். எனவே பொறுத்திருந்து பார்ப்போம். எதிர்காலத்தில் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளகின்ற அகழ்வாராச்சிகளின் போது தமிழ் அதிகாரிகள், மற்றும் மாணவர்களை இணைத்துக்கொள்வார்களா என்பதைப் பார்ப்போம். 

கே: இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றியும் அதன் தோற்றம், பின்னர் அது எவ்வாறு இல்லாமல் போனது பற்றியும் குறிப்பிடுங்கள்.... 

இலங்கைக்கு பௌத்த மதம் அறிமுகமாகி பரவிய காலத்தில் இருந்தே தமிழர்களும் பௌத்தர்களாக இருந்துள்ளார்கள். பிற்காலத்தில் இந்த பௌத்த மத வரலாறு வளர்ச்சி பற்றி ஆராய்ந்த தென்னிலங்கை அறிஞர்களும் தமிழ் அறிஞர்களும் இலங்கையில் தமிழர்களும் பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டியுள்ளார்கள். 

1968, 1969 காலப்பகுதியில் பேராசிரியர் இந்திரபாலா தமிழ் பௌத்தம் பற்றி தொடராக சில கட்டுரைகள் எழுதியுள்ளார். ஏனைய சிங்கள தமிழ் அறிஞர்களும் தமிழ் பௌத்தர்கள் இருந்தார்கள் என்பதை நிராகரிக்கவில்லை. தொல்லியல் திணைக்களத்தால் வடக்கில் உள்ள பௌத்த ஆலயங்கள் அடையாளப்படுத்தும் போதும் அல்லது அகழ்வாய்வுக்கு உட்படுத்தும் போதும் அது தமிழர்களும் பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதை நினைவு படுத்துகின்ற ஒரு சம்பவமாகத்தான் நான் பார்க்கின்றேன். 

எப்பொழுது வடக்கில் பௌத்த மதம் பரவியது என்பது பற்றி ஒரு தந்த ஒரு கேள்வி கேட்டீர்கள். பொதுவாக ஒரு நாட்டில் தோன்றி வளர்ந்த ஒரு மதம் இன்னொரு நாட்டுக்குப் பரவுகின்ற போது அது குறிப்பிட்ட மொழி பேசிய குறிப்பிட்ட இனத்திற்குரிய மதமாக பரப்பப்படுவது இல்லை. 

வட இந்தியாவில் இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டப்பட்ட பௌத்த மகாநாட்டை தொடர்ந்து அந்த மதத்தை பரப்புகின்ற தூதுக் குழுக்கள் தென் ஆசிய நாடுகளுக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் கிழக்காசிய நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. அந்த நாடுகளில் எல்லாம் பல நூற்றுக்கணக்கான மொழிகளில் இருந்தும் பல நூற்றுக்கணக்கான இனங்களில் இருந்தும் பௌத்ததை கணிசமான மக்கள் பின்பற்றியதற்கு ஆதாரங்களும் உண்டு . கிபி ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் பக்தி இயக்கம் தோன்றுவதற்கு முன்னர் ஒரு செல்வாக்கு உடைய மதமாகவே தமிழ் பௌத்தம் காணப்பட்டது. தமிழக கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் வட இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது போன்ற பௌத்த ஸ்தூபி கண்டுபிடிக்கப்பட்டமைக்கு ஆதாரங்கள் உண்டு. 

ஆகவே பௌத்தம் வட இந்தியாவில் இருந்து ஏனைய நாடுகளுக்கு பரவியது போலவே இலங்கைக்கும் பரவியது. அப்போது இலங்கையில் இருந்த பெருங்கற்கால மக்கள் அல்லது ஆதிகால மக்களில் ஒரு பிரிவினர் அம்மதத்தை ஏற்றுக் கொண்டனர். 

அதை உறுதிப்படுத்தும் வகையில் ஆரம்பகால பௌத்த விகாரைகள் பௌத்தம் சம்பந்தமான கல்வெட்டுக்கள், ஆரம்பகால பௌத்தம் பற்றி கூறும் பாலி இலக்கியங்கள் அடையாளப்படுத்துகின்ற இடங்கள் என்பன பெருங்கற்காலப் பண்பாட்டு மையங்களை அண்டியதாகவே காணப்படுகின்றன. 

ஆகவே இந்த ஆதி இரும்புக் கால மக்களே பௌத்தத்தைப் பின்பற்றினார்கள். அவர்களுள் தமிழர்களும் பக்தர்களாக இருந்தார்கள் என்பதை அந்தப் பண்பாட்டு மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் மற்றும் தமிழ்ச் சாசனங்கள்  உறுதிப்படுத்துகின்றன. 

இத்தகைய பௌத்த மையங்களை அண்டி ஏறத்தாழ ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பிராமி கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த கல்வெட்டுக்களில் தமிழ் மொழிக்கே சிறப்பான எழுத்து வடிவங்களும், தனி மனித தமிழ் பெயர்களும், தமிழ் உறவு முறைகளும், தமிழ் இடப் பெயர்களும் காணப்படுகின்றன அந்த கல்வெட்டுக்கள் பௌத்த குருமாருக்கும் பௌத்த சங்கத்திற்கும் தானம் வழங்கியது பற்றி கூறுகின்றன. தமிழர்கள் பௌதத்தை ஆதரித்தார்கள் என்பதற்கு அந்த கல்வெட்டுக்களே சான்றாக அமைகின்றன. 

குறிப்பாக தென்னிலங்கை வரை ஆட்சி செய்த பரிந்த, குட்ட பரிந்த போன்ற தமிழ் மன்னர்கள் பௌத்தத்துக்கு தொண்டாற்றியதை அறகமம், கதிர்காமம், அனுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன. 

பரிந்த, குட்ட பரிந்த போன்ற மன்னர்கள் பௌதத்திற்கு தொண்டாற்றியதற்காக புத்ததாச, புத்த தேவ போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டதாகவும் அக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இலங்கையின் பௌத்த மத வரலாற்றில் முன்னிலைப்படுத்தி சிறப்பாக அதன் தோற்றம் வளர்ச்சி பற்றிக் கூறும் மகாவம்சத்தில் கூட தமிழர்கள் பௌத்தர்களாக இருந்ததற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக கிறிஸ்தவ சகாப்தத்தின் முதல் 200 ஆண்டுகாலப்பகுதியில் அனுராதபுரத்தை 21 மன்னர்கள் ஆட்சி செய்தார்கள் அதில் 10 தமிழ் மன்னர்கள் 80 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தார்கள். (மிகுதி அடுத்த வாரம்)

நேர்கண்டவர்
மு. தமிழ்ச் செல்வன்

Comments