7 பேர் விடுதலை; உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை | தினகரன் வாரமஞ்சரி

7 பேர் விடுதலை; உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சுக்கு அறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக வெளியான தகவலை தமிழக ஆளுநர் மாளிகை மறுத்துள்ளது.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யும் விடயத்தில் தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, 7 பேரையும் விடுதலை

செய்ய தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சுக்கு பன்வாரிலால் புரோகித் அறிக்கை அனுப்பியுள்ளதாகவும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை அடிப்படையாக வைத்து அரசியல் தலைவர்களும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். ஆனால் அறிக்கை அனுப்பியதாக வெளியான தகவலை ஆளுநர் மாளிகை மறுத்துள்ளது.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்ற உத்தரவு மற்றும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரை 14ஆம் திகதியே ஆளுநர் மாளிகைக்கு வந்து சேர்ந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை கேட்டு மத்திய உள்துறைக்கு அறிக்கை எதுவும் அனுப்பப்படவில்லை.

7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டப்படி நியாயமான முடிவு எடுக்கப்படும். இது குறித்து ஆலோசனைகள் நடத்த வேண்டியுள்ளது. தேவைப்படும்போது தேவையான ஆலோசனைகள் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments