வன்னிப் பிராந்தியத்துக்கு தனியான பல்கலைக் கழகம் | தினகரன் வாரமஞ்சரி

வன்னிப் பிராந்தியத்துக்கு தனியான பல்கலைக் கழகம்

  • விரைவில் வர்த்தமானி அறிவித்தல்  வவுனியாவில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

இதுவரை காலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கீழ் செயற்பட்டு வந்த வவுனியா வளாகத்தை வன்னி பெருநிலப்பரப்பில் தனியான ஒரு பல்கலைக்கழகமாக மிக விரைவில் தரமுயர்த்துவதாக நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்கான தொழிநுட்ப பிரிவின் புதிய கட்டடத்தையும், அதனுடன் இணைந்த கணனி ஆய்வு கூடத்தையும் (15) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,

இந்த வவுனியா வளாகம் தனியானதொரு பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்பது வன்னிமாவட்ட அரசியல் வாதிகளினதும், பொதுவாக வடமாகாண அரசியல் வாதிகளினதும், கல்விச் சமூகத்தினதும் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இங்கு எனக்கு முன்னர் உரையாற்றிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும், பல்கலைக்கழகத்தின் சார்பில் உரையாற்றியோரும், இந்த வேண்டுகோளை விடுத்தனர். இந்த வளாகத்தை தனியான பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை தயாரிக்குமாறு எனது அமைச்சின் செயலாளருக்கும், மேலதிக செயலாளருக்கும் பணிப்புரை விடுக்கவுள்ளேன். அண்மையில் என்னைச் சந்தித்த யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரும், அதன் கீழுள்ள சில வளாகங்களின் முதல்வர்களும் இந்த வளாகத்தை தரமுயர்த்தவேண்டியதன் தேவையை என்னிடம் கூறினர்.

1991 ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைந்த கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டு, 1997 ஆம் ஆண்டிலிருந்து அதனொரு வளாகமாக இது செயல்பட்டு வருகிறது. இருபத்தேழு (27) வருட காலமாக இவ்வாறு இயங்கி வரும் நிலையில், இதனைத் தனியானதொரு பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவது இதன் அந்தஸ்தை கூட்டுவதோடு, எனது பதவிக் காலத்தில் இதனை நிறைவேற்றக்கிடைப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

மாறுகின்ற அரசியல் சூழலில் எதுவும் நடக்கலாம், கடந்த நான்கு வருடங்களில் நான்காவது உயர்கல்வி அமைச்சராக நான் பதவி வகிக்கிறேன். அமைச்சுப் பதவிகள் இப்பொழுது சங்கீத கதிரைகளாக மாறிவிட்டன. எவ்வாறாயினும் இந்த விடயத்தில் அவசரமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன். வவுனியா வளாகமானது முழுமையான பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும்போது இந்த பொருத்தப்பாடின்மையை நிவர்த்தி செய்யக்கூடிய புதிய பீடங்களை உருவாக்குவது அவசியமாகும். அதன்படி தொழிநுட்ப பீடம் முதலான ஏனைய முக்கிய பீடங்கள் இங்கு உருவாக்கப்படும" என்றார்.

வவுனியா வளாக முதல்வர் கலாநிதி மங்களீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதி தலைவர் பேராசிரியர் குணரத்ன, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசியர் இரத்தினம் விக்னேஸ்வரன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனிபா ஆகியோர் உட்பட பல்கலைக்கழக மாணவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Comments