போதைப் பொருள் கடத்தல் | தினகரன் வாரமஞ்சரி

போதைப் பொருள் கடத்தல்

  • தீவிர எதிர் நடவடிக்கை இல்லையேல் தடுக்கவே முடியாத பரிமாணத்தை அடைந்து விடலாம்!

‘கேரளா, தனுஷ்கோடி, இராமேஸ்வரம், பாகிஸ்தான், தமிழகம் ஆகிய இடங்களில் இருந்தே பெருமளவிலான போதைப் பொருட்கள் மன்னார் தீவுப் பகுதிகளுக்குள் கொண்டுவரப்பட்டு பின்னர் மன்னாருக்கும் தென்பகுதிக்கும் கடத்தப்படுகின்றன’

கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்திற்கு பின்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பூதாகரமாக எழும்பியுள்ள மற்றொரு பிரச்சினை போதைப் பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையே.

வடக்கு- கிழக்கு பகுதிகளின் ஊடாக கடந்த ஐந்து வருடங்களில் பெரியளவில் போதைப் பொருட்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக 'கேரள கஞ்சா' உட்பட மன்னார் கடற்பிராந்தியம் ஊடாக அதிகளவான போதை மாத்திரைகள் ஹெரோயின், கொக்கைன், பீடி இலைகள் என சட்ட விரோதமான பல பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறான கடத்தல்கள் எவ்வாறு மன்னார் மாவட்டத்தின் ஊடாக சாத்தியப்படுகின்றது என நோக்குவோமானால் மன்னார் மாவட்டத்தின் தீவகப் பகுதிகளில் பெரும் நிலப்பரப்பில் உள்ள சில கரையோரப் பகுதிகளில் இருந்தே அனேகமான போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன.

மன்னார் தீவகப் பகுதியானது நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு காணப்படுவதனால் அயல் நாடுகளில் இருந்து நேரடியாக போதைப் பொருட்களை உள்நாட்டிற்குள் கொண்டுவருவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கரையோர கிராமங்களின் ஊடாக இப் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. மன்னாருக்கு கொண்டு வரப்படுகின்ற போதைப்பொருட்கள் பின்னர் தென்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகல் பரவலாகக் காணப்படுகிறது. போதைப் பொருட்களுக்கு அடிமையாவதற்கும், சட்ட விரோதமாக இப் போதை பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட தொழில்களில் ஈடுபடுவதற்கும் காரணமாக அமைகின்றது.

குறித்த கடல் பிராந்தியத்தில் இருந்து அதிகளவிலான போதைப் பொருட்கள் அன்றாடம் கடத்தப்பட்டாலும் அவற்றில் மிகச் சிறிய அளவே பொலிஸார் மற்றும் கடற்படையினரால் கைப்பற்றப் படுகின்றது. மிகுதி போதைப்பொருட்கள் அனைத்தும் விற்பனை முகவர்கள் மூலமாக தென் இலங்கைக்கு கடத்தப்பட்டுவிடுகிறது.

அதிகளவிலான வருமானம் கிடைக்காத தொழிலாளர்களை குறிவைத்து தங்கள் பரிவர்த்தனைகளுக்கும் கடத்தல்களுக்கும் பயன்படுத்தும் முதலாளிகள் தங்களை வெளியில் அடையாளம் காட்டிக் கொள்வதில்லை. மாறாக தங்களின் இடைத்தரகர்களான மூன்றாம் நான்காம் நிலை இடைத்தரகர்கள் மூலமே அனைத்து விதமான உடன்பாடுகள் மற்றும் பண விநியோகம் என்பன மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த போதைப் பொருள் கடத்தல்களின் போது கைது செய்யப்படுபவர்களும் இவ்வாறன ஒரு சில ஆயிரங்களுக்கு வேலை செய்பவர்களும் மூன்றாம் நான்காம் நிலை இடைதரகர்களாகவே இருக்கின்றனர். பெருமளவு போதைப் பொருள் கடத்தல்கள் அதிகாலை நேரங்களிலே இடம் பெறுகின்றன.

அதிகாலை 1 மணி தொடக்கம் 3 மணி வரையான நேரத்தை மையப்படுத்தியே போதைப் பொருட்கள் கரைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஆழமற்ற கடல் பரப்பினூடாக கொண்டு வரப்படுகின்ற போதைப் பொருட்கள் அருகில் உள்ள புதர்கள், பற்றைகள் அல்லது பாதுகாப்பான இடங்களில் பதுக்கப்படுகின்றன.

பதுக்கப்பட்டு ஒரு சில நாட்களின் பின்னரே வியாபாரத்திற்காக வெளியே எடுக்கப்படுகின்றது. இந்தியாவில் இருந்து தலைமன்னார் கடற்பரப்பினூடாக கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி வந்து கடலில் கைமாறுவதற்கு இந்திய மீனவர்கள் சிலரும் உடந்தையாக உள்ளனர். கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளில் இருந்து பெருந்தொகையாக கேரள கஞ்சா பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ள பல்வேறு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இலங்கைக்கான அதிகளவான போதை பொருட்கள் இந்தியாவின் கேரளா, தமிழ்நாடு. தனுஸ்கோடி, இராமேஸ்வரம், போன்ற பகுதிகளில் இருந்தும் பாகிஸ்தானில் இருந்துமே வருகின்றன.

பெரிய அளவிலான போதை வர்த்தகம் பொது கடல் எல்லைகளில் நிற்கும் பெரிய கப்பல்களில் இருந்தே நடைபெறுகின்றது.

ஒரு தொகுதி ஆபத்தான போதைப் பொருளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஒரு வார காலப்பகுதிக்கும் மேல் தேவைப்படுகின்றது.

பெரும்பாலும் ஆபத்தான தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கற்பிட்டி கடற்கரை பிரதேசத்தை அண்டிய கடற்பரப்பில் இருந்து கொண்டு வரப்படுகின்றது.

ஜீ.பி.எஸ் (G.P.S) கருவிகள் மூலம் குறிக்கப்பட்டிருக்கும் கடல் பகுதிக்கு உள்ளூர் முகவர்களில் வேலை ஆட்கள் படகுகள் மூலம் பயணிக்கும் போது அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போதைப் பொருள் கடத்தல் கப்பல்களில் இருந்தே போதை பொருட்கள் இலங்கை போதைப் பொருள் விற்பனை முகவர்களுக்கு கிடைக்கிறது.

மீனவர்கள் போன்று கடலுக்கு சென்று பெறப்படும் போதைப் பொருட்களை கடற்கரை வரை கொண்டு சேர்ப்பதற்கு ஒரு பிரிவினரும், கடல் பகுதியில் இருந்து நகர்ப்பகுதி மற்றும் வர்த்தக முகவர்களிடம் கையளிப்பதற்கு இன்னொரு பகுதியினரும் செயல்படுகின்றனர்.

அவ்வாறு வெற்றிகரமாக போதைப்பொருள் முகவரிடம் கையளிக்கப்படும் பட்சத்தில் சாதாரண போதைப் பொருட்களுக்கு ஐம்பதாயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் ரூபாய் வரையிலும் ஆபத்தான போதைப் பொருளுக்கு நபர் ஒருவருக்கு ஒன்று தொடக்கம் மூன்று இலட்சத்திற்கும் அதிகமாக பணம் கிடைக்கப் பெறுவதினாலே அதிகளவிலான இளைஞர்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறான சட்டவிரோத தொழில்களில் அதிலுள்ள ஆபத்துகளையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டு வருகின்றனர்.

அதைவிட தற்போைதய கைதுகளின் அடிப்படையில் நோக்கும்போது போதைப்பொருள் வர்த்தகர்களுக்குள் காணப்படும் உள்ளக முரண்பாடுகள் காரணமாகவே அதிகளவான போதைப் பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன.

காவல்துறை மற்றும் கடற்படையினருக்கு வழங்கப்படும் இரகசிய தகவலின் அடிப்படையிலே அனேகமான போதைப் பொருள் கடத்தல்கள் முறியடிக்கப்படுகின்றன. போதைப்பொருள் கடத்தல்காரர்களும் கைது செய்யப்படுகின்றனர்.

இதுவரை மன்னார் மாவட்ட கடற்பரப்புக்குள் பல மில்லியன் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள், கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் கஞ்சா, பீடி சுற்றும் இலைகள், ஹெரோயின் போன்றவை பனை மர உச்சியில் இருந்தும், மணலில் புதைக்கப்பட்ட மற்றும் புதர்களுக்குள் மறைக்கப்பட்டு கடத்தல் வாகனங்களில் இருந்தும் நேரடித் தகவல்கள் மூலமும் இரகசிய தகவல்கள் மூலமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறான பல கைதுகள் இடம்பெற்றாலும் போதைப்பொருள் கடத்தல் தற்போதும் குறைவில்லாமல் அதிகளவில் இடம்பெற்று வருகின்றது. போதைப்பொருள் முகவர்கள் ஒரு சிறிய அளவிலான போதைப் பொருள் கடத்தலை இரகசிய தகவல் மூலம் பொலிஸார் மற்றும் காவல்துறையினருக்கு வழங்கிவிட்டு பொலிஸ் கவனத்தை திசை திருப்பி விடுகின்றனர். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வேறு பாதையினூடாக பெரியளவிலான கடத்தலை வெற்றிகரமாக செய்து முடித்து விடுகின்றனர்.

அதே சமயம் 24 மணி நேர கடற்படையின் ரோந்து இடம்பெற்று வருகிறது. இதற்கு மத்தியிலும் கடத்தல்கள் நடைபெற்று வருகின்றன என்றால் கடற்படையின் உதவி இல்லாமல் இப்படியான கடத்தல்கள் இடம்பெற வாய்ப்பில்லை என சில சமூக ஆர்வலர்கள் தெரிவிப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளலாம்.

அதே நேரத்தில் யுத்தகாலத்தில் காணப்பட்டது போன்று சோதனைச் சாவடிகள் காணப்படாததும் இவ்வாறான கடத்தல்கள் அதிகளவில் இடம் பெறுவதற்கு சாதகமாக அமைகின்றது.

தொடர்ச்சியான இவ்வாறான சில சுயநல வர்த்தகர்களாலும் கடத்தல்காரர்களாலும் கடத்தல்கள் இடம் பெறுவதனால் அதிகளவிலான பாரம்பரிய மீனவக் கிராமங்கள் மற்றும் மீனவர்கள் சமூக ரீதியில் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கப்படும் ஆபத்தும் காணப்படுகின்றது.

இவ்வாறான தொடர்சியான கடத்தல்கள் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஆரோக்கியமானதல்ல. கரையோர போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்கான நடைமுறை சாத்தியமான செயற்பாடுகளை மேற்கொள்ளாத விடத்து போதைப்பொருள் வர்த்தகம் நிறுத்தவே முடியாத பூதமாக விஸ்வரூபமெடுத்து விடலாம்.

Comments