செல்வத்தின் செழுமையிலே
செழித்தோங்கும் செல்வந்தரே
உம் செழிப்பான வாழ்வுதனை
நீர் உணர்ந்தால் போதாதா?
நாம் வேறு உணர வேண்டுமா?
பணம் படைத்திட்டால்
பத்தும் செய்திடத் துடிக்கும் தனவான்களே!
நீர் பத்தென்ன பத்தாயிரம் புரியுமைய்யா
தயவு கூர்ந்து ஏழையெம் வாழ்வுதனை
பற்றவைக்காது நடவுமைய்யா
பணம் படைத்த நீர்
பெற்றது பிள்ளை என்றால்
மனம் படைத்த நாம் பெற்றதன்
பெயர் தான் என்னவோ?
இனமென்றும் மதமென்றும்
பிரித்துண்டு வாழ்பவனை, பகிர்ந்துண்டு
வாழ்விப்பது தான் பாடசாலை
அதிலும் நீர் தனித்துவத்தைக் காட்டிடத்
துடிப்பது நியாயமில்லை
தனம் படைத்த நீயோ, புகழ் படைக்கிறாய்
புகழ் படைத்த நீயோ, நீயாகவே உன்
பிள்ளைக்கு புகழாராம் சூட்டுகிறாய்
அப்படி என்றால் திறன் படைத்த என்
பிள்ளையின் கனவுகள் காணல் நீரா?
பணத்தால் படியமைத்து உன் பிள்ளையை
பார் போற்றச் செய்யுமைய்யா
ஆனால் சில்லறையால் சிலை செய்யத்
துடிக்கும் என் பிள்ளையின் சிந்தனைகளை
சிதைக்காது நடவுமைய்யா!