கட்டாரில் இன்று கோலாகல ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

கட்டாரில் இன்று கோலாகல ஆரம்பம்

44 ஆசிய நாடுகள் பங்கேற்பு

கட்டார் கலீபா விளையாட்டரங்கில் இன்று 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 44ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமர் 700வீர,வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி கடந்த (18) கட்டாரை வந்தடைந்தது. 

இம்முறை நடைபெறுகின்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையிலிருந்து 8வீரர்களும், 7வீராங்கனைகளும் உள்ளடங்கலாக 15பேர் கொண்ட அணியொன்று பங்கேற்கிறது. 

பெண்களுக்கான 800மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய சம்பியனும்,அதேபோட்டியில் ஆசியமெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் நடப்புச் சம்பியனுமான நிமாலி லியானாராச்சி இம்முறை இலங்கை அணிக்கு தலைமை தாங்குகிறார். 

ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரினை இலக்காக்காகக் கொண்டு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட தகுதிகாண் போட்டிகளில் 9வீரர்கள் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கானஅடைவு மட்டத்தினை பூர்த்தி செய்திருந்ததுடன்,மேலும் 6பேர் அந்த அடைவு மட்டத்தினை அண்மித்து இருந்தனர்.  

குறித்த தகுதிகாண் போட்டிகளில் ஆண்களுக்கன 100மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட தெற்காசியாவின் அதிவேக வீரரான ஹிமாஷ ஏஷான்,கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற முதலாவது தகுதிகாண் போட்டியில் புதிய இலங்கை சாதனை படைத்தார். குறித்தபோட்டியை 10.22செக்கன்களில் நிறைவு செய்தஅவர்,மீண்டும் தெற்காசியாவின் அதிவேக வீரராகவும் மாறினார். 

முற்றிலும் குளிரூட்டப்பட்ட கலீபா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 44ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமர் 700வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இறுதியாக 2017ஆம் ஆண்டு இந்தியாவின் புவனேஷ்வரில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 41ஆசிய நாடுகளைச் சேர்ந்த 560வீர,வீராங்கனைகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

அந்த தொடரில் இலங்கை ஒருதங்கம் மற்றும் நான்கு வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தன. இதில் பெண்களுக்கான 800மீற்றரில் நிமாலி லியனாராச்சி தங்கப் பதக்கத்தை வெற்றிகொள்ள, கயன்திகா அபேரத்ன வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதேபோல,பெண்களுக்கான 200மீற்றர் ஓட்டப் போட்டியில் ருமேஷிகா ரத்னாயக்க,பெண்களுக்கான ஈட்டி எறிதலில் தில்ஹானி லேகம்கே மற்றும் ஆண்களுக்கான 4x400அஞ்சலோட்டத்தில் பங்குகொண்ட இலங்கை அணியும் வெள்ளிப் பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டன.   இம்முறைப் போட்டித் தொடரில் நிமாலி லியனாராச்சி மற்றும் கயன்திகா அபேரத்ன ஆகிய இருவரும் மாத்திரமே இலங்கை சார்பாக போட்டியிடுகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

ஆசியமெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் வரலாற்றில் இலங்கை அணி இதுவரை 19தங்கம், 14வெள்ளி மற்றும் 19வெண்கலப் பதக்கம் உள்ளடங்கலாக 52பதக்கங்களை வெற்றிகொண்டுள்ளது.  

22தடவைகள் நடைபெற்றுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களில் அதிக பதக்கங்களை வென்ற நாடுகளில் சீனா (308தங்கம், 206வெள்ளி, 113வெண்கலம்) முதலிடத்தையும், ஜப்பான் (151தங்கம், 191வெள்ளி, 212வெண்கலம்) இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன. இறுதியாக இந்தியாவின் புவனேஷ்வரில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுக் கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

ஆண்கள் அணி விபரம் 

ஹிமாஷ ஏஷான் (100மீற்றர்), சுமேத ரணசிங்க (ஈட்டி எறிதல்), ருசிருசத்துரங்க (800மீற்றர்), தனுஷ்க சந்தருவன் பிரியரத்ன    (நீளம் பாய்தல்), ஜனகபிரசாத் விமலசிறி (நீளம் பாய்தல்),கிரேஷன் தனன்ஞய (முப்பாய்ச்சல்), அஜித் பிரேமகுமார (400மீற்றர்) 

பெண்கள் அணி விபரம் 

நதீசா ராமநாயக்க  (400மீற்றர், 4 x 400அஞ்சலோட்டம்), நிமாலிலியனாரச்சி      (800மீற்றர், 4 x 400அஞ்சலோட்டம்), கயன்திகா அபேரத்ன   (800மீற்றர், 4 x400அஞ்சலோட்டம்), விதூஷா லக்ஷானி (முப் பாய்ச்சல்), நிலானி ரத்னாயக்க (3000மீற்றர் தடைதாண்டல்), டில்ஷி குமாரசிங்க (4 x 400அஞ்சலோட்டம்) உபமாலிகா ரத்னகுமாரி (4 x 400அஞ்சலோட்டம்) 

அதிகாரிகள் விபரம் 

லால் சந்திரகுமார (முகாமையாளர்), ஐராங்கனி ரூபசிங்க (பெண் அதிகாரி), சஜித் ஜயலால் (பயிற்சியாளர்), சமிந்த பெரேரா (பயிற்சியாளர்), சன்க ரணசிங்க (உடற்கூற்றுநிபுணர்), லால் ஏக்கநாயக்க (வைத்தியர்)   

கட்டாரிலிருந்து

பரீத் ஏ.றகுமான்

 

Comments